இனிமே சினிமா தியேட்டர் பக்கம் யாராவது படம் பார்க்க வருவாங்களா?
கேளிக்கை வரி விதிக்கப்பட்டுள்ளதால் தியேட்டர்களில் சினிமா டிக்கெட் விலையை உயர்த்த அரசு அனுமதி அளித்துள்ளதால் டிக்கெட் விலை தாறுமாறு தக்காளி சோறுதான்.
சென்னை: சினிமா தியேட்டர்களில் சும்மாவே படம் பார்க்க 4 பேர் கொண்ட குடும்பத்திற்கு குறைந்த பட்சம் 2500 ரூபாய் செலவாகிவிடும். இப்போது கட்டணம் அதிரிபுதிரியாக உயர்த்தப்பட்டுள்ளதால் மக்களின் பொழுதுபோக்கு செலவு பட்ஜெட் தாறுமாறாக எகிறப் போகிறது.
100 ரூபாய்க்கு குறைவான கட்டணம் உள்ள டிக்கெட்டுகளுக்கு 18 சதவீதமும் 100 ரூபாய்க்கு அதிகமான கட்டணம் உள்ள டிக்கெட்டுகளுக்கு 28 சதவீதமும் ஜிஎஸ்டி வரி நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
கடந்த ஜூலை 1ஆம் தேதியில் இருந்து இந்த வரி விதிப்பு முறை அமுலுக்கு வந்துவிட்டது. ஆனாலும் உள்ளாட்சி கேளிக்கை வரி, ஜி.எஸ்.டி வரி என்று இரட்டை வரிகளை செலுத்த முடியாது என்று தமிழக தியேட்டர் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
டிக்கெட் கட்டணம் உயர்வு
இந்த நிலையில், திரையரங்கு கட்டணத்தை உயர்த்திக் கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. சென்னையில் மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் அதிகபட்சமாக ரூ.160 கட்டணமாக வசூலிக்கலாம் என நிர்ணயித்துள்ளது.
பிற நகரங்களில் கட்டணம்
மற்ற நகரங்களில் உள்ள மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் ரூ.140 கட்டணமாக வசூலிக்கலாம் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னை தவிர மற்ற நகரங்களில் ஏ.சி. தியேட்டர்களில் அதிகபட்ச கட்டணம் ரூ.140ம் குறைந்த பட்சம் ரூ.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
டிக்கெட் விலை அதிகரிப்பு
ஏ.சி. இல்லாத திரையரங்கில் அதிகபட்சம் ரூ.100, குறைந்தபட்சம் ரூ.30 நிர்யணம் செய்ய தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. திரையரங்குகளில் உயர்த்தப்பட்டுள்ள புதிய சினிமா கட்டணம் திங்கட்கிழமை முதல் அமலுக்கு வருகிறது.
பொழுது போக்கு பட்ஜெட்
சென்னையில் மல்டி பிளக்ஸ் தியேட்டர்களில் ஏற்கனவே ரூ.120, ரூ.100, ரூ.10 கட்டணத்தில் டிக்கெட் விலைகள் இருந்தன. வரியோடு 158 ரூபாய் வசூலித்தனர். திங்கட்கிழமை முதல்160 ரூபாய் ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வரியுடனா? வரியில்லாமலா? என்று விளக்கம் அளிக்கப்படவில்லை.
பொழுது போக்கு பட்ஜெட் வீங்கும்
மாதம் ஒருமுறை தியேட்டருக்கு படம் பார்க்க செல்பவர்களின் பட்ஜெட் இனி அதிகரிக்கத்தான் செய்யும். அவர்களும் இனி இந்திய தொலைக்காட்சிகளில் முதன்முறையாக என்று டிவிகளில் விளம்பரத்துடன் புதிய படங்களை பார்த்து திருப்தி பட்டுக்கொள்வார்கள்.
மீண்டும் பேசுவோம்
மக்கள் கொதித்துப் போயுள்ள நிலையில், அரசு நிர்ணயம் செய்துள்ள கட்டணம் தங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை என்று தயாரிப்பாளர் சங்கம் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளனர். மிண்டும் வரும் திங்கட்கிழமை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
நீங்க நல்லா பேசுங்கய்யா.. மக்களும் கூடிக் கூடிப் பேச ஆரம்பித்து விட்டார்கள்!