வர்தா பாதிப்பு.. தி.நகர், அண்ணாநகர், திருமங்கலத்தில் பாதிப்புகள் பற்றி மத்தியக் குழு ஆய்வு
வர்தா புயல் பாதிப்பு குறித்த ஆய்வை மத்தியக் குழு சென்னையில் நேற்று நடத்தியது. தி.நகர், அண்ணாநகர், திருமங்கலத்தில் மத்தியக் குழு ஆய்வை நடத்தி முடித்துள்ளது.
சென்னை: டெல்லியில் இருந்து பிரவீன் வசிஷ்டா தலைமையில் தமிழகம் வந்திருக்கும் மத்தியக் குழு வர்தா புயல் பாதிப்புகளை சென்னையில் பார்வையிட்டு வருகிறது. தியாகராயர் நகர், அண்ணாநகர், திருமங்கலத்தில் ஆய்வை மேற்கொண்டது மத்தியக் குழு.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களை வர்தா புயல் தாக்கியது. இதில் லட்சக்கணக்கான மரங்கள் வேரோடு விழுந்தன. மின்கம்பங்கள், மின்மாற்றிங்கள் அடியோடு சாய்ந்தன. குடிசைகள், கூரைகள் பிய்த்து எரியப்பட்டன. ஒரு வாரத்திற்கும் மேலாக இந்த மூன்று மாவட்டங்களிலும் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த பாதிப்புகளை ஆய்வு செய்து கணக்கெடுக்க மத்திய குழு ஒன்று பிரவீன் வசிஷ்டா தலைமையில் சென்னை வந்துள்ளது. இந்தக் குழு நேற்று காலை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை சந்தித்து ஆலோசனை நடத்தியது. காலை 10.15 மணி முதல் 10.45 மணி வரை இந்த சந்திப்பு நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, தமிழக அரசு உயர் அதிகாரிகளுடன் மத்தியக் குழுவினர் 11.40மணி வரை ஆலோசனை நடத்தினர்.
பின்னர் தியாகராயர் நகரில் உள்ள பனகல் பார்க் பகுதியை பார்வையிட்ட மத்தியக் குழுவினர், அங்கிருந்து அண்ணாநகர் சென்றனர். அங்கு அண்ணாநகர் வளைவு அருகே சேதமடைந்த சிக்னல் கம்பங்கள், திருமங்கலத்தில் மரக்கிளைகள் குவித்து வைக்கப்பட்டுள்ள கிடங்கு ஆகியவற்றை ஆய்வு செய்தனர்.
பின்னர் வண்டலூர் மிருககாட்சி சாலை. கிண்டி சிறுவர் பூங்கா, பழவேற்காடு மீனவர் குடியிருப்பு பகுதிகளை இரண்டு குழுக்களாக சென்று பார்வையிட்டனர். அதன்பின், தாஜ் கிளப் ஹவுசில் தங்கினர். மத்தியக் குழுவினர் மீண்டும் இன்று காலை 9 மணிக்கு புறப்பட்டு, முதலில் ராயபுரத்துக்கு செல்கின்றனர். அங்கு புயலால் பாதிக்கப்பட்ட மீன்வள உட்கட்டமைப்புகளை பார்வையிடுகின்றனர்.
தொடர்ந்து, திருவள்ளூர் மாவட்டத்திற்கு மத்தியக் குழு செல்ல உள்ளது. அங்கு கல்லுகடைமேடு, வெள்ளோடையில் சேதமடைந்த குடிசைகள், சின்னம்பேட்டில் பாதிக்கப்பட்டுள்ள வாழை, மா போன்ற தோட்டக்கலை பயிர்களையும் மத்திய குழு ஆய்வு செய்கிறது. அத்துடன் பயணத்தை முடித்து கொண்டு தலைமைச் செயலகத்துக்கு வருகின்றனர். தலைமைச் செயலகத்தில் மாலை 5.30 மணிக்கு தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனை சந்தித்து பேசுகின்றனர். அதன்பின் டெல்லிக்கு மத்தியக் குழு புறப்பட்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஆய்வுகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட அறிக்கையை மத்திய அரசிடம் மத்தியக் குழு அளிக்கும்.