எஸ்சி, எஸ்டி மாணவர்களின் உயர்கல்வி உதவித் தொகை.. வெள்ளை அறிக்கை தேவை - விஜயகாந்த்
சென்னை: தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவது குறித்து வெள்ளை அறிக்கையை முதல்வர் ஜெயலலிதா வெளியிட வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழக முதல்வர் ஜெயலலிதா மத்திய அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்களின் உயர் கல்விக்கான உதவித்தொகையை கடந்த இரண்டு நிதியாண்டுகளாக மத்திய அரசு வழங்காமல் 1,549 கோடியே 76 லட்ச ரூபாயை நிலுவையில் வைத்துள்ளதாக கூறியுள்ளார்.
அதை மத்திய அரசு உடனடியாக வழங்கவேண்டும் என்பதில் தேமுதிகவிற்கு மாற்று கருத்தில்லை. ஆனால் அதிமுக அரசு தற்போது கேட்டுள்ளதுதான் வியப்பாக உள்ளது.
திடீர் ஞானோதயம்:
சுமார் இரண்டாண்டு காலம் இதைப்பற்றிய அக்கறை துளியும் இல்லாமல் இருந்துவிட்டு, திடீர் ஞானோதயம் எற்பட்டவர்போல் குறித்த காலத்தில் கல்வி உதவித்தொகையை வழங்கினால் தானே தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்களால் உயர்கல்வியை பெறமுடியும் என்றும், தாமதப்படுத்தினால் திட்டத்தின் நல்ல நோக்கமே அடிபட்டுப்போய்விடும் என்றெல்லாம் வியாக்கியானம் பேசியுள்ளார்.
தும்மை விட்டு வாலை பிடிக்கும் கதை:
தமிழக முதல்வர் ஜெயலலிதா சுமார் இரண்டு ஆண்டுகளாக என்ன செய்துகொண்டிருந்தார்? "தும்பை விட்டு வாலை பிடிக்கின்ற" கதையாக எந்த ஒரு காரியத்தையும் காலம் கடந்துதான் செய்கிறார் என்பது இதன் மூலம் வெட்ட வெளிச்சமாக தெரியவருகிறது.
செமஸ்டர் தேர்வு எழுத முடியாத நிலை:
2013 - 2014 நிதியாண்டில் 600 கோடி ரூபாயை மத்திய அரசு வழங்கியும், 2014 மார்ச் வரையிலும் அத்தொகை செலவிடப்படவில்லை என்று அந்த காலகட்டத்தில் குற்றச்சாட்டு எழுந்தது. கடந்த ஏப்ரல் மாதமே ஆறரை லட்சம் உயர்க்கல்வி மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படாமல் உள்ளதாகவும், அதில் ஒன்றரை லட்சம் மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வு எழுத முடியாத நிலை ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது. அப்போதெல்லாம் இதைப்பற்றி சிறிதும் அக்கறை கொள்ளாமல் அதிமுக அரசு இருந்ததென கல்வியாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
முறையான பயன்பாடு இல்லை:
அதிமுக அரசு கடந்த காலத்தில் மத்திய அரசு கல்வித்துறைக்கு ஒதுக்கிய ரூபாய் 4,400 கோடி ரூபாயையும், காவல்துறைக்கு ஒதுக்கிய ரூபாய் 1,500 கோடி ரூபாயையும் திருப்பி அனுப்பியது. அதுபோன்று பல்வேறு துறைகளுக்கும் ஒதுக்கிய நிதியை முறையாக பயன்படுத்தாமல் திருப்பி அனுப்பிய வரலாறு பல உண்டு.
தலைமை கணக்கு அதிகாரி அறிக்கை:
மேலும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்கள் மீது தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்குத்தான் அக்கறை இருப்பது போல காட்டிக்கொள்கிறார். ஆனால் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் நலத்துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதியை அவர்களின் நலனுக்கு பயன்படுத்தாமல், பல்வேறு இலவச திட்டங்களுக்கு அதிமுக அரசு பயன்படுத்தியுள்ளதென்பதை தலைமை கணக்கு அதிகாரியின் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
அச்சத்தில் மாணவர்கள்:
தற்போது மழை வெள்ளத்தால் பல மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ள இந்த சூழ்நிலையில், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான உதவித் தொகையை மத்திய அரசு வழங்கவேண்டுமென கேட்பது, அம்மாணவர்கள் மத்தியில் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் "கடைத்தேங்காயை எடுத்து, வழிப்பிள்ளையாருக்கு உடைத்ததுபோல" இந்த நிதியை பெற்று மீண்டும் மாற்று திட்டங்களின் பணிகளுக்கு அதிமுக அரசு திருப்பிவிடுமோ, என்கின்ற அச்சம் அம்மாணவர்களின் மனதில் எழுந்துள்ளது.
வெள்ளை அறிக்கை தேவை:
எனவே 2011 முதல் இன்று வரை அதிமுக ஆட்சியில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான நிதியை மத்திய அரசிடமிருந்து பெற்றது குறித்தும், அதை செலவிட்டது குறித்தும் வெள்ளை அறிக்கையை, தமிழக முதல்வர் ஜெயலலிதா வெளியிடவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.