தமிழ்நாட்டில் அதிகரித்த கொரோனா.. ஊரடங்கு அமல்படுத்தப்படுமா? அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில்!
தஞ்சாவூர்: தமிழ்நாட்டில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் 5 சதவிகிதம் பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், மீண்டும் ஊரடங்கு அமலுக்கு வருமா என்பது குறித்து மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
தஞ்சாவூர் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி, முனிசிபல் காலனியில் நடைபெற்று வரும் மாபெரும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் இன்று 1 லட்சம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் 3,471 இடங்களில் மாபெரும் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.
இந்தியாவில் திடீரென அதிகரித்த கொரோனா கேஸ்கள்.. என்ன காரணம்? தடுப்பூசியால் கட்டுப்படுத்த முடியுமா?
தன்னிறைவு பெற்ற தஞ்சாவூர்
தஞ்சாவூர் மாவட்டத்தில் முதல் தவணை தடுப்பூசி 93.10 சதவிகிதமும், 2ம் தவணை தடுப்பூசி 87.10 சதகிவிதமும் போடப்பட்டுள்ளது. 12-14 வயது மற்றும் 15-17 வயது உடையவர்களுக்கு 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தி தன்னிறைவு பெற்ற மாவட்டமாக தஞ்சாவூர் விளங்குகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை முதல் தவணை தடுப்பூசி 94.68 சதகிதமும், 2ம் தவணை தடுப்பூசி 85.47 சதவிகிதமும் செலுத்தப்பட்டுள்ளது. தற்போது 21,513 பேர் கொரோனா பாதிப்பால் மருத்துவமனை சிகிச்சையில் உள்ளனர்.
5% பேர் பாதிப்பு
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 5 சதவீதம் பேர் மட்டுமே அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர். தடுப்பூசி பயன்பாட்டால் உயிர் இழப்பு இல்லை என்பது ஆறுதலான விஷயம். உலகில் பல்வேறு நாடுகளில் பிஏ4, பிஏ5 என உருமாறிய கொரோனா பாதிப்பு உள்ளது. இந்தியாவில் சில மாநிலங்களில் உருமாறிய பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இருப்பினும் அவற்றால் பெரிய அளவில் பாதிப்பு இல்லை.
ஊரடங்கு வருமா?
தமிழகத்தில் 40 சதவிகிதத்திற்கும் மேல் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நிலை வந்தால் மட்டுமே, கடும் கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்பு உள்ளது. இதனால் தற்போதைய சூழலில் ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பு இல்லை.
காலரா பாதிப்பு
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் காலரா பாதிப்பு இருந்தது தெரிய வந்தவுடன், அதனையொட்டி உள்ள திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்க்கொள்ளப்பட்டது. அதுமட்டுமல்லாமல் பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டது. இதன் காரணமாக காலரா பாதிப்பு தமிழ்நாட்டில் இல்லை என்று தெரிவித்தார்.