பாமக- வுக்கு தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு!
சென்னை உயர் நீதி மன்றத்தில் , விடுதலை சிறுத்தை கட்சியின் கொள்கை பரப்பு துணை பொதுச் செயலாளர் பாலாஜி தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது
பாட்டாளி மக்கள் கட்சியி வரவிருக்கும் நாடாளுமன்ற தொகுதிக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது.அதில், ஆரணி, சேலம், கிருஷ்ணகிரி, அரக்கோணம், புதுச்சேரி, விழுப்புரம் , மாயவரம் ஆகிய 7 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அக் கட்சி அறிவித்துள்ளது.
இந்த வேட்பாளர்கள் தொகுதியில் பிரச்சாரம் செய்து வருகின்றனர். நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு இக் கட்சி வேட்பாளர்கள் மேற்கண்ட தொகுதிகளில் பணத்தை செலவழிக்கின்றனர்.
நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் அறிவிக்காத நிலையில், இக் கட்சியினர் பிரச்சாரம் செய்து வருவது சட்ட விரோதமானது. தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிரானது. இந்த நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் அதிகாரிகளை தேர்தல் ஆணையம் நியமிக்கவில்லை.
மேலும், இது போன்ற செயல்கள் மூலம் சாதி மோதல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட கூடும். எனவே பாமகவால் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களை மேற்கண்ட தொகுதிகளில் பிரச்சாரம் செய்ய தடை விதிக்க போலீஸ் டிஜிபி தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும்.
தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பாக வேட்பாளர்களை அறிவித்த பாமக நிறுவனர் மற்றும் அக் கட்சிய வேட்பாளர்கள மீது தகுந்த நடவடிக்கை எடுக்க மாறு தலைமை தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடவேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை தலைமை நீதிபதி ஆர்.கே. அகர்வால், நீதிபதி சத்தியநாராயணன் ஆகியோர் கொண்ட டிவிஷன் பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் உள்துறை செயலாளரையும் பிரதிவாதியாக சேர்க்க உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.