டிடிவி தினகரனுக்கு எதிராக களமிறங்கும் ரிப்போர்ட்டர் மருதுகணேஷ்
ஆர்.கே. நகர் தொகுதியில் டிடிவி தினகரனை எதிர்த்து நிருபரும் வழக்கறிஞருமான மருதுகணேஷை களமிறக்கியுள்ளது திமுக.
சென்னை: ஆர்.கே. நகர் தொகுதியின் இடைத் தேர்தலுக்கான திமுக வேட்பாளராக மருது கணேஷ் போட்டியிடுவார் என்று கட்சியின் பொதுச் செயலர் அன்பழகன் அறிவித்துள்ளார். ஆர்.கே. நகர் தொகுதியின் கிழக்குப் பகுதி செயலாளராக இவர் பதவி வகித்து வருகிறார். திமுகவில் அவர் பணிகள் பங்களிப்புகள் பற்றி தெரிந்து கொள்வோம்.
அதிமுக வேட்பாளராக டிடிவி தினகரன் அறிவிக்கப்பட்ட நிலையில், உடனடியாக திமுக வேட்பாளர் குறித்த அறிவிப்பும் வெளியாகிவிட்டது. முன்னதாக, எம்ஜிஆர் ஜெயலலிதா தீபா பேரவையைத் தொடங்கியிருக்கும் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும் ஆர்.கே. நகர் தொகுதியில் தான் போட்டியிடப் போவதாக அறிவித்திருந்தார். இதையடுத்து இடைத்தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது என்றே சொல்லலாம்.
ஆர்.கே. நகர் இடைத் தேர்தலுக்கான வேட்பாளராக புதுமுகமான மருதுகணேஷ் அறிவிக்கப்பட்டுள்ளது அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. தினகரன் நிருபர், வழக்கறிஞர், ஆர்.கே. நகர் திமுக கிழக்குப்பகுதி செயலாளர் என தொகுதிவாசிகளிடம் பரிட்சையமானவரையே திமுக அறிவித்துள்ளது.
மருதுகணேசின் தந்தை நாரயாணசாமி தாய் பார்வதி நாரயாணசாமி முன்னால் தி.மு.க. மாமன்ற உறுப்பினர். மருதுகணேஷ். தி.மு.க வில் வட்டசெயலாளர்.பகுதி பொருப்பாளர் ஆகிய பதவி வகித்தார் இவர். ஜார்ஜடவுன் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணி செய்து வருகிறார்.
தி.மு.க.சார்பில் ஆர்.கே. நகரில் நடைபெற்ற அனைத்து போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், என அனைத்திலும் முன் நின்று நடத்தியவர் என்பதால், ஆர்.கே.நகர் தேர்தலில் திமுகவிற்கு வெற்றி பெறுவது நிச்சயம் என்று தொண்டர்கள் இப்போதே உற்சாகத்துடன் கூறி வருகின்றனர்.