ஆக. 5... தினகரனின் அடுத்த மூவ் என்ன.. திக் திக் அதிமுக
டிடிவி தினகரன் விதித்த கெடு இன்றோடு முடியும் நிலையில், அடுத்து என்ன நடக்குமோ என்ற அதிமுகவில் பரபரப்பு நிலவுகிறது.
சென்னை: தினகரன் விதித்த 60 நாள் கெடு இன்றோடு முடிவடையும் நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்திற்குத் தினகரன் வருவாரா அல்லது வேறு ஏதாவது அதிரடி பிளான் வைத்துள்ளாரா என்று அதிமுகவில் பரபரப்பு அதிகரித்துள்ளது.
ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் அணிகள் இணைய ஆகஸ்டு 5 வரை டிடிவி தினகரன் கெடு விதித்திருந்தார். ஆனால் இந்த இரண்டு அணிகளும் இணைவதற்கான எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை
இந்நிலையில், அதிமுக அம்மா அணி துணைப் பொதுச் செயலாளர் தினகரனின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது பற்றி பரபரப்பு நிலவுகிறது.
எரிச்சல் பேச்சுக்கள்
எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓபிஎஸ் அணிகள் இணைவதற்கான எத்தனிப்புகள் அனைத்தும் பேச்சாக மட்டுமே நின்றுவிட்டது. இரு தரப்பில் இருந்து இணைந்துவிடக் கூடாது என்பதற்கான எரிச்சல் பேச்சுக்களைத்தான் தொடர்ந்து ஈபிஎஸ் அணியின் ஜெயக்குமாரும், ஓபிஎஸ் அணியின் முனுசாமியும் பேசி வந்தனர்.
5 கோடி பேரம்
அதன் உச்சமாக, எம்எல்ஏ சண்முகநாதன் 5 கோடி ரூபாய் பேரம் நடத்தப்படுவதாக எடப்பாடி பழனிச்சாமி மற்றும் தினகரன் அணியினர் மீது குற்றச்சாட்டுக்களை வைத்தார். அவரது இந்தப் பேச்சு இரு அணிகள் இணைவதற்கான வாய்ப்பே இல்லை என்பதைத் தெளிவாக உணர்த்தியது.
அதிரடி நடவடிக்கைகள்
இந்நிலையில், இன்றோ அல்லது நாளையோ தினகரன் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருவார் என்று நாஞ்சில் சம்பத் நேற்று தெரிவித்துள்ளார். நிச்சயம் அலுவலகம் வரும் தினகரன் பல அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபடுவார் என்றும் தினகரன் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தலைமை அலுவலகம் கைப்பற்றப்படுமா ?
இதனால், தினகரன், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்து அலுவலகத்தைக் கைப்பற்றி விடுவார் என்ற பதற்றம் அதிமுகவில் ஏற்பட்டுள்ளது. ன் அலுவலகம் வரும் போது எந்தவித பிரச்சனையும் செய்யாமல் இருக்க தினகரன் தரப்பு எடப்பாடி பழனிச்சாமியிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இன்று என்ன முடிவு
இதனிடையே நேற்று சில முடிவுகளை அறிவிக்க உள்ளதாகக் கூறிய தினகரன், அதனைச் செய்யவில்லை. அதே போல் கெடு நாளான இன்று அவர் என்ன செய்யப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு அதிமுகவினரிடையே அதிகரித்துள்ளது.
போலீசார் குவிப்பு
இந்தப் பரபரப்பில், கட்சி அலுவலகத்தை தினகரன் கோஷ்டியினர் கைப்பற்றாமல் இருக்க போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். இன்று தினகரன் கட்சி அலுவலகத்திற்கு வருகிறாரா? இல்லையா? அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்ற பதற்றம் அதிமுகவில் நிலவி வருகிறது.