வாசனை காட்டி காங்கிரசை வழிக்கு கொண்டுவந்த திமுக.. சிங்கிள் டிஜிட் வார்டு ஒதுக்கீட்டின் பரபர பின்னணி
சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட உள்ள திமுக தனது முதலாவது வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிட்டது.
திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்குக்கான இடங்களும் அந்த பட்டியலில் அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டசபை தேர்தலின்போதே கூட்டணியில் இருந்த இக்கட்சிகளுக்கு, ஏனோ இம்முறை குறைந்த இடங்களே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
தூத்துக்குடி, சேலம், திருச்சி ஆகிய மூன்று தொகுதிகளிலுமே சிங்கிள் டிஜிட்டில்தான் காங்கிரசுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. திமுகவுடன் எந்த கட்சியும் கூட்டணி சேர தயங்கியபோதும், சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சிதான் கூட்டணிக்கு வந்தது.
அள்ளிக்கொடுத்த திமுக
இதனால், 41 தொகுதிகளை காங்கிரஸ் கூட்டணிக்கு அள்ளிக்கொடுத்தது திமுக. ஆனால், வெறும் 8ல் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற முடிந்தது. அதுவும் அக்கட்சி பலமாக இருந்துவரும் குமரி மாவட்டத்தில்தான் அதிக ஆதரவு கிடைத்தது. திமுக கூட்டணி ஆட்சியை பிடிக்க முடியாமல் போனதற்கு காங்கிரஸ் போட்டியிட்ட தொகுதிகளின் தோல்விதான் காரணம் என்ற வருத்தம் திமுக முக்கிய பிரமுகர்களுக்கு உள்ளது.
காங்கிரசை கழற்ற திட்டம்
எனவே உள்ளாட்சி தேர்தலில் கடந்த 2011-ம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலில் எப்படி காங்கிரசை கழற்றிவிட்டதோ அதேபோல கழற்றிவிட்டு தேர்தலை சந்திக்கலாம் என்று திமுக திட்டமிட்டிருந்தது. ஆனால் தேசிய கட்சிகளில் ஒன்றான பாஜக, அதிமுகவோடு நெருக்கம் காட்டும் நிலையில், நமக்கு காங்கிரஸ் தயவு தேவை என்பதை உணர்ந்துள்ள திமுக, கூட்டணிக்கு ஒப்புக்கொண்டது.
நெருக்கடி கொடுத்த காங்கிரஸ்
ஆனால், காங்கிரஸோ, அதிகப்படியான வார்டுகள் தங்களுக்கு வேண்டும் என்று நெருக்கடி கொடுக்க ஆரம்பித்தது. எப்படியும் இம்முறையும், திமுகவோடு பிற கட்சிகள் இணைந்து போட்டியிட போவதில்லை என்பதை உணர்ந்து அதை சொல்லி நெருக்கடி கொடுத்துள்ளது காங்கிரஸ். அப்போது திமுக தலைமைக்கு நினைவுக்குவந்தவர்தான் ஜி.கே.வாசன்.
சிக்கிய ஜி.கே.வாசன்
திமுக பொருளாளர் ஸ்டாலினுடன், தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனை சந்திக்க வைத்து காங்கிரசுக்கு கிலியூட்டியது திமுக. அவ்வளவுதான், அடுத்த சில மணி நேரத்திலேயே ஓடிப்போய் கருணாநிதியை சந்தித்தார் காங். தலைவர் திருநாவுக்கரசு. முடிந்தது பேரம். படித்தது காங்கிரஸ். இதோ நினைத்தபடியே கொஞ்சூண்டு இடங்களை தள்ளிவிட்டு காரியம் சாதித்துவிட்டது திமுக. வரும்.. ஆனா, வராது.. டயலாக் பாணியில், கூட்டணியில் இருந்தாலும், இல்லை என்பது போன்ற நிலை காங்கிரசுக்கு. மதசார்பற்ற கட்சி என்பதை நிரூபிக்க இந்திய முஸ்லிம் லீக் யூனியனுக்கும் ஒரு சில வார்டுகளை ஒதுக்கி கடமையை முடித்துக்கொண்டுள்ளது திமுக.
காங்கிரசுக்கு தர்ம சங்கடம்
தர்ம சங்கடத்தில் சிக்கியுள்ள காங்கிரஸ் அடுத்த பட்டியலிலாவது அதிக வார்டுகளை திமுக ஒதுக்குமா என காத்திருக்கிறது. ஆனால், இஷ்டமிருந்தால், இருங்கள், கஷ்டமானால் திமுக கூட்டணியிலிருந்து வெளியேறலாம்.. என்ற பாணியில் திமுக தலைமை செயல்பட ஆரம்பித்துவிட்டதால் நெளிகிறது காங்கிரஸ்.