ஜல்லிக்கட்டு வழக்கு.. சுப்ரீம் கோர்ட்டில் வேல்முருகன் கேவியட் மனு
ஜல்லிக்கட்டு விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.
சென்னை: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் உள்ளது. இதனால் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. மாணவர்களின் எழுச்சிப் போராட்டத்தின் விளைவாக தமிழக அரசு சட்டம் இயற்றி ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கியுள்ளது.
என்றாலும், ஜல்லிக்கட்டுக்கு எதிராக பீட்டா மல்லுக்கட்டிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், ஜல்லிக்கட்டு விவகாரத்தில் அண்மையில் தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் கேவியட் மனுத்தாக்கல் செய்திருந்தது. சட்டத்துக்கு எதிரான மனுக்களை தங்களை கேட்காமல் விசாரிக்கக் கூடாது என்று தமிழக அரசின் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் சார்பில் அக்கட்சியின் வழக்கறிஞர் காந்திகுமார் சுப்ரீம் கோர்ட்டில் ஜல்லிக்கட்டுக்கு எதிராக பீட்டா அமைப்பு சார்பில் போடப்பட்டிருக்கும் வழக்கில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஜல்லிக்கட்டு வழக்கில் தீர்ப்பு வழங்கப்படுவதற்கு முன்னர் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கருத்தும் கேட்கப்படும்.
ஜல்லிக்கட்டு சட்டம் தொடர்பாக ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் 80க்கும் மேற்பட்ட கேவியட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.