எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவே அஞ்சிய விஷயத்தை அசால்ட்டாக சொன்ன ரஜினிகாந்த்!
Recommended Video

சென்னை: ஆன்மீக அரசியல்தான் தனது பாதை என்று நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது, அரசியல் அறிவிப்பு உரையில் குறிப்பிட்டார். இது திராவிட சித்தாந்தத்தில் ஊறிய தமிழகத்திலுள்ள அரசியல் தலைவர்களால் குற்றச்சாட்டாக முன்வைக்கப்படும் வாதமாக மாறியுள்ளது.
ஆன்மீகம் என்பதே மதவாதம்தான் என்கிறார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ரவிக்குமார். ஆன்மீகம் வேறு மதவாதம் வேறு என்று நேற்றைய ரசிகர் சந்திப்பின்போதே ரஜினி குறிப்பிட்டு பேசியிருந்தாலும், அதை ஏற்கும் மனநிலையில் பலரும் இல்லை.
பெரியாரியத்தின் தாக்கம் அதிகமுள்ள தமிழகத்தில், ஆன்மீகம் என்பது அதுவும் இந்து மதம் சார்ந்த ஆன்மீகம் என்பது அரசியலில் கலந்துவிட கூடாது என்பதில் அண்ணா முதல், மறைந்த ஜெயலலிதா வரை அனைவரும் தெளிவாக இருந்தனர்.

எம்ஜிஆர் கொள்கை
அண்ணா, கருணாநிதி போன்ற தலைவர்கள், கடவுள் மறுப்பாளர்களாக அறியப்படுவதால் அவர்களும் ஆன்மீக அரசியல் பற்றி பேசியதில்லை. அதிமுகவை தொடங்கிய எம்ஜிஆர் கடவுள் நம்பிக்கை உள்ளவர். ஜெயலலிதாவும் கடவுள் நம்பிக்கை கொண்டவர். ஆனால் அரசியலுக்கு வந்தபிறகு, எம்ஜிஆர் வெளிப்படையாக கோயில்களுக்கு செல்வதில்லை. ஜெயலலிதாவும் பிற்காலத்தில் அந்த கொள்கையைத்தான் பின்பற்றினார்.

அரசியலில் மதம்
அரசியலில் உள்ளவர்களுக்கு மத நம்பிக்கைகள் இருப்பது அல்லது அதை வெளிக்காட்டுவது என்பது சரியான செயல் அல்ல என்பதை போன்ற சூழல்தான் தமிழகத்தில் நீண்டகாலமாக உள்ளது. இது சரி தவறு என்ற வாதத்திற்கு அப்பாற்பட்டு நிதர்சனம் அதுதான். இதனால்தான் மதத்தை முன்னிறுத்தும் பாஜகவால் தமிழகத்தில் காலூன்ற முடியவில்லை.

ஜெயலலிதாவுக்கு அதிர்ச்சி
ஜெயலலிதா அவ்வப்போது இந்த சூழலை உடைக்க முற்பட்டுள்ளார். ஆனால் கையில் சூடுபட்டுக்கொண்டார். உதாரணத்திற்கு, 2003ல் கொண்டுவந்த கட்டாய மதமாற்ற தடைச் சட்டத்தை சொல்லலாம். அதற்கு அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தலில், அதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றிபெற முடியவில்லை. இதன்பிறகு அந்த சட்டத்தை திரும்ப பெற்றதோடு, அனைத்து மதத்தவர்களுக்கும் பொதுவானவர் என்பதை போன்ற இமேஜை அதிகரித்தார். பிரதமர் நரேந்திர மோடியோடு நட்பு இருந்தபோதிலும், பாஜகவோடு கூட்டணி வைக்கப்போவதேயில்லை என்பதில் உறுதிகாட்டினார்.

ஆன்மீக அரசியல் விளக்கம்
இதுபோன்ற ஒரு சூழ்நிலையில்தான், ரஜினிகாந்த் தைரியமாக, ஆன்மீக அரசியல் செய்யப்போவதாக அறிவித்துள்ளார். உண்மை, நாணயம் என்பதுதான் ஆன்மீக அரசியல் என்பதன் நோக்கம் என்கிறார். ஆன்மீக நம்பிக்கை இல்லாதவர்கள் நேர்மையற்றவர்களா என்ற கேள்வியையும் அவரது பதில் சேர்ந்தே கிளப்புகிறது. நாம் ஏற்னவே குறிப்பிட்டபடி, மதச்சார்பற்ற அரசியலுக்கு முக்கியத்துவம் தரும் தமிழக மக்கள், ஆன்மீக அரசியலை ஏற்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

புதுமுயற்சிகள்
பகவத் கீதையில் அர்ச்சுனனுக்கு, கண்ணன் கூறிய உபதேசத்தை உதாரணமாக சொல்லிதான், தனது அரசியல் உரையை ரஜினிகாந்த் ஆரம்பித்தார். பொதுவாக இந்து மத நூல் வரிகளை மேற்கோள் காட்டி தமிழக சூழலில் எந்த அரசியல்வாதியும் பேசியதில்லை. அதேநேரம், தனது கட்சி மதம், ஜாதிக்கு அப்பாற்பட்டது என்று ரஜினி கூறியிருப்பது அவரின் ஆன்மீக நம்பிக்கையை பிறரிடம் திணிக்க மாட்டார் என்ற உறுதியையும் சேர்ந்தே அளிக்கிறது என்பது கவனிக்கத்தக்கது.












Click it and Unblock the Notifications