மல்லுக்கட்டும் நெல்லை கலெக்டர்! தினகரனை சந்திக்க தெறித்து ஓடிவந்த வைகுண்டராஜன்!
நெல்லை மாவட்ட ஆட்சியரின் அதிரடிகளை எதிர்கொள்ள முடியாமல் டிடிவி தினகரனை சந்திக்க ஓட்டோடி வந்தார் விவி மினரல்ஸ் வைகுண்டராஜன்.
சென்னை: சட்டவிரோதமாக தாது மணல் கொள்ளையில் ஈடுபட்டு வரும் வி.வி. மினரல்ஸ் நிறுவனத்துக்கு எதிராக நெல்லை மாவட்ட ஆட்சியர் எடுக்கும் அதிரடி நடவடிக்கைகளை எதிர்கொள்ள முடியாமல் சசிகலா கோஷ்டியை சேர்ந்த டிடிவி தினகரனை சந்தித்து முறையிட்டிருக்கிறார் வைகுண்டராஜன்.
தமிழகத்தில் தாது மணல் எடுக்க 2013-ம் ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இப்போதும் சட்டவிரோதமாக தாது மணல் எடுக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
தாது மணல் கொள்ளையை தடுக்க தொடர்ச்சியாக அதிகாரிகள் முயற்சிக்கின்றனர். ஆனால் இத்தகைய அதிகாரிகள் மீது அவதூறு பரப்பி நெருக்கடி கொடிப்பதுதான் விவி மினரல்ஸ் நிறுவனத்தின் வாடிக்கை.
அதிரடி ஆட்சியர்
தற்போது நெல்லை மாவட்ட ஆட்சியர் கருணாகரன், விவி மினரல்ஸ் நிறுவனத்துக்கு எதிராக சாட்டையை கையிலெடுத்திருக்கிறார். அண்மையில் திசையன்விளை பேரூராட்சி பகுதியில் உள்ள விவி மினரல்ஸ் தலைமை அலுவலகம் எப்படியெல்லாம் சட்டத்தை மீறி கட்டப்பட்டுள்ளது என்பதை பக்கம் பக்கமாக விளக்கி அவற்றை இடிக்காவிட்டால் நாங்களே இடிப்போம் என பேரூராட்சியின் செயல் அலுவலர் ஒரு எச்சரிக்கை கடிதம் அனுப்பினார்.
அவதூறுகள்
தொடர்ச்சியாக நெல்லை மாவட்ட ஆட்சியர் விவி மினரல்ஸ்-க்கு எதிராக நடவடிக்கை எடுப்பதால் அவருக்கு எதிராக அவதூறு அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது. இதில் பத்திரிகையாளர்களையும் தொடர்ச்சியாக தாது மணல் கொள்ளை கம்பெனியான விவி மினரல்ஸ் விமர்சித்தும் வருகிறது.
நமது எம்ஜிஆரில்...
இந்த நிலையில் அதிமுகவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான டாக்டர் நமது எம்ஜிஆரில் ஒரு புகைப்படம் வெளியாகி உள்ளது. தெஷிண மாறா நாடார் சங்கத்தினர் டிடிவி தினகரனை சந்தித்த அப்புகைப்படத்தில் வைகுண்டராஜனும் இடம்பெற்றுள்ளார்.
வைகுண்டராஜன் பெயர் தவிர்ப்பு
ஜெயா டிவியோ இச்சந்திப்பில் பங்கேற்ற அந்த சங்கத்தின் பல்வேறு பிரதிநிதிகள் பெயரை வாசித்தபோதும் வைகுண்டராஜன் பெயரை சொல்லவில்லை. சசிகலா புஷ்பா போர்க்கொடி தூக்கியபோது அவருக்கு பின்னால் வைகுண்டராஜன் இருப்பதாக கூறப்பட்டது.
சமாதான படலம்
இதற்கு பதிலடியாக வைகுண்டராஜனின் தம்பி குமரேசனை சசிகலா கோஷ்டி களமிறக்கி அசிங்கப்படுத்தியது. ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் சசிகலா கோஷ்டியுடன் வைகுண்டராஜன் சமாதானமாகப் போக சசிகலா புஷ்பா ரொம்பவே சைலண்ட் மோடுக்குப் போய்விட்டார்.
விரைவில் மாற்றம்
தற்போது மாவட்ட ஆட்சியர் படுவேகமாக செயல்படுவதை எதிர்கொள்ள முடியாமல் அவரை மாற்றுவதற்காகவே டிடிவி தினகரனை தலைதெறிக்க ஓடிவந்து சந்தித்துள்ளாராம் வைகுண்டராஜன் என்கிறது அதிமுக வட்டாரங்கள். அனேகமாக நெல்லை மாவட்ட ஆட்சியர் விரைவில் மாற்றம் என்ற செய்தி வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!