சசிகலா ஆட்சியமைக்க அழைக்க முடியாது என அறிக்கை அனுப்பியதாக வெளியான தகவல் தவறு- ஆளுநர்
சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பு நிலுவையில் இருப்பதாலும், அதிமுக எம்.எல்.ஏக்கள் சிறை வைக்கப்பட்டிருப்பதாக புகார் வந்துள்ளதாலும், தற்போதைய சூழலில் சசிகலாவை ஆட்சி அமைக்க அழைக்க முடியாது என தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் உள்துறை அமைச்சகத்துக்கு அறிக்கை அனுப்பியதாக வந்த செய்தியை ஆளுநர் மாளிகை மறுத்துள்ளது.
தமிழகத்தில் ஆளும் அதிமுக இரண்டாக பிளவுபட்டுள்ளது. இந்த நிலையில் பொறுப்பு ஆளுநர் வித்யாசகர் ராவை நேற்று முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அதிமுக இடைக்கால பொதுச்செயலர் சசிகலா ஆகியோர் சந்தித்து பேசினர்.
இச்சந்திப்பின் போது சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வாய்ப்பு அளிக்க வேண்டும் என முதல்வர் ஓபிஎஸ் வலியுறுத்தினார். சசிகலாவோ அதிமுக எம்.எல்.ஏக்கள் ஆதரவு தமக்கே இருக்கிறது என ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.
இந்த நிலையில், தமிழக நிலவரம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசகர் ராவ் இன்று 3 பக்க அறிக்கை ஒன்றை அனுப்பியதாக செய்தி வெளியானது. அனைத்து ஊடகங்களும் இதை வெளியிட்டன.
அந்த அறிக்கையில், தமிழக அரசில் சூழல் குறித்து கூறப்பட்டுள்ளது. அதில் முக்கியமாக அதிமுக எம்.எல்.ஏக்கள் சிறை வைக்கப்பட்டிருப்பதாக புகார் வந்துள்ளது. இதுகுறித்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளேன். சசிகலா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு நிலுவையில் உள்ளது. விரைவில் வெளியாகவுள்ளது. இந்த சூழ்நிலையில் சசிகலாவை ஆட்சியமைக்க முடியாத நிலை உள்ளது என்று ஆளுநர் கூறியிருந்ததாக தகவல்கள் வெளியாகின.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை இல்லை என்றும் தனது அறிக்கையில் ஆளுநர் குறிப்பிட்டுள்ளதாகவும் கூறப்பட்டிருந்தது. ஆனால் தற்போது அந்த செய்தி தவறு என்று ஆளுநர் மாளிகை மறுப்பு தெரிவித்துள்ளது.