சிங்கப்பூருக்குப் பறக்கிறார் விஜயகாந்த்.. இன்று இரவு... ஏன்??
சென்னை: தேமுதிகவை கூட்டணிக்குள் இழுக்க முக்கியக் கட்சிகள் தாறுமாறாக தவித்துக் கொண்டுள்ள நிலையில், அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் இன்று இரவு தனது மனைவி பிரேமலதாவுடன் சிங்கப்பூர் செல்லப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிகிச்சை பெறுவதற்காக விஜயகாந்த்தை சிங்கப்பூர் அழைத்துச் செல்வதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் அவரது உடல் நலப் பிரச்சினை குறித்த விவரம் தெரியவில்லை.
இது அரசியல் பயணம் அல்ல என்றும், முற்றிலும் தனிப்பட்ட முறையில் சிகிச்சைக்காக மட்டுமே விஜயகாந்த் செல்வதாகவும் கூறப்படுகிறது.

இப்படித்தான் மலேசியா போயிருந்தார்
இப்படித்தான் சில மாதங்களுக்கு முன்பு மலேசியா போயிருந்தார் விஜயகாந்த். ஆனால் அங்கு வைத்து அவரை தமுமுக பிரமுகர்கள் சந்தித்துப் பேசினர். அப்போது பாஜகவுடன் கூட்டணி சேராதீர்கள் என்று அவர்கள் விஜயகாந்த்துக்கு அன்பு வேண்டுகோள் வைத்தனர். அதை நிச்சயம் பரிசீலிப்பதாக கூறியிருந்தார் விஜயகாந்த்.

உளுந்தூர்ப்பேட்டையில் ஒரு மாநாடு
அதன் பின்னர் ஊர் திரும்பிய அவர் உளுந்தூர்ப்பேட்டை மாநாட்டில் கலந்து கொண்டார். ஆனால் உருப்படியான எந்த முடிவையும் அவர் அங்கு அறிவிக்கவில்லை. காத்திருந்த கட்சிகள் மண்டையில் அடித்துக் கொள்ளாத குறைதான்.

பிரதமருடன் ஒரு சந்திப்பு
யாரைப் பற்றியும் கவலைப்படாமல் அவர் டெல்லிக்கு திடீரென கிளம்பிச் சென்றார். அங்கு பிரதமரைச் சந்தித்தார். எம்.எல்.ஏக்களுடன் சேர்ந்து குரூப் போட்டோவும் எடுத்துக் கொண்டார். பின்னர் எம்.எல்.ஏக்களெயல்லாம் டெல்லியிலேயே விட்டு விட்டு அவர் மட்டும் சென்னைக்குப் புறப்பட்டு வந்தார்.

நேர்காணல் ஓவர்
அதன் பின்னர் 40 தொகுதிகளுக்கும் விருப்ப மனு கொடுத்திருந்தவர்களுடன் நேர்காணலை நடத்தி முடித்தார்.

அலை அலையாக தலைவர்கள்
இப்படி தனி டிராக்கில் விஜயகாந்த் பயணித்து வரும் போதிலும், விடாமல் பல்வேறு தலைவர்கள் அவரைச் சந்தித்தபடிதான் உள்ளனர். பார்வர்ட் பிளாக் தலைவர் சந்தானம் பார்த்தார், சமூக சமத்துவப் படைத் தலைவர் சிவகாமி சந்தித்தார். பாஜக சார்பிலும் ரகசியமாக பேசி வருகிறார்கள்.

இன்று இரவு சிங்கப்பூருக்கு
இந்த நிலையில்தான் இன்று இரவு சிங்கப்பூர் செல்கிறார் விஜயகாந்த் என்ற தகவல் பரவியுள்ளது. மனைவியுடன் செல்கிறார் விஜயகாந்த். உடல் நலப் பிரச்சினைக்காக அவர் சிகிச்சை பெற செல்வதாக கூறப்படுகிறது.

அங்கும் யாரையாவது சந்திக்கலாமோ...
மலேசியப் பயணத்தின்போது தமுமுக பிரமுகர்களை விஜயகாந்த் சந்தித்தது போல, மலேசியாவுக்குப் பக்கத்தில் இருக்கும் சிங்கப்பூரில் விஜயகாந்த் வேறு அரசியல் சந்திப்புகளை மேற்கொள்வாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தட்டுத் தடுமாறும் பாஜக - காங்கிரஸ்
இதற்கிடையே விஜயகாந்த் சற்றும் பிடிகொடுக்காமல் இருப்பதால் காங்கிரஸும் சரி, பாஜகவும் சரி டென்ஷனாகியுள்ளனவாம். இப்படி ஒரு இழுபறியான, இழுவைக் கட்சியை இதுவரை பார்த்ததே இல்லை என்று இக்கட்சித் தலைவர்கள் புலம்பிக் கொண்டிருக்கிறார்களாம்.

செம டிராமா
ஒரே நேரத்தில் காங்கிரஸ் மற்றும் பாஜகவுடன் அவர் சீட் பேரம் பேசி வருவதாக கூறுகிறார்கள். யார் அதிகம் தருகிறார்களோ அவர்களுடன்தான் கூட்டணி என்று விஜயகாந்த் தரப்பு உறுதியாக இருக்கிறதாம். கடைசியாக கிடைத்த தகவலின்படி அவர் 18 முதல் 20 சீட் வரை கேட்கிறாராம்.

இன்னும் நம்பிக்கையை விடாத பாஜக
இந்த நிலையிலும் கூட தனது நம்பிக்கையை சற்றும் விடாமல் காத்திருக்கிறது பாஜக. இதுகுறித்து அக்கட்சித் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் கூறுகையில், பா. ஜ.க. கூட்டணி குறித்து இன்னும் இறுதி முடிவு செய்யப்பட வில்லை. தே.மு.தி.க., பா.ம.க.வுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. சுமூகமான முடிவு ஏற்படும் என்று நம்புகிறோம்.

பிறகு பார்க்கலாம்
பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்ட பிறகு தான் யார் யாருக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பது குறித்து முடிவு செய்யப்படும். பாரதீய ஜனதா எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுகிறது என்பதும் கூட்டணி பேச்சு வார்த்தைக்கு பிறகே முடிவு செய்யப்படும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications