ராயப்பேட்டை அரசு மருத்துவமனை முன் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
சென்னை: ராம்குமார் மரணத்தில் சந்தேகம் உள்ளது எனக்கூறி ராயப்பேட்டை அரசு மருத்துவமனை முன் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தலித்துகளுக்கு நியாயம் கிடைப்பதில்லை. இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்ற பலகோரிக்கைகளை அவர்கள் முன்வைத்தனர்.
சென்னை சூளைமேடு பகுதியைச் சேர்ந்த மென்பொறியாளர் சுவாதி, கடந்த ஜூன் 24ம் தேதி காலை 6.45 மணி அளவில் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் படுகொலை செய்யப்பட்டார்.

இதனையடுத்து 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை முடுக்கிவிடப்பட்டது. கொலை நடந்து சரியாக 7 நாட்களுக்குப் பிறகு, திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை அருகேயுள்ள மீனாட்சி புரத்தைச் சேர்ந்த ராம்குமார் கடந்த ஜூலை 1ம் தேதி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள ஒரு வீட்டின் சிசிடிவி கேமரா காட்சிப்பதிவின் அடிப்படையில் அவரை கைது செய்த போலீசார், ராம்குமார்தான் சுவாதியைக் கொலை செய்தவர் என ஜூலை 2ம் தேதி செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.
கைது செய்யப்படும்போது ராம்குமார் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றதாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராம்குமார், சிகிச்சை முடிந்து கடந்த ஜூலை 5ம் தேதி புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், நேற்று அவர் சிறையில் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராம்குமாரின் மரணத்திற்கு போலீசாரே காரணம் என்று கூறி ராம்குமாரின் உறவினர்களும், தந்தை பெரியார் தி.கவினரும் மருத்துவமனை முன்பு போராட்டத்தில் குதித்தனர். அவர்கள் சாலையை மறித்து அமர்ந்து போராடியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீஸார் அவர்களை சமாதானப்படுத்திய பின்னர் அனைவரும் எழுந்து சென்றனர்.
ராயப்பேட்டை மருத்துவமனை வளாகம் தொடர்ந்து பதற்றமாகவே காணப்பட்டது. இதனையடுத்து பெருமளவில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் நேற்றிரவு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திடீர் மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், ராம்குமார் தற்கொலை தொடர்பாக போலீசார் கூறும் காரணங்கள் நம்பும்படியாக இல்லை. ராம்குமார் தற்கொலை செய்து கொள்வதற்கான வாய்ப்பு இல்லை, அதனால் இது குறித்து விரிவான விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தினர்.
தலித்துகளுக்கு நியாயம் கிடைப்பதில்லை. இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்ற பலகோரிக்கைகளை முன்வைத்து, ராம்குமார் உடல் வைக்கப்பட்டுள்ள ராயப்பேட்டை ராயப்பேட்டை அரசு மருத்துவமனை முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களோடு வழக்கறிஞர்கள் மற்றும் மேலும் சில அமைப்புகள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றம் ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications