ஜெ. மரணம்.. சாமானியனுக்கு எழுந்த சந்தேகம் பன்னீர்செல்வத்திற்கு வராதது ஏன்?
ஜெயலலிதா மரணம் குறித்து படிக்காத பாமர மக்களுக்கே சந்தேகம் எழுந்த நிலையில், கிட்டத்தட்ட அப்பல்லோ மருத்துவமனைக்கு தினமும் சென்று வந்த ஓ.பன்னீர் செல்வத்துக்கு எழாதிருந்தது ஏன்? என்று பொதுமக்கள் கேள்வி எ
சென்னை: ஜெயலலிதா மரணம் குறித்து படிக்காத பாமர மக்களுக்கே சந்தேகம் எழுந்த நிலையில், கிட்டதட்ட மருத்துவமனையை சுற்றி வந்த ஓ.பன்னீர் செல்வத்துக்கு எழாதிருந்தது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
சமயோஜித புத்தி, புத்தி கூர்மை, திறமை, நுனி நாக்கில் ஆங்கிலம், 5 மொழிகளில் புலமை, எதிர்நீச்சல் போடும் தைரியம் ஆகியவற்றை கொண்டவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா.
அவர் எடுக்கும் தடாலடி முடிவுகளிலும் (ஒரு சில) நியாயம் இருப்பதாக மக்கள் கருதியதால் அண்ணா, எம்ஜிஆருக்கு அடுத்த படியாக மக்கள் செல்வாக்கை பெற்றிருந்தவர் என்றே கூறலாம்.
பெண் சிங்கம்
பெண்ணாக இருந்தாலும் அவர் நேர்ந்த சோதனைகளை சாதனைகளாக மாற்றி எதிர் நீச்சல் போட்டு 6 கோடி தமிழர்களின் மனதில் பெண் சிங்கமாக வலம் வந்தவர் ஜெயலலிதா. அவரின் நிர்வாக திறமையை அண்டைய மாநிலங்களும் மெச்சும் அளவுக்கு இருந்தன. ஜெயலலிதா ஆட்சியில் ஒருவர் ஊழல் புரிந்தாரேயானால் அடுத்த நிமிடமே அவரை போயஸ் தோட்டத்துக்கு வரவழைத்து அர்ச்சனை செய்து விடுவார். மேலும் அவரிடம் இருக்கும் பதவிகளும் பறிக்கப்படும். இதனால் ஜெயலலிதா ஆட்சியில் அந்த அளவுக்கு ஊழல் நடக்காது என்பது பொதுமக்களின் நம்பிக்கை.
தூக்கிவிடுவார்
கட்சிக்கு விசுவாசமாகவும், அரசுக்கு நேர்மையாகவும் இருப்பவர்கள் ஜெயலலிதாவின் குட்வில் லிஸ்டில் வைத்திருப்பார். அவர்களுக்கு சமயம் வரும்போது நல்ல வாய்ப்புகளை கொடுப்பார். இப்படி இவரது குட்வில் லிஸ்டில் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏ-க்கள், ஐஏஎஸ் அதிகாரிகள், ஐபிஎஸ் அதிகாரிகள், அரசு அதிகாரிகள் என ஏராளமானோர் இடம்பெற்றனர். அந்த வகையில் சாதாரண தொண்டன் மீதும் ஜெயலலிதாவின் கடைக்கண் பட்டால் போதும் யோகம் அடித்து எங்கோ இருந்தவரை 6 கோடி மக்களும் அறியும் படி புகழின் உச்சிக்கே சென்றுவிடுவர்.
