பெண்கள் உயர்கல்விக்கு பயன்தரும் திட்டங்களை நிறைவேற்றிய அரசு: ஓ.பி.எஸ் பெருமிதம்
சென்னை: பெண்கள், குழந்தைகள், திருநங்கைகள், முதியோர் மற்றும் ஆதரவற்றோர் போன்ற சமுதாயத்தில் எளிதில் பாதிப்புக்குள்ளாகக் கூடிய பிரிவினரின் முன்னேற்றத்திற்காக, எண்ணற்ற பல நலத்திட்டங்களை, இந்த அரசு செயல்படுத்தி வருகிறது என்று ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.
சட்டசபையில் இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்த ஓ.பன்னீர் செல்வம், பெண்கள் தொடர்ந்து உயர்கல்வி பயில்வதை ஊக்குவிக்கவும், இளம் வயதில் திருமணம் செய்வதைத் தடுக்கவும், பல்வேறு திருமண உதவித் திட்டங்களின் கீழ், அப்பெண்களின் உயர்கல்வித் தகுதியின் அடிப்படையில் அவர்களுக்கு நிதியுதவிகள் உயர்த்தி வழங்கப்படுவதாக கூறினார்.
இத்திட்டங்களின் கீழ் இதுவரை, 2,537.74 கோடி ரூபாய் பண உதவி பெற்று 7,72,643 பெண்கள் பயனடைந்துள்ளதாகவும் தனது பட்ஜெட் உரையில் ஓ.பன்னீர் செல்வம் குறிப்பிட்டுள்ளார்.
தாலிக்கு தங்கம்
கடந்த ஐந்து ஆண்டுகளில், திருமாங்கல்யத்திற்கென 786.64 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்துவதற்காக, இடைக்கால பட்ஜெட் திட்ட மதிப்பீடுகளில் 703 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சத்துணவு திட்டம்
சத்துணவுத் திட்டத்திற்காக இடைக்கால பட்ஜெட் திட்ட மதிப்பீடுகளில் 1,645 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒரு சிறப்பு முயற்சியாக 27.35 கோடி ரூபாய் செலவில் 45,211 அங்கன்வாடி மையங்களுக்கும் சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டதன் மூலம் அனைத்து அங்கன்வாடி மையங்களிலும் இந்த வசதி உறுதி செய்யப்பட்டுள்ளது.
வெப்ரத்னா விருது
தகவல் தொழில் நுட்பவியல் துறையில் அதிமுக தலைமையிலான இந்த அரசின் முன் முயற்சிகள் தேசிய அளவில் பாராட்டப்பட்டு, கடந்த நான்கு ஆண்டுகளில், இருமுறை ‘வெப் ரத்னா' விருதை தமிழ்நாடு பெற்றுள்ளது.
முதலீட்டாளர்கள் மாநாடு
முதல்வரின் சீரிய தலைமையின் கீழ், 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 9 முதல் 10 ஆம் நாட்களில், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை இந்த அரசு வெற்றிகரமாக நடத்தியது.
உலகத்தர கட்டமைப்பு
தொழிற்பூங்காக்கள், சாலைக்கட்டமைப்பு, மின் விநியோகம், தொழில் முதலீடுகளுக்கு உகந்த சூழல், திறன் மிக்க மனிதவள ஆதாரம், சிறந்த ஊக்கத்தொகை திட்டங்கள் உட்பட, நமது மாநிலத்தின் உலகத் தரத்திலான கட்டமைப்பு வசதிகளை பறைசாற்ற இந்த முதல் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு பெரிதும் உதவியுள்ளது.
வேலைவாய்ப்பு
இந்த மாநாட்டின் மூலம் 4.70 லட்சம் நபர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கக்கூடிய வகையில் 2.42 லட்சம் கோடி ரூபாய் அளவிலான தொழில் முதலீடுகளை ஈர்க்க வழிவகை ஏற்பட்டுள்ளது.