ஓங்கி அறைந்ததில் காது கேட்கவில்லை.. வெறித்தாக்குதல் நடத்திய போலீசை டிஸ்மிஸ் செய்.. ஈஸ்வரி ஆவேசம்
மதுவிற்கு எதிராக போராட்டம் நடத்திய பெண்ணை கன்னத்தில் அறைந்த ஏடிஎஸ்பி பாண்டியராஜனை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று தாக்குதலில் பாதிக்கப்பட்ட ஈஸ்வரி கோரியுள்ளார்.
திருப்பூர்: திருப்பூர் சாமளாபுரத்தில் பொதுமக்கள் டாஸ்மாக் கடைகளை திறக்கக் கூடாது என்று திருப்பூர் சாமளாபுரத்தில் பொதுமக்கள் தொடர்ந்து 7 மணி நேரம் போராட்டத்தை நடத்தினார்கள்.
இதில் பெண்கள் அதிக அளவில் கலந்து கொண்டு எதிர்ப்பினை தெரிவித்தனர். போராட்டத்தை கலைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் போலீசார் தடியடியில் ஈடுபட்டனர்.
இதில் ஏடிஎஸ்பி பாண்டியராஜன் பெண் ஒருவரை கன்னத்தில் ஓங்கி அறைந்த வீடியோ தொலைக்காட்சிகளில் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
ஐயம்பாளையம் ஈஸ்வரி
தாக்குதலுக்குள்ளான பெண் ஐயம்பாளையத்தைச் சேர்ந்த ஈஸ்வரி என்று பின்னர் தெரிய வந்தது. இந்த தாக்குதல் குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
காது கேட்கவில்லை
மதுக்கடைக்கு எதிராக கிட்டத்தட்ட 6 மணி நேரம் போராட்டம் நடத்தினோம். அதன் பிறகு போலீசார் தடியடி நடத்தினார்கள். என் மீது ஏடிஎஸ்பி பாண்டியராஜன் நடத்திய தாக்குதலில் காது கேட்கவில்லை.
பரிசோதனை
கால் வலி அதிகமாக உள்ளது. இரெவெல்லாம் தூங்க முடியவில்லை. இரவே மருத்துவமனை சென்றோம். ஸ்கேன் செய்ய சொல்லி இருக்கிறார்கள். இன்று மாலை மருத்துவமனைக்கு சென்று ஸ்கேன் செய்ய உள்ளேன். ஓங்கி அடித்ததால் காது ரொம்ப வலிக்கிறது.
பணி நீக்கம் செய்
இவ்வளவு கொடுமைகளைச் செய்த பாண்டியராஜனை வேலை நீக்கம் செய்ய வேண்டும். மதுகடையையும் மூட வேண்டும். இங்கு மதுக்கடையால் நிறைய விபத்துக்கள் நடக்கிறது. நாங்கள் நிறைய நாட்கள் அமைதியாக இருந்துவிட்டோம். ஆனால் இனி அப்படி இருக்க மாட்டோம்.
துரத்தி துரத்தி தாக்குதல்
இவ்வளவு பேர் இருக்கும் போது என்னை மட்டும் குறித்து வைத்து போலீஸ் அதிகாரி தாக்கியுள்ளார். என்ன காரணம் என்று எனக்கு தெரியவில்லை. எங்களை லத்தியால் அவர் அடித்தார். வலி தாங்க முடியாமல் தடியை பிடித்தேன். உடனே கையால் சப்பென்று பாண்டியராஜன் அறைந்துவிட்டார்.
என்ன செய்ய..
அவர் ஆம்பளை என்பதால் என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. பெரிய அதிகாரி என்று அமைதியாக இருந்தாலும், திரும்ப திரும்ப வந்து அடித்தார். பின்னர், என்னை பிடித்து இழுத்து போலீசார் தள்ளிவிட்டார்கள். நாங்கள் பெண்கள் என்ன செய்ய முடியும் என்று ஈஸ்வரி கூறினார்.