ஓபிஎஸ்ஸின் விசுவாசம்
ஓபிஎஸ்ஸின் விசுவாசம் அந்த வகையில் பெரியகுளத்தில் எங்கோ டீக்கடை வைத்திருந்த ஓ.பன்னீர் செல்வம் என்ற அதிமுக தொண்டனுக்கு அவரது விசுவாசம் காரணமாக 1996-ஆம் ஆண்டு பெரியகுளம் நகர்மன்றத் தலைவர் பதவியை அளித்து அழகு பார்த்தார். பின்னர் எம்எல்ஏ தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு, கட்சிகளில் பலபதவிகளை அளித்தார். ஜெயலலிதா சிறை சென்றபோது 2 முறை அவரை முதல்வராக்கினார். பின்னர் ஜெயலலிதா மறைந்த பின்னர் மூன்றாவது முறையாக முதல்வராக பொறுப்பேற்ற அவர் 70 நாள்களுக்கு பிறகு உள்கட்சி பூசல் காரணமாக அப்பதவியை ராஜினாமா செய்தார்.
மருத்துவமனையில் என்ன செய்தார்?
ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 75 நாள்கள் அவரது நிலை என்ன என்பது குறித்து அமைச்சர்களுக்கு தெரியாமலா இருக்கும். தற்போது அதிமுக பொதுச் செயலாளராக உள்ள சசிகலாவை விரட்ட முடிந்த பன்னீரால் அப்போது அமைச்சர் பதவியை பயன்படுத்தி சாதாரண உதவியாளர் சசிகலாவை அங்கிருந்து விரட்டி ஜெயலலிதாவுக்கு அளிக்கப்படும்ச சிகிச்சை குறித்து தெரிந்து கொள்ள முடியாதா என்ன. அதை ஏன் செய்யவில்லை. சரி அப்போது தான் முடியவில்லை. முதல்வராகவும், உள்துறை அமைச்சராகவும் 70 நாள்கள் இருந்த போது நீதி விசாரணைக்கு உத்தரவிட்டு சசிகலா கோஷ்டிக்கு ஒரு முடிவு கட்டியிருக்கலாமே. வாலை விட்டு தும்பை பிடித்த கதையாக எடப்பாடி அரசை நிர்பந்திப்பது என்ன நியாயம்?
மழுப்பல் பதில்
அதிமுக இணைவுக்கு முன்னர், ஜெயலலிதா மரணத்தை ஓபிஎஸ் கையில் எடுத்தபோதெல்லாம் எடப்பாடி அணியினர் முதல்வராக இருந்த போது பன்னீர் என்ன செய்தார் என்று கேட்டனர். அதற்கு அவர் மார்ச் 8-ஆம் தேதி நடந்த உண்ணாவிரதத்தின்போது ஜெயலலிதா மரணத்தில் பொதுமக்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளதால் அதை தீர்க்க வேண்டியது மாநில அரசின் கடமை. அதனால்தான் கேட்கிறே்ன் என்றார்.அப்படியே வைத்துக் கொள்வோம். அவரது மரணத்தில் படிக்காத பாமரனுக்கே சந்தேகம் எழுந்துள்ளபோது ஜெயலலிதாவை தினமும் சந்திக்கும் அதிகாரம் படைத்த அவருக்கு ஏன் சந்தேகம் எழவில்லை.
கோட்டைக்கு சென்றவர் கோட்டை விட்டார்
ஜெயலலிதா மரண விவகாரத்திலும் சரி, சசிகலாவுக்கு பொதுச் செயலாளர் பதவியை வாரி கொடுத்தது என அனைத்திலும் அதிகாரம் இருக்கும்போது செயல்படாமல் தற்போது வெறும் 11 எம்எல்ஏ-க்களை வைத்துக் கொண்டு நீதி விசாரணை வேண்டும், சசிகலா ராஜினாமா செய்ய வேண்டும் என்றால் நடக்குமா என்று பொதுமக்கள் முணுமுணுக்க தொடங்கியுள்ளனர். இது இவருக்கு மட்டுமல்ல. ஜெயலலிதா மரணம் குறித்து கேள்வி எழுப்பும் அனைத்து முன்னாள், இன்னாள் நிர்வாகிகளுக்கும் இது பொருந்தும்.