பாஜக கூட்டணிக்கு வேலை பார்த்த அழகிரி ஆதரவாளர்கள்- மேலும் 10 பேர் 'கல்தா'வுக்கு காரணம்!
மதுரை: திமுகவில் இருந்து மு.க. அழகிரியின் ஆதரவாளர்கள் 10 பேர் நீக்கப்பட்டதற்கான காரணம் தெரிய வந்துள்ளது. அவர்கள் திமுகவில் இருந்து கொண்டு பாஜக கூட்டணியின் வெற்றிக்கு வேலை பார்த்ததால் தான் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்களாம்.
கட்சிக்கு எதிராக செயல்பட்டதாகக் கூறி மு.க. அழகிரி திமுகவில் இருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து அவரது ஆதரவாளர்கள் பலர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.
இந்நிலையில் முன்னாள் எம்.எல்.ஏ. கவுஸ் பாஷா உள்ளிட்ட அழகிரியின் ஆதரவாளர்கள் 10 பேர் திமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். அதற்கான காரணம் தற்போது தெரிய வந்துள்ளது.
நாடாளுமன்ற தேர்தல்
கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அழகிரி ஊர், ஊராகச் சென்று நாடாளுமன்ற தேர்தலில் திமுகவை தோற்கடித்து அதை நான்காவது இடத்திற்கு தள்ளுங்கள் என்று கூறி வந்தார்.
ஆதரவு
அழகிரியை பல கட்சியினர் சந்தித்து ஆதரவு கோரியிருந்த போதிலும் அவர் தன்னுடைய ஆதரவு இந்த வேட்பாளருக்கு தான் இந்த கட்சிக்குத் தான் என்பதை வெளிப்படையாக தெரிவிக்கவில்லை. ஆனால் அவரது ஆதரவாளர்களோ அதை வெளிப்படையாக அறிவிக்குமாறு வலியுறுத்தினர்.
அழகிரி
தேர்தலுக்கு இரண்டு நாட்கள் இருக்கையில் களத்தில் குதித்தார் அழகிரி. பாஜக கூட்டணி வெற்றிபெற வெளிப்படையாக வேலைகளை ஆரம்பித்தார்.
திமுக வேட்பாளர்கள்
திமுக வேட்பாளர்களான மதுரை வேலுச்சாமி, தேனி பொன்.முத்துராமலிங்கம், விருதுநகர் ரத்னவேலு, நெல்லை தேவதாசசுந்தரம் ஆகிய நால்வரை
மட்டும் எப்படியும் தோற்கடிக்க வேண்டும் என்று அழகிரி உத்தரவிட்டார் என்று அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.
வைகோ கூட்டம்
பிரசாரம் முடியும் இறுதி நாள் அன்று மதுரையில் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர் சிவமுத்துக்குமாரை ஆதரித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசினார். அந்த நிகழ்ச்சியில் அழகிரியின் ஆதரவாளர்களான மிசா பாண்டியன், கோபிநாதன், ராஜ், தர்மர், சிவக்குமார், கருப்பசாமி போன்றவர்கள் கலந்து கொண்டனர். ஏற்கெனவே பிரேமலதா மதுரை வந்தபோது திமுக மாணவர் அணி துணை அமைப்பாளர் வேல்முருகன், சிவக்குமார் போன்றோர் அவரைச் சந்தித்து ஆதரவு தெரிவித்துவிட்டு வந்தார்கள்.
வேகம்
மதுரை கூட்டத்தில் பேசிய வைகோ, 'அழகிரி திமுகவில் இருந்து நீக்கப்பட்டது அநியாயம்' என்றார். இது அழகிரி ஆதரவாளர்களை உசுப்பிவிட்டது. வைகோவை எப்படியும் வெற்றிபெற வைக்க வேண்டும் என்ற வேகத்தில் வேலையில் இறங்கினார்கள். எல்லோரும் களத்தில் இறங்கி மதிமுக, பாஜக, தேமுதிக வேட்பாளர்களுக்கு வேலை செய்தனர்.
மதுரை
மதுரை மாநகரில் உள்ள 100 வார்டுகளும் ஒன்பது பகுதிகளுக்குள் வருகிறது. இந்த ஒன்பது பகுதிகளுக்கும் தேமுதிக வேட்பாளர் சிவமுத்துகுமாருக்கு தேர்தல் பணியாற்ற பொறுப்பாளர்களை நியமித்தார் அழகிரி. ஒன்று மற்றும் இரண்டாம் பகுதிகளுக்கு இசக்கிமுத்துவையும் மூன்று, நான்காம் பகுதிகளுக்கு பி.எம். மன்னன், சின்னான் ஆகியோரும் ஐந்தாம் பகுதிக்கு மிசா பாண்டியன், ஆறாம் பகுதிக்கு கவுஸ் பாஷாவையும் ஏழு, எட்டாம் பகுதிகளுக்கு உதயகுமார், முருகன் ஆகியோரும் ஒன்பதாம் பகுதிக்கு ராமலிங்கத்தையும் பொறுப்பாளர்களாக நியமித்தார்.
தேமுதிக
இவர்களுக்கு தேமுதிக சார்பாக வாகன வசதியும் அலுவலக வசதியும் செய்யப்பட்டுள்ளது. தங்கள் பகுதியில் உள்ள வார்டுகளில் அழகிரி ஆதரவாளர்களை ஒருங்கிணைத்து தேர்தல் நாளன்று தேமுதிகவுக்கு வாக்களிக்க ஏற்பாடுகளை செய்தனர். இதேபோல் தேனி, விருதுநகர், நெல்லைக்கும் ஆட்களைப் பொறுப்பாளர்களாக நியமித்தார்.
திமுக
திமுக 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று அக்கட்சியின் பொருளாளர் மு.க. ஸ்டாலின் செல்லும் இடங்களில் எல்லாம் கூற அழகிரியின் ஆதரவாளர்களோ திமுகவில் இருந்து கொண்டு மாற்று கட்சிகள் வெற்றி பெற வேலை பார்த்தனர். அதனால் தான் கவுஸ் பாஷா உள்ளிட்ட 10 பேர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்களாம்.