ஓ.பி.எஸ். சொன்னது போல.. ஜெ. எதிர்ப்பாளர்களை அணி திரட்டுகிறாரா தினகரன்?
Recommended Video
சென்னை: ஜெயலலிதாவுக்கு எதிரானவர்களுடன் கூட்டணி வைக்கிறார் தினகரன் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறியிருந்தார். அது உண்மையோ என்று நினைக்கும்படியாகவே தினகரனின் செயல்பாடுகள் உள்ளன.
துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்தவர் தினகரன். ஜெயலலிதாவுக்கு எதிரான திமுகவுடன் கை கோர்த்திருக்கிறார். ஜெயலலிதாவுக்கு எதிரானவர்களுடன் கூட்டணி வைக்கிறார் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் ஜெயலலிதாவால் கட்டப்பட்ட, அவரால் அடிக்கப்பட்டதாக கூறப்பட்ட சசிகலா புஷ்பாவை தினகரன் சந்தித்துள்ளார். இது அதிமுகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆர்.கே.நகரால் வந்த வினை
அதிமுக வட்டாரம் கலகலத்துக் கிடக்கிறது. ஆர்.கே.நகரில் 2வது இடத்தைப் பிடித்து தோல்வி அடைந்திருப்பது அக்கட்சியினரை சோர்வடைய வைத்துள்ளது.
துணிச்சலுடன் தலைமை
அதேசமயம், கட்சித் தலைமையான ஓபிஎஸ்ஸும், ஈபிஎஸ்ஸும் கொஞ்சமும் அசராமல் உள்ளனர். அதிரடியாக இன்று தினகரன் தரப்பைச் சேர்ந்த 9 நிர்வாகிகளை கட்சியை விட்டுத் தூக்கி அதிரடி காட்டியுள்ளனர்.
தினகரன் குறித்து ஓபிஎஸ் புகார்
இன்று செய்தியாளர்களிடையே ஓ.பி.எஸ் பேசுகையில், ஜெயலலிதா எதிர்ப்பாளர்களுடன் கை கோர்த்துள்ளார் தினகரன் என்று கூறியுள்ளார். திமுகவுடன் கை கோர்த்துள்ளார் தினகரன் என்பது அவரது குற்றச்சாட்டாகும்.
தினகரன் திட்டம் என்னவோ?
அவர் சொல்லி வாயை மூடி சில மணி நேரங்களே ஆன நிலையில் இன்று இரவு சசிகலா புஷ்பா வந்து தினகரனைச் சந்தித்துள்ளார். அவர் ஜெயலலிதாவால் கட்சியை விட்டு விலக்கப்பட்டவர். ஜெயலலிதா தன்னை அடித்தார் என்று பகிரங்கமா புகார் கூறியவர் சசிகலா புஷ்பா. இவரை தினகரன் சந்தித்துள்ளார்.
ஓபிஎஸ் சொல்வது சரியோ?
அதேபோல தினகரனையும் கூட ஜெயலலிதா கட்சியை விட்டு நீக்கியிருந்தார். ஜெயலலிதா உயிருடன் இருந்தவரை தினகரனால் போயஸ் கார்டன் பக்கமே வர முடியாத நிலை. இப்படி ஜெயலலிதாவுக்கு எதிரானவர்கள் கூடிக் கூடிப் பேசுவதைப் பார்த்தால் அதிமுகவினருக்கு குழப்பமே மேலோங்குகிறது.