முதியவர்களை மயக்கி கொள்ளையடித்த பெண்.. போலீசாரிடம் சிக்கியது எப்படி? பரபரப்பு தகவல்கள்
சாலையில் தனியாக நடந்து செல்லும் முதிய வயது ஆண்களை ஆசை வார்த்தைக் கூறி ஏமாற்றி வழிப்பறியில் ஈடுபட்ட பெண் சென்னை போலீசாரிடம் சிக்கியுள்ளார்.
சென்னை: முதியவர்களை மயக்கி வழிப்பறி செய்யும் பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மானபங்கத்துக்கு அஞ்சி நகையை பறிகொடுத்த சம்பவத்தின் பின்னணி அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
சென்னையைச் சேர்ந்தவர் ஆஷா சௌந்தர்யா. பார்ப்பதற்குப் நன்கு படித்து ஐ.டி. கம்பெனியில் வேலை செய்பவர் போல் தோற்றம் உள்ளவர். மாடர்ன் டிரஸில் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரில் வலம் வரும் இந்தப் பெண்ணிடம் நகையைப் பறிகொடுத்தவர்கள் 7 பேர்.

நெருக்கடியான சென்னைப் பகுதிகளில், போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள பகுதிகளில் கைவரிசை காட்டுவதுதான் ஆஷாவின் ஸ்டைல். மெயின் ரோட்டில் இருந்து கொஞ்சம் உள்ளடங்கி இருக்கும் சாலைகள் இவரின் வழிப்பறிக்கு இலக்கான பகுதிகள்.
கூட்ட நெரிசலை பயன்படுத்தி
சென்னை வடபழனி, விருகம்பாக்கம், கோடம்பாக்கம், பாண்டிபஜார், மாம்பலம் ஆகிய பகுதிகளில் கடந்த சில மாதங்களாக தனியாகச் செல்லும் வசதியான முதியவர்களை நோட்டமிட்டு அவர்களிடம் கைவரிசை காட்டி உள்ளார் ஆஷா சவுந்தர்யா.
கில்லாடிப் பெண்
முதியவர்களுக்கு லிப்ட் கொடுப்பது போல தனது வண்டியில் ஏற்றிச் சென்று மயக்குவார் என்றும், அப்போது அவர்கள் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக புகார் அளித்துவிடுவேன் என்று மிரட்டி நகைகளை பறித்துச் செல்வதில் ஆஷா ஒரு கில்லாடி என்கிறார்கள் போலீசார்.
சிசிடிவி கேமிராவில் சிக்கினார் ஆஷா
கோடம்பாக்கத்தில் நடந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காமிரா காட்சிகள் காவல்துறைக்கு கிடைத்தது. அதில் இருந்த ஆஷாவின் வாகனத்தை அடையாளமாக கொண்டு அவரை சுற்றி வளைத்துள்ளது, தியாகராய நகர் துணை ஆணையர் சரவணனின் தனிப்படை போலீஸ்.
பெங்களூருவிலும் வழிப்பறி செய்த ஆஷா
விசாரணையில் ஆஷா பெங்களூரில் இளைஞர்களை மயக்கி கொள்ளைடித்த வழக்கில் கைதாகி 2 ஆண்டுகள் சிறையில் இருந்தது தெரிய வந்தது. கடந்த டிசம்பரில் விடுதலையான பின், தான் வைத்திருந்த ஸ்கூட்டரிலேயே சென்னைக்கு இடம் பெயர்ந்துள்ளார் ஆஷா.
மெஸ்மரிசம் செய்யும் ஆஷா
சாலையில் தனியாக நடந்து செல்லும் முதியவர்களை குறிவைத்து மெஸ்மரிசம் செய்து வழிப்பறியில் ஈடுபட்டார் என்கிறது காவல்துறை. ஆஷாவின் ஆசை பேச்சுக்கு காது கொடுக்கும் முதிய வயது ஆண்கள் அவரின் வலையில் எளிதில் விழுந்துள்ளார்கள்.
குடும்பச் செலவுக்கு கொள்ளை
தன் மீதுள்ள கொள்ளை வழக்கு விசாரணைக்கும், தனது மகளின் திருமண செலவுக்காகவும்தான் இதுபோன்ற வழிப்பறியில் ஈடுபட்டதாக ஆஷா சவுந்தர்யா வாக்குமூலத்தில் கூறியுள்ளார். குடும்பச் செலவுக்கு ஒரு பெண் கொள்ளையில் ஈடுபட்டது அதிர்ச்சியான விஷயம் என்கிறார்கள் போலீசார்.
20 சவரன் பறிமுதல்
கைது செய்யப்பட்ட ஆஷாவிடம் இருந்து ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரும், 20 சவரன் நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் இந்தக் கொள்ளையில் பின்னணி மூளையாக யாராவது இருக்கிறார்களா என்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தனியாக செல்லும் முதியவர்கள் எச்சரிக்கை
தனியாக செல்லும் முதியவர்கள் நகைகள் அணிவதை தவிர்க்க வேண்டும் என்று சுட்டிக்காட்டும் காவல்துறையினர் அறிமுகம் இல்லாத நபர்களை நம்பி வாகனத்தில் ஏறிச் செல்ல வேண்டாம் என்று எச்சரித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications