ரஜினி நடிக்கப் போகும் மும்பை சீனியர் தாதா 'ராம்நாடு' ஹாஜி மஸ்தான் இவர்தான்!
மும்பையின் இன்றைய நிழல் உலக தாதாக்கள் பலருக்கும் சீனியராக இருந்தவர் ஹாஜி மஸ்தான். தாவூத் இப்ராஹிம் உள்ளிட்ட பல தாதாக்களுக்கு சீனியர் இவர்.
சென்னை: மறைந்த மும்பை தாதா ஹாஜி அலி மஸ்தானின் வளர்ப்பு மகன் சுந்தர்ஷேகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு மிரட்டல் கடிதம் அனுப்பியதுதான் இன்றைய பரபரப்பு. யார் இந்த ஹாஜி மஸ்தான் என்று தேடினால் 1960களில் இவர் மும்பையில் வாழ்ந்த தமிழர்களின் காட்பாதராக இருந்துள்ளார்.
இன்றைய நிழல் உலக தாதாக்கள் தாவூத் இப்ராஹிம், சோட்டா ராஜன், சோட்டா சகீல் போன்றவர்களுக்கெல்லாம் சீனியர் இவர்தான். மும்பைவாசிகளுக்கே பாடம் நடத்தியவர் இந்த கேங்ஸ்டார் ஹாஜி மஸ்தான்.
தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டத்தில் பிறந்து மும்பையில் டான் ஆன வாழ்ந்த ஹாஜி மஸ்தான் வாழ்க்கையை மையமாக வைத்து அமிதாப்பச்சன் நடித்த தீவார் படம் எடுக்கப்பட்டது. இதேபோல 2010ஆம் ஆண்டு அஜய் தேவ்கான் நடிப்பில் வெளியான ஒன்ஸ் அபான் அ டைம் ஹிந்திப் படம், மஸ்தான் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டதுதான்.
ரஜினியின் தீ
அமிதாப்பச்சனின் தீவார் படம்தான் தமிழில் ரஜினி நடித்த தீ படமாக வெளிவந்தது. இப்போது ரஞ்சித் இயக்கப் போகும் புதிய படமும் ஹாஜி மஸ்தான் கதையை மையமாக வைத்து எடுக்கப்படுவதாக வெளியாகியுள்ளதே பரபரப்பை பற்ற வைத்துள்ளது.
யார் இந்த ஹாஜி மஸ்தான்
1926ல் ராமநாதபுரம் மாவட்டம் பனைகுளத்தில் பிறந்தவர் ஹாஜி மஸ்தான். 8 வயதில் தனது தந்தையுடன் மும்பைக்கு இடம் பெயர்ந்தார். மும்பை கிராஃபோர்ட் மார்க்கெட்டில் சைக்கிள் கடை வைத்து நடத்தி வந்த அவர் பின்னர் மும்பை துறைமுகத்தில் போர்ட்டராக வேலைக்கு சேர்ந்தார்.
வரதாபாயுடன் நட்பான ஹாஜி மஸ்தான்
அதே கால கட்டத்தில் தாராவி உட்பட தமிழ் மக்களிடம் தமிழரான வரதராஜ முதலியார்தான் ஹீரா. இவரை மையமாக வைத்துதான் நாயகன் படம் எடுக்கப்பட்டது.
வெள்ளையில் வலம் வந்த மஸ்தான்
வெள்ளை நிற பேண்ட், சட்டை அணிவது ஹாஜி மஸ்தானுக்கு பிடித்தமானது. வெளிநாட்டு சிகரெட்டுகளை புகைத்துக்கொண்டே மெர்சிடஸ் பென்ஸ் காரில் பயணிப்பது மஸ்தானுக்கு பிடித்தமானது.
இணைந்த கைகள்
ஹாஜி மஸ்தானும், வரதாபாயும் சேர்ந்து மும்பை துறைமுகத்தை கண்ட்ரோலில் வைத்திருந்தனர். அவர்கள் வைத்ததுதான் சட்டமானது. பலவகைகளிலும் பணம் இருவருக்கும் கொட்டியது.
சினிமா நட்சத்திரங்களின் தொடர்பு
ஹாஜி மஸ்தான் மும்பையின் பிரபலங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டார். ரியல் எஸ்டேட், சினிமா தொழில்களில் கொடிகட்டிப் பறந்தார்.
சிறுவயது கனவு
சிறு வயதில் ஏழ்மையில் உழன்று , இளம் வயதில் நிழல் உலக கும்பலுடன் இணைந்து மும்பை வாழ் தமிழர்களுக்காகவே பல நன்மைகளை செய்த ஹாஜி மாஸ்தான், நடுத்தர வயதில் தான் நினைத்த வசதியான வாழ்க்கையை வாழத்தொடங்கினார். அவரது வெள்ளை நிற ஆடையும், தலையில் அணிந்திருந்த தொப்பியும் மும்பை வாழ் தமிழர்களின் மத்தியில் அடையாளமாக இருக்கிறது.
மும்பையிலேயே மரணம்
வரதராஜ முதலியார் சென்னைக்கு வந்து அமைதியாக வாழத் தொடங்கினார். ஹாஜி மஸ்தானோ தொடர்ந்து மும்பையில்தான் இருந்தார். அவர் 1994ஆம் மே மாதம் புற்றுநோய் தாக்கியதில் மரணமடைந்தார்.
வெளிச்சத்துக்கு வந்த தாதா
ஹாஜி மஸ்தான் வாழ்க்கையை மீண்டும் படமாக எடுக்கப் போவதாக தகவல் வெளியாகவே வெளிச்சத்துக்கு வந்துள்ளார் ஹாஜி மஸ்தான். தமது தந்தையின் வாழ்க்கை வரலாற்றை நல்ல முறையில் சித்தரிக்க வேண்டும் என்றும், இல்லையென்றால் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று மஸ்தானின் வளர்ப்பு மகன் ரஜினிகாந்திற்கு மிரட்டல் விடுத்துள்ளார்.