தாய்க் கழகத்துடன் கை கோர்க்கிறாரா வைகோ... 11 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக மேடையேறுகிறார்!
திமுக கூட்டணியில் இருந்து விலகிய வைகோ ஏறத்தாழ 11 ஆண்டுகளுக்குப் பிறகு திமுகவின் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார், இதனால் அவர் தாய்க்கழகத்துடன் மீண்டும் கைகோர்ப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Recommended Video
சென்னை : முரசொலி பவளவிழாவில் பங்கேற்பதன் மூலம் திமுகவின் பொது நிகழ்ச்சியில் 11 ஆண்டுகளுக்குப் பிறகு வைகோ பங்கேற்பதால், அவர் தாய்க்கழகத்துடன் மீண்டும் கூட்டணியில் சேர்வாரா என்ற எதிர்பார்ப்பு தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
திமுகவில் பாலபாடம் பயின்றவர் வைகோ. கலைஞரின் செல்லப் பிள்ளையாக தொடர்ந்து 20 ஆண்டு காலம் கட்சியின் சார்பில் எம்.பி.யாக பணியாற்றும் வாய்ப்பு வழங்கப்பட்டிருந்த வைகோவின் மீது தி.மு.க.வின் உயர்மட்டத் தலைவர்களும், கலைஞரும் கசப்புணர்வை உமிழத் துவங்கியது வைகோ யாரிடமும் சொல்லாமல் ஈழத்திற்குச் சென்று வந்தபோதுதான்.
1993ம் ஆண்டு திமுக தலைவர் கருணாநிதியை கொல்ல முயன்றார் என்ற பழியால் திமுகவில் இருந்து நீக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து மறுமலர்ச்சி திராவிட கழகம் என்ற கட்சியை தொடங்கி செயல்பட்டு வருகிறார். திமுக தலைவர் கருணாநிதி மீது எப்போதும் பாசம் கொண்டிருந்த வைகோ, அவரை தனது அண்ணனாக ஏற்று செயல்பட்டு வந்தார். திமுக தலைவர் கருணாநிதியும் வைகோவை தன்னுடைய அன்புத்தம்பி என்றே அழைத்து வந்தார்.
அதிமுகவுடன் சேர்ந்த வைகோ
தனிக்கட்சி தொடங்கினாலும் கடந்த 2004 மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையில் அமைந்த மெகா கூட்டணியில் மதிமுக போட்டியிட்டது. ஆனால், 2006 சட்டப்பேரவைத் தேர்தலில் தொகுதி பங்கீட்டில் சிக்கல் ஏற்படவே, கடைசி நேரத்தில் அதிமுக கூட்டணியில் மதிமுக இணைந்தது. 2009 மக்களவைத் தேர்தலிலும் அதிமுக கூட்டணியில் மதிமுக நீடித்தது.
புது கூட்டணி
இதனைத் தொடர்ந்து 2011ல் அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய வைகோ தேர்தலையும் புறக்கணித்தார். 2014 மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி, 2016 சட்டசபை தேர்தலில் அதிமுக, திமுகவிற்கு மாற்றாக மூன்றாவது கூட்டணியாக மக்கள் நலக் கூட்டணியை அமைத்து அதில் விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், தேமுதிக உள்ளிட்ட கட்சிகளை சேர்த்துக் கொண்டு போட்டியிட்டார்.
அரசியல் கட்சியினர்
திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான ‘முரசொலி'யின் 75-வது ஆண்டு நிறைவு பவள விழா பொதுக்கூட்டம் சென்னை கொட்டிவாக்கம் பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள ஒய்எம்சிஏ திடலில் மாலை 5 மணிக்கு நடக்கிறது. இந்தக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர், விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சியின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
கரம் கோர்ப்பாரா?
இந்த கட்சிகள் திமுக தலைவர் கருணாநிதியின் வைரவிழா கூட்டம் முதல் ஒன்றாகவே செயல்பட்டு வருகின்றன. இந்தக் கூட்டணியே தேர்தல் கூட்டணியாகவும் மாற வாய்ப்பிருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இந்நிலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும் திமுக பொதுக் கூட்டத்தில் பங்கேற்பதால் அவர் மீண்டும் திமுக கூட்டணியிலேயே தஞ்சமடைவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு கட்டியம் கட்டுவது போல கடந்த ஆகஸ்ட் 22ம் தேதி திமுக தலைவர் கருணாநிதியை வைகோ சந்திருந்தார் என்பது குறிப்பிட்டத்தக்கது.