தமிழகத்திற்கு நல்லது செய்வேன்னு சொல்லும் ரஜினி சார்... உங்க நண்பர் சொன்னதை கேட்டீங்களா?
தமிழகத்திற்கு எக்காரணம் கொண்டும் தண்ணீர் திறக்கக் கூடாது என்று தனது நெருங்கிய நண்பர் அம்பரீஷ் கூறுவது நடிகர் ரஜினிகாந்தின் கவனத்திற்கு சென்றதா?
Recommended Video
சென்னை : தமிழக மக்களுக்கு நல்லதே செய்யவே அரசியலுக்கு வருவதாகவும், மற்ற மாநிலங்கள் தமிழகத்தை பார்த்து சிரிப்பதாகவும் ஆதங்கப்பட்ட ரஜினி தான் அரசியலுக்கு வருவது உறுதி என்று அறிவித்தார். இந்நிலையில் அண்டை மாநிலமான கர்நாடகாவில் உள்ள ரஜினியின் நண்பர் அம்பரீஷ் தமிழகத்திற்கு காவிரி நீர் தரவே கூடாது என்று கூறியுள்ள விவகாரத்தில் ரஜினியின் பதில் என்ன என்ற கேள்வி எழுகிறது.
தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை, தமிழக நிலைமையை பார்த்து மற்ற மாநிலத்தவர் சிரிப்பதாக சொன்னார் ரஜினிகாந்த். தமிழக மக்களுக்கு நல்லது செய்வதற்காக தான் அரசியலுக்கு வருவது உறுதி என்றும் 3 ஆண்டுகள் வரை தனது ரசிகர் மன்றத்தை சார்ந்த யாரும் அரசியல் பற்றி எதுவும் பேசக் கூடாது என்றும் வாய்ப்பூட்டு போட்டார் ரஜினி.
எனினும் அரசியல் வருகை குறித்து அறிவித்த கையோடு உறுப்பினர் சேர்க்கைக்கான படலத்தை அறிவித்தார் ரஜினி. எதிர்பார்த்த அளவிற்கு அதில் உறுப்பினர்கள் பதிவு செய்தனரா என்ற அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை வெளியாகவே இல்லை.
மக்கள் பிரச்னைக்காக குரல் கொடுக்காதவர்
ரஜினி அரசியலுக்கு வருவது விவாதப் பொருளானதற்கு முக்கிய காரணம், அவர் இதுவரை எந்த மக்கள் பிரச்னைக்கும் எதிராக குரல் கொடுக்கவில்லை என்பது காரணமாக சொல்லப்பட்டது. குறிப்பாக விவசாயிகளை அதிகம் பாதிக்கும் காவிரி நீர் விவகாரத்தில் வெளிப்படையாக எந்த கருத்தையும் தெரிவிக்காதவர் ரஜினி என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து சொல்லப்பட்டு வருகிறது.
காவிரி நீருக்காக குரல் கொடுக்காத ரஜினி
தமிழகத்திற்கு காவிரி நீர் வழங்குவது குறித்து கர்நாடகாவிற்கு ஆதரவாகவே ரஜினி செயல்படுகிறார் என்ற கேள்வி விவசாயிகள் ஆண்டாண்டு காலங்களாக ரஜினியை நோக்கி முன் வைத்து வருகின்றனர். காவிரி நீரை பெற்றுத் தர நீதிமன்றத்தின் மூலம் நடவடிக்கை எடுத்தவர் என்பதாலேயே 2016 சட்டமன்ற தேர்தலில் ஜெயலலிதாவிற்கு அது ஒரு சாதனையாக அமைந்தது.
ரஜினி நிலை என்ன?
அந்த அளவிற்கு தமிழக விவசாயிகளின் ஜீவாதார பிரச்னையாக இருப்பது காவிரி நீர் விவகாரம். ரஜினி அரசியலுக்கு வருவதாக அறிவித்துள்ள இந்த சமயத்தில், தமிழகத்திற்கு உரிய காவிரி நீர் பங்கை பெற்று வருவதில் ரஜினியின் நிலைப்பாடு என்ன என்ற கேள்வி எழுகிறது. நடிகர் ரஜினியின் நெருங்கிய நண்பரான அம்பரீஷ் எந்த காரணத்தைக் கொண்டும் தமிழகத்திற்கு காவிரி நீர் தரக்கூடாது என்று முதல்வர் சித்தராமையாவிற்கு கடிதம் எழுதியுள்ளார்.
அம்பரீஷ் கடிதத்திற்கு என்ன பதில்?
தனது நண்பரின் இந்த எதிர்ப்பு கடிதத்திற்கு நடிகர் ரஜினி என்ன பதிலை முன்வைக்கப்போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அரசியல் களத்தில் தமிழக மக்கள் நலனுக்காக செயல்படுவேன் என்று சொன்ன ரஜினி இப்போதாவது காவிரி நீர் விவகாரத்தில் தன்னுடைய நிலைப்பாடு என்ன என்பதை விளக்கும் விதமாக அம்பரீஷ் கடிதத்திற்கு பதிலடி கொடுப்பாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.