மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை... அணைகளின் நீர்மட்டம் கிடு கிடு உயர்வு!
நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் பிரதான தொழில் விவசாயம் ஆகும். இந்த மாவட்டங்களின் விவசாயம் மற்றும் குடிநீர் தேவைக்கு பாபநாசம் அணைதான் நீராதாரமாக உள்ளது.
பொதுவாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை ஜூன் மாதமும், வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதமும் பெய்யும். கடந்த முறை வடகிழக்கு பருவமழை சரியாக பெய்யவில்லை. தென்மேற்கு பருவமழையும் தலை காட்டவில்லை.
இதனால் அணைகளின் நீர் இருப்பு குறைவாக உள்ளது. பாபநாசம் உள்பட 7 கால்வாய்களில் 3 மட்டுமே தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த ஓரு வாரமாக மேற்கு தொடர்ச்சி மலையில் லேசான மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளின் நீ்ர்வரத்து அதிகரித்துள்ளது.
நீர்மட்டம்...
பாநாசம் அணையின் நீர்மட்டம் 59.05 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1220 கன அடி தண்ணீர் வருகிறது. சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 69.13 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1230 கன அடி தண்ணீர் வருகிறது. தற்போது நீர்மட்டம் 91.19 அடியாக உள்ளது. மணி முத்தாறு அணையின் நீர்மட்டம் 58.92 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 2 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 75 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
நிரம்பி வழிகிறது...
குண்டாறு அணை அதன் கொள்ளளவை ஏற்கனவே எட்டி விட்டதால் நிரம்பி வழிகிறது. அணைக்கு வினாடிக்கு 8 கன அடி தண்ணீர் வருகிறது. அந்த தண்ணீர் அப்படியே திறந்து விடப்படுகிறது. அணைப்பகுதியில் மழை 11 மி்மீ பதிவாகியுள்ளது.
தண்ணீர் திறப்பு...
அடவி நயினார் அணையில் நீர்மட்டம் 63 அடியாக உள்ளது. நீர்மட்டம் ஓரே நாளில் 5 அடி உயர்ந்து 68 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 80 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 5 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
சாரல் மழை...
நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை செங்கோட்டையில் 5 மிமீ மழை, சிவகிரியில் 3 மிமீ மழை, தென்காசியில் 1.2 மிமீ மழை பதிவாகியுள்ளது. நெல்லையில் லேசான சாரல் மட்டுமே பெய்தது குறிப்பிடத்தக்கது.