ஏற்காடு தொகுதியில் மோதல்- திமுக நிர்வாகி பலியால் பதற்றம்
ஏற்காடு: ஏற்காடு இடைத் தேர்தலில் அதிமுக- திமுக தொண்டர்களிடையேயான மோதலில் திமுக நிர்வாகி ஒருவர் பலியாகி உள்ளார்.
ஏற்காடு இடைத்தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை 5 மணியுடன் முடிவடைந்தது. இதையொட்டி நேற்று காலை முதலே இறுதிக்கட்ட பிரசாரம் சூடு பிடித்திருந்தது.
அ.தி.மு.க. அமைச்சர்கள் தொகுதி முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். தி.மு.க. பொருளாளர் ஸ்டாலின், நீர்முள்ளிக்குட்டை, கருமந்துறை, வாழப்பாடி உள்ளிட்ட இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
கருமந்துறை பேருந்து நிலையம் அருகே ஸ்டாலின் பிரச்சார கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதேநேரம் கருமந்துறையில் ஊரக வளர்ச்சித் துறை மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மோகன் தலைமையில் அ.தி.மு.க. வினர் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இரண்டு சக்கர வாகனத்தில் பேரணியாக சென்று, 12 பூத்களுக்கு உட்பட்ட பகுதியில் பிரசாரம் மேற்கொண்டனர்.
அப்போது, கருமந்துறை பேருந்து நிலையம் அருகே ஸ்டாலினை, கும்பமரியாதையுடன் வரவேற்க மகளிரணியினர் சாலையின் இரண்டு பக்கமும் திரளாக நின்றிருந்தனர். தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஸ்டாலினுக்கு வரவேற்பு அளிக்க குவிந்து இருந்தனர்.
இதனால், பாதுகாப்புப் பணியில் நின்றிருந்த போலீஸார் அ.தி.மு.க. அமைச்சர் மற்றும் கட்சித் தொண்டர்கள் அந்த பகுதியில் பிரசாரம் செல்லாமல் தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால், அ.தி.மு.க.வினர் காவல் துறையினர் பேச்சை கேட்காமல் கருமந்துறையில் இரண்டு சக்கர வாகனத்தில் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு கேட்டுச் சென்றனர்.
இதை தி.மு.க.வினர் கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர். தி.மு.க. முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் அ.தி.மு.க. அமைச்சர் மோகன் ஆகியோர் தத்தம் கட்சி தொண்டர்கள் தகராறில் ஈடுபடாமல் தடுத்து நிறுத்த முயன்றனர்.
ஆனால், தகராறு முற்றி கைகலப்பாக மாறியது. இதில் விழுப்புரம் மாவட்டம் திருவநல்லூர் அ.தி.மு.க. இளைஞர் பாசறை ஒன்றியச் செயலாளர் பாஸ்கர். கல்ராயன்மலை அ.தி.மு.க. இளைஞர் பாசறை ஒன்றியச் செயலாளர் பழனிவேல் ஆகியோர் காயமடைந்தனர்.
ஆத்திரம் அடைந்த அ.தி.மு.க.வினர், தி.மு.க. தேர்தல் பணிமனை முன்பு இருந்த ஸ்டாலின் பேனர், கட்சிக் கொடியை கிழித்து எறிந்தனர். தி.மு.க. கொடி கம்பத்தை கீழே தள்ளும் முயற்சியில் அ.தி.மு.க.வினர் ஈடுபட்டனர். அப்போது, கள்ளக்குறிச்சி தியாகதுருகம் ஒன்றிய திமுக மாணவரணி துணை அமைப்பாளர் ராஜ்முருகன். இரும்பு கொடி கம்பத்தை பிடுங்கி பாதுகாப்பாக கட்சி அலுவலகத்துக்குள் எடுத்து வைக்க முயன்றார்.
அப்போது, இரும்பு கம்பம் மேலே சென்ற மின் கம்பி மீது மோதி, ராஜ்முருகன் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். பலத்த காயம் அடைந்த முருகனை கட்சியினர் மீட்டு கருமந்துறை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.
இதைத் தொடர்ந்து அமைச்சர் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் மீது திமுகவினர் போலீசில் புகார் கொடுத்துள்ளனர்.