திட்டம் போட்டு கேள்வியை மாற்றிக் கேட்டு தொண்டர்களை குழப்பிய விஜயகாந்த்!!
காஞ்சிபுரம்: கூட்டணி வேண்டுமா? வேண்டாமா? என்று தொண்டர்களிடம் வழக்கமாக கேட்கும் விஜயகாந்த், இம்முறை 'கிங்' ஆக இருக்க வேண்டுமா? கிங் மேக்கராக இருக்க வேண்டுமா? என்று கேட்டு தொண்டர்களை மட்டுமல்லாது கூட்டணிக்கு வருவார் என்று அவரை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் அரசியல் கட்சியினரையும் குழப்பினார்.
2005ல் தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்தை ஆரம்பித்த விஜயகாந்த், 2006ல் நடந்த சட்டசபை தேர்தல், 2009ல் நடைபெற்ற லோக்சபா தேர்தல்களில் மக்களுடன் கூட்டணி, தெய்வத்துடன் கூட்டணி என்று தனித்து போட்டியிட்டார். குறிப்பிடத்தகுந்த அளவிற்கு வாக்குகளைப் பெற்றனர் தேமுதிக வேட்பாளர்கள்.
இதனால் விஜயகாந்துக்கு டிமாண்ட் அதிகரித்தது. 2011 சட்டசபை தேர்தலில் அதிமுக உடன் கூட்டணி அமைத்து வெற்றி பெற்று எதிர்கட்சித்தலைவராக சட்டசபையில் அமர்ந்தார். 2014 லோக்சபா தேர்தலில் பாஜக உடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட நிலையிலும் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.
இந்த நிலையில், 2016 சட்டசபை தேர்தலில் தேமுதிகவை கூட்டணிக்கு வருமாறு திமுக, பாஜக, மக்கள் நலக்கூட்டணி கட்சிகள் அழைப்பு விடுத்து வருகின்றன. கூட்டணி பற்றிய தன்னுடைய முடிவை காஞ்சிபுரத்தில் அறிவிப்பார் என்று அவரது மனைவியும், தேமுதிக மகளிரணி தலைவியுமான பிரேமலதாவும் தெரிவித்து வந்தார்.
இதனால் தேமுதிகவின் அரசியல் திருப்புமுனை மாநாட்டிற்கு தேமுதிக தொண்டர்கள் மத்தியிலும், அரசியல் கட்சியினரிடையேயும் எதிர்பார்ப்பு அதிகரித்தது.
ஆனால் ஆரம்பம் முதலே ஆளும் கட்சியான அதிமுகவை விமர்சித்த விஜயகாந்த், அமைச்சர் நத்தம் விஸ்வநாதனை.... ஏண்டா என்று ஏகவசனத்தில் பேசினார். ஓ.பன்னீர் செல்வத்தை ஜீரோ பன்னீர் செல்வம் என்றும் கூறினார். ஆனால் கடைசி வரைக்கும் திமுகவை பற்றி விமர்சிக்கவேயில்லை.
கூட்டணி பற்றி என்னதான் சொல்வார் விஜயகாந்த் என்று செய்தியாளர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்க, பிரேமலதா கேட்ட கேள்வியையே விஜயகாந்தும் கேட்டார்.
நீங்களே சொல்லுங்க... நான் 'கிங்' ஆக இருக்க வேண்டுமா? 'கிங் மேக்கராக' இருக்க வேண்டுமா? என்று கேட்டார் உடனே தொண்டர்கள் 'கிங்' என்று கூற, கிங் ஆக இருக்கவேண்டும் என்று தொண்டர்களே சொல்லிவிட்டீர்கள். நான் கிங் ஆக இருந்தால் தொண்டர்களும் கிங் ஆக இருப்பீர்கள் என்று கூறினார்.
வழக்கமாக கூட்டணி வேண்டுமா? வேண்டாமா என்று தனது முந்தைய மாநாடுகளில் கேட்டார் விஜயகாந்த். அப்படிக் கேட்டு ஆமாம் கூட்டணி வேண்டும் என்று தொண்டர்கள் பதில் சென்னால், யாருடன் கூட்டணி என்ற அடுத்த கேள்விக்கும் பதில் சொல்ல வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும்.
அதைத் தவிர்ப்பதற்காக இன்றைய மாநாட்டில், 'கிங்' 'கிங் மேக்கர்' என்று கேட்டு தொண்டர்களையே குழப்பி விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.
எந்த ஒரு தொண்டரும் தனது தலைவர் கிங் ஆக இருக்க வேண்டும் என்றுதானே விரும்புவார்கள். கிங் மேக்கராக இருங்கள் என்றா சொல்லப் போகிறார்கள். ஆக, கேள்வியையே மாற்றிப் போட்டார்.
விஜயகாந்த் ஏன் இப்படி கேள்வியை மாற்றிகேட்டு குழப்பினார் என்பது அவருக்கும், பிரேமலதாவிற்கும் மட்டுமே தெரிந்த ரகசியம்.