7 தமிழர் விடுதலையில் முடிவெடுக்க ஆளுநர் தாமதம் ஏன்?
சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 தமிழர்களையும் விடுதலை செய்ய, ஆளுநர் ஏன் காலதாமதம் செய்து வருகிறார் என்பது புரியாத புதிராக உள்ளது.
பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களையும் மாநில அரசு தனது அதிகாரத்தின் கீழ் விடுதலை செய்து உத்தரவிட முடியும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்ற போதிலும் கூட அவசரமாக கூடியது தமிழக சட்டசபை.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் சட்டப் பிரிவு 161ன்கீழ், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்வது என்று தீர்மானிக்கப்பட்டு அந்த பரிந்துரை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அனுப்பிவைக்கப்பட்டது.
காலம் கடத்த வேண்டாமே
அரசு முடிவு எடுத்த பிறகும் கூட ஆளுநர் இன்னும் அதற்கு ஒப்புதல் தராமல் இழுத்தடிப்பு செய்து வருகிறார். இது சட்டப்படியோ அல்லது தார்மீகப்படியோ, எந்த வகையிலும் நியாயம் ஆகாது என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள். குற்றவியல் நீதித்துறை நடைமுறை என்பது ஒரு குற்றவாளியை அவரது ஆயுள் காலம் முழுக்க சிறையில் அடைத்து கொடுமை படுத்துவது கிடையாது. அதன் நோக்கம் என்பது குற்றவாளியை திருத்தி மீண்டும் அவரை நல்ல மனிதராக சமூகத்தில் வாழ அனுமதிப்பதுதான்.
இவ்வளவு நீண்ட காலம் தேவையா
இந்த குற்றவியல் நீதி முறை நடைமுறைக்கு எதிரானதாகவே பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் சிறைவாசம் உள்ளது. அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 27 வருடங்கள் சிறையில் அவர்கள் வாழ்க்கை கடந்து விட்டது. இது ஆயுள் தண்டனை காலத்தை விட கிட்டத்தட்ட இரு மடங்கு அதிகம். மேலும், அவர்களை சிறையில் அடைத்து வைத்திருக்க வேண்டும் என்பது இந்திய நீதித்துறை நடவடிக்கைக்கு எதிரான செயல் என்பது எந்த மாற்றமும் கிடையாது.
சட்டத்தை மதிப்பதே இறையாண்மை
இதில் வேடிக்கை என்னவென்றால் இந்திய இறையாண்மை குறித்து பேசுவோர்தான் இந்திய நீதித்துறை செயல்பாட்டிற்கு எதிராக இந்த ஏழு பேரையும் சிறையில் வைத்திருக்க வேண்டும் என்றும் கருதுகிறார்கள். இதன்மூலம் உண்மையிலேயே இவர்கள் இந்திய இறையாண்மை மீது நம்பிக்கை கொண்டவர்களா அல்லது சுய காழ்ப்புணர்ச்சி கொண்டவர்களா என்ற எண்ணம் அனைத்து மக்களுக்கும் எழுகிறது.
உச்சநீதிமன்றமே சொல்லியாகிவிட்டது
இந்த நாட்டின் உச்சபட்ச சட்டவியல் அமைப்பான உச்சநீதிமன்றமே, தமிழக அரசு தனது முடிவை எடுத்துக் கொள்ளலாம் என்று அறிவித்து விட்ட பிறகு, இன்னும் எதற்காக தமிழக அரசின் முடிவை அமல்படுத்த ஆளுநர் தயங்குகிறார் என்ற கேள்வி எழுந்து நிற்கிறது. உச்சநீதிமன்றம் கூறியதையும் ஏற்க மாட்டோம், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாநில அரசு முடிவையும் ஏற்க மாட்டோம் என்று சிலர் கூறுவதை வைத்து பார்த்தால் இங்கு சட்டத்தின் ஆட்சி தான் நடக்கிறதா என்ற கேள்வி எழுகிறது.
அனைத்து வாசல்களும் திறப்பு
அனைத்து சட்ட வழிமுறைகளும், தார்மீக வழிமுறைகளும் திறந்து உள்ள நிலையிலும், இன்னும் ஆளுநர் 7 பேர் விடுதலையில் முடிவு எடுக்காமல் இருப்பது சரியான போக்கு அல்ல என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள். இதற்கு மேலும் மத்திய அரசின் ஒப்புதலை ஆளுநர் கேட்க வேண்டிய தேவை இல்லை. அவ்வாறு கேட்டாலோ அல்லது அமைச்சரவைக்கே, அதன் பரிந்துரையை திருப்பி அனுப்பினாலோ அது சட்டம் மற்றும் தார்மீகம் ஆகிய இரண்டுமே எதிரானது என்றும், இன்னும் சொல்லப் போனால் மக்களாட்சி நடைமுறைக்கும் மாறானாதிகிவிடும் ஆபத்து உள்ளது என்று சட்ட வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். இருப்பினும் ஆளுநர் முடிவே இதில் இறுதியானது என்பதால், அவர் முடிவுக்காக மக்கள் காத்திருக்கிறார்கள்.