அமாவாசைக்காவது "அம்மா" வாசனுக்கு நல்ல சேதியைத் தருவாங்களா?
சென்னை: அமாவாசை தினமான நாளை அதிமுகவோடு, கூட்டணி வைப்பது தொடர்பாக தமாகா கட்சித் தலைவர் வாசன், ஜெயலலிதாவை சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அடுத்தமாதம் தமிழக சட்டசபைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. அனைத்துக் கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தைகளை எல்லாம் முடித்து, வேட்பாளர் பட்டியல், தேர்தல் அறிக்கை தயாரிப்பு என அடுத்தகட்ட வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டிருக்க, இன்னும் கூட்டணி குறித்தே தெளிவாக எதையும் கூறாமல் இழுத்தடித்து வருகிறது தமாகா.
திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி சேர்ந்துள்ள நிலையில், எப்படியும் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் களமிறங்க வேண்டும் என்பது தான் தமாகாவின் திட்டம் எனக் கூறப்படுகிறது.
ஆனால், கூட்டணி தொடர்பாக இன்று ஜெயலலிதாவை வாசன் சந்திக்கிறார், நாளை சந்திக்கிறார் என நாட்கள் தான் உருண்டோடிக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு செய்தியாளர் சந்திப்பிலும் விரைவில் கூட்டணி குறித்த அறிவிப்பு என மறக்காமல் கூறிக் கொண்டு தான் இருக்கிறார் வாசனும். ஆனால், அந்த நாள் தான் இன்னும் விடியவில்லை.
இந்த சூழ்நிலையில் தான் அமாவாசை தினமான நாளை வாசனை சந்திக்க ஜெயலலிதா சம்மதம் தெரிவித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே, 234 தொகுதிகளுக்கும் ஜெயலலிதா வேட்பாளர்களை அறிவித்து விட்டார். ஆனால், வேட்பாளர்களை மாற்றுவது ஒன்றும் அதிமுக வரலாற்றில் புதிதில்லை. இதனால், இந்த சந்திப்பில் அதிமுக - தமாகா கூட்டணி உடன்பாடு ஏற்பட்டு, அக்கட்சிக்கு சில சீட்டுகள் ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே, கடந்த 2001ம் ஆண்டு காங்கிரஸ், த.மா.கா கூட்டணியை உறுதி செய்தும், முன்கூட்டியே வேட்பாளர்களை அறிவித்தார் ஜெயலலிதா. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பார்வையாளர்களை சந்திக்கவும் அவர் மறுத்து விட்டார்.
பின்னர் 47 இடங்கள் என முடிவு செய்து, மூப்பனாரிடம் தான் சீட்டுகளைக் கொடுத்தார் ஜெயலலிதா. அந்த தேர்தலில் அதிமுக வென்றது.
இதேபோல், கடந்த 2011-ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலும் தேமுதிகவிற்கு இடங்களை ஒதுக்கீடு செய்வதற்கு முன்பே அனைத்து தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்தார் ஜெயலலிதா. பின்னர், தேமுதிகவுக்கு 43 தொகுதிகளைக் கொடுத்தார். அந்தத் தேர்தலிலும் அதிமுக பெரும் வெற்றி பெற்றது.
எனவே, இந்தத் தேர்தலிலும் இந்த செண்டிமெண்ட் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, முதலில் வேட்பாளர் பட்டியலை அறிவித்துவிட்டு, பின்னர் தமாகாவுடன் கூட்டணி குறித்து அறிவிப்பார் ஜெயலலிதா என தமாகா வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, நாளைய சந்திப்பிற்குப் பின் தமாகாவிற்கு 15 இடங்களை அதிமுக ஒதுக்கும் எனக் கூறப்படுகிறது.