முதல்வரும், சபாநாயகரும் கூட்டுச் சதி செய்து வெளியேற்றி விட்டனர்.. ஸ்டாலின் பரபரப்பு புகார்
சென்னை: தமிழக சட்டசபையில் காவல்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் திமுக உறுப்பினர்களை பங்கேற்க விடாமல் தடுப்பதற்காகவே அதிமுக உறுப்பினர்களுடன் முதல்வர் ஜெயலலிதா இணைந்து கூட்டுச்சதி செய்து சஸ்பெண்ட் செய்துள்ளதாக சட்டசபை எதிர்கட்சித்தலைவர் மு.க. ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழக சட்டசபையில் இன்று நமக்கு நாமே பயணம் குறித்த அதிமுக உறுப்பினர் குணசேகரன் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் அமளியில் ஈடுபட்டனர்.
அவையில் அமளி தொடர்ந்து நிலவியதால் திமுகவினரை வெளியேற்ற அவைக் காவலர்களுக்கு தனபால் உத்தரவிட்டார். அவை நடவடிக்கைக்கு குந்தகம் விளைவித்ததாகக் கூறி அவைத் தலைவர் இந்த உத்தரவை பிறப்பித்தார். திமுக உறுப்பினர்களை வெளியேற்ற சபாநாயகர் தனபால் உத்தரவிட்டதற்கு திமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை கண்டித்து திமுக உறுப்பினர்கள் முழக்கமிட்டனர்.
இதையடுத்து, அவைக் காவலர்கள், முக. ஸ்டாலின் உட்பட அனைத்து திமுக உறுப்பினர்களையும் வலுக்கட்டாயமாக அவையை விட்டு வெளியேற்றினர். நடப்புக் கூட்டத் தொடரில் திமுகவினர் வெளியேற்றப்படுவது இதுவே முதல் முறை.

ஸ்டாலின் பேட்டி
திமுக எம்.எல்.ஏக்கள் அனைவரும் தங்கள் அறைக்கு சென்று ஆலோசனையில் ஈடுபட்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், ஆளுநர் உரை உட்பட சட்டமன்ற நடவடிக்கைகள் அனைத்திலும் திமுக உறுப்பினர்கள் முறையாக பங்கேற்றதாக குறிப்பிட்டார்.

சபாநாயகர் அவதூறு
திமுக உறுப்பினர்களை எப்படியாவது அவையிலிருந்து வெளியேற்ற வேண்டும் என திட்டமிட்டே அமைச்சர்கள் சர்ச்சைக்குரிய வகையிலும், ஆத்திரமூட்டும் வகையிலும் பேசுவதாக ஸ்டாலின் குற்றம்சாட்டினார். மேலும் வேண்டும் என்றே திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்வதாக சபாநாயகர் அவதூறாக புகார் கூறுவதாக தெரிவித்தார்.

அவமரியாதை பேச்சு
நமக்கு நாமே பற்றி அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஜெயலலிதா ஒரு கதையாக கூறியுள்ளார். சட்டசபையில் அதைப்பற்றி பேசுவது தனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. நமக்கு நாமே பயணம் குறித்து அவமரியாதையாக அதிமுக உறுப்பினர் ஒருமையில் பேசினார். அந்த சொல்லை நீக்க வலியுறுத்தியதால் திட்டமிட்டு அவையிலிருந்து வலுக்கட்டாயமாக தற்போது வெளியேற்றப்பட்டுள்ளோம்.

கூட்டுச்சதி
சபாநாயகர் தனபால் சர்வாதிகாரப் போக்குடன் நடந்து கொள்வதாக கண்டனம் தெரிவித்த ஸ்டாலின், இன்றைய தினம் முதல்வர் ஜெயலலிதா கோட்டைக்கு வந்தும் சட்டசபைக்கு வரவில்லை என்று கூறினார். இன்றைய தினம் எங்களை வெளியேற்ற வேண்டும் என்று கூட்டுச்சதி செய்ததாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

சஸ்பெண்ட் ஏன்?
ஏனெனில் ஆகஸ்ட் 22ம் தேதி காவல்துறை மானியக் கோரிக்கை பேரவையில் விவாதிக்கப்பட உள்ளது. எனவே இந்த விவாதத்தில் திமுகவினர் பங்கேற்பதை தடுக்கவே உறுப்பினர்களை சஸ்பென்ட் செய்துள்ளதாக புகார் கூறியுள்ளார். அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து கட்சித் தலைவருடன் விவாதித்து முடிவு செய்ய உள்ளதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications