வாசன் வரலாற்றிலேயே முதல் முறையாக .. லோக்சபா தேர்தலில் போட்டி!.. சென்னையில் நிற்பாரா?
சென்னை: ஜி.கே.வாசன் இதுவரை மக்களை நேரில் சந்தித்து எந்தத் தேர்தலிலும் போட்டியிட்டதில்லை. கவுன்சிலர் தேர்தல் முதல் லோக்சபா தேர்தல் வரை எதிலும் அவர் போட்டியிட்டதில்லை. இந்த நிலையில் முதல் முறையாக வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ளார்.
அவருக்கு இந்த நிலை ஏற்பட முக்கியக் காரணமே, தற்போது அவர் வகித்து வந்த ராஜ்யசபா எம். பி பதவியின் ஆயுட்காலம் முடிந்து போனதால்தான்.
மீண்டும் ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடலாம் என்றால், அதற்குரிய பலம் தமிழக காங்கிரஸிடமும் இல்லை, கூட்டணிக் கட்சிகளும் இங்கு சிதறிப் போய் விட்டன. எனவே அந்த பாக்கியம் மறுபடியும் வாசனுக்குக் கிடைக்காமல் போய் விட்டது. இதனால் மக்களை சந்தித்து தேர்தலில் போட்டியிட வாசன் தீர்மானித்து விட்டாராம்.
சரி எங்க போட்டியிடலாம்
ஆனால் வரும் தேர்தலில் எந்தத் தொகுதியில் போட்டியிடுவது என்பதை வாசன் இன்னும் இறுதி செய்யவில்லையாம்.
கூட்டணி வேற இல்லையே
வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அனேகமாக தனித்துத்தான் போட்டியிடும் நிலை ஏற்படும் என்று தெரிகிறது. இதுவும் வாசனின் யோசனைக்கு முக்கியக் காரணமாம்.
சென்னையில் போட்டியிடலாம்
அதேசமயம், தற்போதைக்கு 2 தொகுதிகளை வாசன் யோசித்து வைத்திருப்பதாக சொல்கிறார்கள். அதாவது தென் சென்னை மற்றும் மயிலாடுதுறை.
மயிலாடுதுறை சொந்த மாவட்டம்
மயிலாடுதுறை தொகுதியானது வாசனின் சொந்த மாவட்டமான தஞ்சையைச் சேர்ந்ததாகும். மூப்பனாருக்கு இன்னும் இங்கு நல்ல மரியாதையும், ஆதரவும் உள்ளது. மூப்பனார் மகன் என்ற பெயரை வைத்து இங்கு எளிதாக வென்று விடலாம் என்று வாசன் ஆதரவாளர்கள் கருதுகிறார்களாம்.
அதிமுகவிடமிருந்து கைப்பற்ற முடியுமா
அதேசமயம், தென் சென்னை தற்போது அதிமுக வசம் உள்ள தொகுதியாகும். இதை அதிமுகவிடமிருந்து கைப்பற்ற முடியுமா என்ற கேள்வியும் எழுகிறது.
திமுகவின் மறைமுக ஆதரவைப் பெற்று
இரு தொகுதிகளில் எதில் போட்டியிட்டாலும் திமுகவின் மறைமுக ஆதரவைப் பெற வாசன் முயற்சிக்கிறார் என்றும் செய்திகள் அடிபடுகின்றன. வாசன் மீது திமுகவுக்குத் தனிப்பட்ட முறையில் பாசம் உள்ளது. எனவே வாசன் நின்றால் நிச்சயம் திமுக மறைமுகமாக அவருக்கு ஆதரவைத் தரலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
ஆகட்டும்... பார்க்கலாம் .. இது மூப்பனார் அடிக்கடி சொல்வது.. பார்க்கலாம், வாசன் வெல்கிறாரா என்று.