போயஸ் கார்டனுக்கு நெருக்கமான சேகர் ரெட்டிக்கும் ராமமோகன் ராவுக்கும் என்ன 'லிங்க்'?
தமிழகத்தில் முதல் முறையாக தலைமை செயலர் வீட்டில் ஐடி அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். கான்டிராக்டர் சேகர் ரெட்டியுடன் தொடர்பில் இருந்ததற்கான ஆவணங்கள் கிடைத்ததால் இந்த சோதனை நடத்தப்படுகிறது.
சென்னை: சர்ச்சைக்குரிய சேகர் ரெட்டியை தமிழக அரசின் முதன்மை கான்டிராக்டராக்கியதில் தலைமை செயலர் ராமமோகன் ராவுக்கு முக்கிய பங்கு இருப்பதாலேயே அவரது வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்துவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழக அரசின் தலைமை செயலராக ராமமோகன் ராவை ஜெயலலிதா நியமித்தபோதே சர்ச்சைகள் எழுந்தன. மூத்த அதிகாரிகளை ஓரம்கட்டிவிட்டு ராமமோகன் ராவுக்கு தலைமைச் செயலர் பதவி தரப்பட்டதாக கூறப்பட்டது.
ராமமோகன் ராவுடனான நெருக்கம் மூலமே மணல் எடுக்கும் உரிமை ஒட்டுமொத்தமாக சேகர் ரெட்டிக்கு கொடுக்கப்பட்டதாம். இந்த தொடர்பில்தான் போயஸ் கார்டன் மற்றும் மூத்த அமைச்சர்களுடன் சேகர் ரெட்டிக்கு தொடர்பு உருவானதாம்.
சேகர் ரெட்டி வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் சிக்கிய ஆவணங்களில் ராமமோகன் ராவ் தொடர்பு குறித்தவையே அதிகம் இருந்ததாம். இதையடுத்து முதலில் ராமமோகன் ராவ் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து சேகர் ரெட்டியுடன் தொடர்பில் இருந்த மூத்த அமைச்சர்கள் வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தக் கூடும் எனவும் கூறப்படுகிறது. தமிழகத்தில் தலைமை செயலர் ஒருவரது வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்துவது இதுவே முதல் முறை என கூறப்படுகிறது.