54 இடங்களில் கத்திக் குத்து.. இரட்டை தூக்குத் தண்டனை விதித்து நீதிபதி அளித்த தீர்ப்பு!
கோவை: கோவையில் தாய், இரு குழந்தைகளை மிகக் கொடூரமாகக் கொன்ற கொலையாளி செந்திலுக்கு இரட்டை தூக்கு மற்றும் இரட்டை ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ள மகிளா கோர்ட் நீதிபதி தான் இவ்வளவு கடுமையான தீர்ப்பு அளிக்க என்ன காரணம் என்பதை தனது தீர்ப்பில் விளக்கியுள்ளார்.
தமிழகத்தை நேற்று பெரும் பரபரப்பில் ஆழ்த்தி விட்டது கோவையில் 3 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி செந்திலுக்கு கோவை மகிளா நீதிமன்றம் அளித்த கடுமையான தீர்ப்பு. நீதிபதி சுப்பிரமணியன், குற்றவாளி செந்திலுக்கு இரட்டை ஆயுள் மற்றும் இரட்டைத் தூக்குத் தண்டனை விதித்து அனைவரையும் அதிர வைத்தார்.
இவ்வளவு கடுமையான தண்டனை தரும் அளவுக்கு செந்தில் செய்த குற்றம்தான் என்ன.. மிகக் கொடுமையானது இவர் செய்த குற்றம்....
நடந்தது இதுதான்....
கோவை சத்தியமங்கலம் சாலை ராமகிருஷ்ணாபுரம், ரங்கநாதன் வீதியைச் சேர்ந்தவர் மருதமாணிக்கம் (30) தனியார் நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றினார். இவரது மனைவி வத்சலா தேவி (27). இந்த தம்பதிக்கு முகிலன் (6) என்ற மகனும், பிரனீத் என்ற 11 மாத பெண் குழந்தையும் இருந்தனர்.
மருதமாணிக்கத்தின் வீட்டின் ஒரு பகுதியில், சிவகங்கை மாவட்டம் ராஜகம்பீரம் கிராமத்தைச் சேர்ந்த செந்தில் (32) என்பவர் தனது மனைவி லீலாவதியுடன், வாடகைக்கு குடியிருந்தார். கனவருடன் ஏற்பட்ட பிரிவு காரணமாக லீலாவதி அவரை விட்டுப் போய் விட்டார். செந்தில் மட்டும் தனியாக இருந்து வந்தார். இந்த நிலையில் மருதமாணிக்கத்தின் மனைவி மீது செந்திலின் பார்வை விழுந்தது. அவரிடம் உள்நோக்கத்துடன் பழகத் தொடங்கினார்.
இது வத்சலா தேவிக்குத் தெரிய வரவே, அவர் உஷாராகி விட்டார். செந்திலை காலி செய்யச் சொல்லி விட்டார். இதையடுத்து செந்தில் வீட்டைக் காலி செய்யும் நிலை ஏற்பட்டது. அவர் கொடுத்திருந்த முன்பணம், 8,000 ரூபாயில், வீடு காலி செய்யும் போது 5,3௦௦ ரூபாயை திருப்பிக் கொடுத்தனர். மீதி பணத்தை வாங்குவதற்காக 2014ம் ஆண்டு ஜூன் 1ம் தேதி காலை, வத்சலா தேவி வீட்டிற்கு செந்தில் சென்றார். அப்போது, வத்சலாதேவியின் தாயார் கோவிந்தம்மாள், வேறு ஆட்கள் வாடகைக்கு வந்தபின், அட்வான்ஸ் பணத்தில் மீதியை வாங்கி தருவதாக கூறி செந்திலை திருப்பி அனுப்பிவிட்டார்.
இதையடுத்து திரும்பிய செந்தில், அன்று மாலை மீண்டும் அங்கு வந்தார். வீட்டில் வத்சலதேவி மட்டுமே இருப்பதைப் பார்த்த அவர் தன்னுடன் உல்லாசமாக இருக்குமாறு வத்சலாதேவியை வற்புறுத்தினார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த வத்சலா தேவி அலறிக் கூச்சல் போட்டார். ஆத்திரமடைந்த செந்தில், வத்சலாதேவியின் வாயைப் பொத்தி, கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்தார். இதை பார்த்த 6 வயது மகன் முகிலன் அழவே, அவனையும் குத்தி கொன்றார். அப்போதும், ஆத்திரம் தீராமல் தொட்டிலில் துாங்கி கொண்டிருந்த, 11 மாத குழந்தை பிரனீத்தையும் குத்தி கொன்றார். வத்சலாதேவி கழுத்தில் கிடந்த, 4 பவுன் தங்கச் செயினை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார்.
