சென்னையில் தண்ணீர் பிரச்சினை... ஏப்ரலில் தேர்வுகளை முடிக்க அண்ணா பல்கலைக்கழகம் முடிவு
வடகிழக்கு பருவமழை பொய்த்துப்போனதால் சென்னையில் தண்ணீர் பிரச்சினை தலைதூக்கியுள்ளது. இதனால் கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே செமஸ்டர் தேர்வுகளை முடித்து விட அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெ
சென்னை: சென்னை பெருநகருக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டம் அபாயகட்டத்தில் உள்ளது. வீராணம், பூண்டி, புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் கடந்த ஆண்டு நீர் நிரம்பி வழிந்தது. இந்த ஆண்டு பருவமழை பொய்த்துப் போனதால் குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர்மட்டம் குறைந்து விட்டது.
ஆங்காங்கே தண்ணீர் பிரச்சினை தலை தூக்கியுள்ளது. இந்த தண்ணீர் தட்டுப்பாடு அண்ணாபல்கலைக்கழகத்தையும் விட்டு வைக்கவில்லை. சனிக்கிழமைகளிலும் வகுப்புகளை வைத்து பாடங்களை முடித்து விட்டு ஏப்ரல் 2வது வாரத்திற்குள் கோடைக்கு முன்பாக தேர்வுகளை நடத்திவிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் 37 ஹாஸ்டல்கள் உள்ளன. இதில் 7500 மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள், ஊழியர்கள் உள்ளனர். இவர்களுக்கு மொத்தம் தினசரி 8 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. விடுதிக்கு 3 லட்சம் லிட்டர் தண்ணீர் ஹாஸ்டலுக்கும், ஆசிரியர்கள், ஊழியர்கள் குடியிருப்புகளுக்கு 3 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. இப்போது தண்ணீர் தட்டுப்பாடு நிலவுவதால் தண்ணீர் விநியோகம் குறைக்கப்பட்டுள்ளது.
முன்பெல்லாம் 24 மணிநேரமும் தண்ணீர் தட்டுப்பாடின்றி கிடைத்தது. இப்போது காலை 5.30 மணிமுதல் 9.30 மணிவரையிலும் இரவு 5.30 முதல் 6.30 மணிவரை மட்டுமே தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. தனியார் குடிநீர் லாரிகள் மூலமே தண்ணீரை பெற்று சமாளிப்பதாக அண்ணா பல்கலைக்கழக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
தை மாதத்திலேயே தண்ணீர் பிரச்சினை தலை தூக்கியுள்ள நிலையில் பங்குனி, சித்திரை மாதங்களில் கோடை வெயில் சுட்டெரிக்கும் போது தண்ணீர் பிரச்சினை அதிகரிக்கும், இதனால் பல்கலைக்கழகத்திற்கு கூடுதல் நிதி சுமையும் ஏற்படும் என்பதால் விரைவாக பாடத்திட்டங்களை முடித்து விட்டு விடுமுறைகளை விட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.