கழுத்தை இறுக்கும் கயிறு... அசோக் குமார்களும், இசக்கிமுத்துகளும்..!
சென்னை: கந்து வட்டி... கழுத்தை இறுக்கும் கயிறுதான் இந்த கந்துவட்டி எனும் எமன். இது தெரிந்துதான் குழிக்குள் விழுகிறார்கள் அசோக்குமார் போன்றோர் .
ஏனென்றால் சினிமா ஒரு மாயஉலகம் மற்றும் மாய விளையாட்டு. இதில் யார் எப்பொழுது ஜெயிப்பார்கள் என்று யாருக்கும் தெரியாது. இப்படி இருக்கும் ஒரு தொழிலில் ஒரு வரைமுறை வேண்டும் என்பது தெரிந்தாலும் ஏனோ திரைப்படதுறை தயங்குகிறது.
ரஜினி, கமல் போன்ற ஜாம்பவான்கள் கூட மூடி மௌனித்திருக்க, நாம் ஏதாவது செய்தால் தவறாகிவிடும் என்ற சிந்தனைதான்.

ரஜினி கமல் என்ன செய்தனர்
சிஸ்டம் சரியில்லையென்று சொல்லும் ரஜினி ஒருநாளாவது திரைத்துறையில் ஏற்படும் இப்படிப்பட்ட இழப்புகளை நிறுத்த ஏதாவது செய்திருக்கலாமே? Twitter - ல் கூவி கூவி கருத்துக்களை கூறிவரும் கமல் இவ்வளவுநாள் என்ன செய்தா ? என்ற நெடுநாள் கேள்வி நம்மனதில்.

அசோக்குமார்களும், இசக்கிமுத்துகளும்
அசோக்குமார் - திரைத்துறைக்கு எடுத்துக்காட்டு என்றால், இசக்கிமுத்து - சாமானிய மக்களின் வாழ்க்கை இந்த கந்து வட்டி கும்பலிடம் எவ்வாறு சிக்கித் தவிக்கிறது என்பதற்கு ஒரு உதாரணம்.

இசக்கிமுத்துகளுக்கு என்ன விமோச்சனம்?
இங்கு கவனிக்க வேண்டியது அசோக்குமார் மரணத்திற்கு திரைத்துறை ஏதாவது செய்யும். ஆனால் இந்த இசக்கிமுத்து குடும்பம் போல் இன்னும் எத்தனை குடும்பங்கள் ??? நம் முன்னாள் கேள்விக்குறிகள் மட்டுமே காட்சிகளாய்.

குறள் வழி நடக்க மறந்தோம்
அறிகொன்று அறியான் எனினும் உறுதி
உழையிருந்தான் கூறல் கடன். - திருக்குறள்
இதன் பொருள் அறிவுறுத்துவாரின் அறிவையையும் அழித்துத் தானும் அறியாதவனாக அரசன் இருந்தாலும், அமைச்சன் அவனுக்கு உறுதியானவற்றை எடுத்துக்கூறல் கடமையாகும். ஆனால் இன்றோ அமைச்சர்களே அனைத்து பிரச்சினை எனும் முடிச்சுகளின் எல்லையாய் இருக்கின்றனர்.

மேலோங்கி நிற்கும் குழப்பம்-பயம்
சமீபத்தில் நடக்கும் நிகழ்வுகளை பார்க்கும் பொழுது , நம் மனதில் இனம் புரியாத பயமும், குழப்பமுமே மேலோங்கி நிற்கின்றது. இதையெல்லாம் தெளிவாக்க வேண்டியதும், தீர்வு கொடுக்க வேண்டியதும் நம் அமைச்சர்களின் கடமை. அதை கேட்க வேண்டியது நமது உரிமை.
-தனிஸ்ஸ்ரீ, சென்னை












Click it and Unblock the Notifications