ஞானதேசிகன் சொல்லும் "பிரேக்கிங் பாய்ண்ட்டை" உருவாக்கிய பொதுச்செயலாளர் யார்? பரபரப்பு தகவல்கள்
சென்னை: தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்த ஞானதேசிகன் டெல்லி மேலிடத்துடன் மல்லுக் கட்டி ராஜினாமா செய்யக் காரணமாக இருந்த புதிய பொதுச்செயலாளர் பேராவூரணி மகேந்திரன் எனக் கூறப்படுகிறது.
தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்த ஞானதேசிகன் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது, என்னை ஆலோசிக்காமல் திடீரென ஒரு புதிய பொதுச்செயலாளரை நியமித்தது மேலிடம்.. அதுதான் பிரேக்கிங் பாய்ண்ட். என்ட்" என்று கூறினார்.
அதாவது இந்த புதிய பொதுச்செயலாளர் நியமனம் தொடர்பாக மேலிடப் பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக்குடன் ஞானதேசிகன் நடத்திய விவாதம் முற்றியது. அதனைத் தொடர்ந்து உறுப்பினர் அட்டையில் மூப்பனார் படம் போட வேண்டும் என்று ஞானதேசிகன் அடம்பிடிக்க அதனையும் மேலிடம் நிராகரித்தது.
யார் இந்த புதிய பொதுச்செயலாளர்? கடந்த சட்டசபை தேர்தலில் பேராவூரணி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டவர் மகேந்திரன். ராகுல் ஆதரவு பெற்ற இவர் பேராவூரணி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார்.
அப்போது ஜி.கே.வாசன் குடும்பத்தினர் இதை ரசிக்கவில்லை. இந்த நிலையில் திடீரென மகேந்திரனை காங்கிரஸ் பொதுச்செயலாளர்களில் ஒருவராக காங்கிரஸ் மேலிடம் அறிவித்தது.
தஞ்சாவூர் பகுதியில் காங்கிரஸ் கட்சி என்றாலே ஜி.கே.வாசன் குடும்பம்தான் என்ற ஆதிக்கம் இருந்து வருகிறது. இந்த நிலையில் ராகுல் ஆதரவுடன் மகேந்திரன் களம் இறக்கப்பட்டதை ஜி.கே.வாசன் மற்றும் அவரது குடும்பத்தினரும் விரும்பவில்லை.
இதனால் ஜி.கே.வாசனின் தூண்டுதலில் மகேந்திரன் நியமனத்தை ரத்து செய்ய வைக்க ஞானதேசிகன் டெல்லிக்குப் போனார். ஆனால் அங்கு ஞானதேசிகன் கருத்தை தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக் நிராகரித்துவிட்டார்.
அப்போதுதான் உறுப்பினர் அட்டையில் மூப்பனார் படம் போடும் விவகாரமும் நடந்துள்ளது. இந்த விவகாரத்தைத்தான் மறைமுக "பிரேக்கிங் பாய்ண்ட்" என்று சென்னையில் இன்று ஞானதேசிகன் குறிப்பிட்டார்.