போலீஸார் வழக்குப் பதிவு செய்து செந்திலைக் கைது செய்தனர். அவர் மீது வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கி்தான் நேற்று நீதிபதி சுப்பிரமணியன் கடுமையான தண்டனையை விதித்து தீர்ப்பளித்தார்.
மிகக் கொடூரமான கொலை
நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளதாவது:
வத்சலாதேவியை அடைய வேண்டும் என்ற, காமவெறியுடன், இந்த குற்றவாளி, வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். அந்த பெண் உடன்படாததால், வெளியே சொல்லி விடுவாரோ என்ற அச்சத்தில், அவரை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.
ஆறு வயது சிறுவன் முகிலனையும், தொட்டிலில் துாங்கி கொண்டிருந்த, 11 மாத கைக்குழந்தையையும் கொடூரமாக குத்தி கொலை செய்தது நிரூபிக்கப்பட்டுள்ளது.
குற்றவாளி, அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்ததை நேரில் பார்த்த சாட்சிகள், தங்களது சாட்சியத்தில் உறுதிப்படுத்தியுள்ளனர். வத்சலாதேவியின் மஞ்சள் தாலிக் கயிற்றில் படிந்திருந்த ரத்தமும், குற்றவாளி விரலில் இருந்த காயத்தின் ரத்தமும் ஒன்று தான் என, மருத்துவ மற்றும் கைரேகை நிபுணர்களால் நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஒரு பாவமும் அறியாத இரு குழந்தைகளை கொன்ற இவ்வழக்கு, அரிதிலும் அரிதானது. மூன்று பேரின் உடலில், 54 இடங்களில், கத்தியால் குத்தப்பட்ட காயங்கள் இருந்தது, பிரேதப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது. உலகம் என்னவென்று அறிந்திராத, ஒரு பாவமும் அறியாத, தங்களை பாதுகாத்து கொள்ள முடியாத சூல்நிலையில் இருந்த இரு குழந்தைகள் மிக கொடூரமாக கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த கொலைகள் சந்தர்ப்ப சூழ்நிலையாலோ, எதேச்சையாகவோ நடந்த கொலை அல்ல. சம்பவத்தை வெளியே சொல்லி விடுவார்கள் என்ற எண்ணத்தில், தன்னை பாதுகாத்து கொள்ள நடத்தப்பட்ட கொலை.
இந்தியாவில், கடந்த 2001 முதல் 2011 வரை, 1455 வழக்கில், மரண தண்டனை அளிக்கப்பட்டுள்ளதாக, தேசிய குற்ற ஆவண பதிவகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், 2014-வரை, 4201 மரண தண்டனைகள், ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளன.
அமர்வு நீதிமன்றம், உயர் நீதிமன்றம், உச்சநீதிமன்றம் உள்ளிட்ட கோர்ட்டுகளில் அரிதான வழக்குகளில் மரண தண்டனை கொடுத்தாலும், நீதிமன்ற முடிவுக்கு பிறகு, நிர்வாகம் கருணை காட்டினால், மரண தண்டனை, ஆயுளாக குறைக்கப்படுகிறது.
எந்தெந்த சூழ்நிலையில், ஒரு வழக்கை, அரிதிலும் அரிதான வழக்காக எடுத்து கொள்ள வேண்டும் என்று, உச்சநீதிமன்றம் தெளிவான வழிகாட்டிகளை எடுத்துக்காட்டியுள்ளது. அதன்படி, இவ்வழக்கில், குற்றவாளி மீது கருணை காட்ட வழியே இல்லை. அரிதிலும் அரிதான இவ்வழக்கில் குற்றவாளிக்கு அதிக பட்ச தண்டனை விதிக்கப்படுகிறது என நீதிபதி சுப்பிரமணியன் கூறியுள்ளார்.