“எங்க குலசாமி” முதலமைச்சர் ஸ்டாலின்.. நெகிழ்ந்த சிறுமி டான்யா தந்தை! முகம் முழுசா மாறிடுச்சே
சென்னை: முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி டான்யா இரண்டாம் கட்ட அறுவை சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில், தன்னுடைய அழுகுரலை கேட்டு முகத்தை சீரமைத்து தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாக அவரின் தந்தை ஸ்டீபன் ராஜ் கூறி உள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடியை அடுத்த மோரூரை சேர்ந்தவர் ஸ்டீபன் ராஜ். இவரது மனைவி சௌபாக்கியா. இந்த தம்பதியினரின் 7 வயது மகள் டான்யா முகச்சிதைவு நோயால் ஆறு வருடங்களுக்கு மேலாக அவதியுற்று வந்து உள்ளார்.
பிறக்கும் போது அனைவரையும்போல் சாதாரணமாக இருந்துள்ளார் டான்யா. அவர்களுக்கு மூன்றரை வயதில் முகத்தில் கரும்புள்ளி ஒன்று தோன்றி இருக்கிறது. இதனை சாதாரண ரத்தக்கட்டி என்று நினைத்து சிகிச்சை பெற்று வந்துள்ளார் டான்யா.
சிறுமி டான்யா நினைவிருக்கா? ஸ்டாலினால் மாறிய முகம் - 2ம் கட்ட அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நிறைவு
சிறுமி டான்யா
ஆனாலும், அவருக்கு பாதிப்பு குறையவில்லை. ஆறு ஆண்டுகளாக பல மருத்துவமனைகள் ஏறி இறங்கி சிகிச்சை பெற்றும் பாதிப்பு குறையவில்லை. மாறாக சிறுமியின் ஒருபக்க முகம் சிதைவு மேலும் அதிகரிக்கத் தொடங்கி பாதிப்பு தீவிரம் அடைந்தது. இந்த நிலையில் சிறுமியின் அழுகுரல் ஊடகங்கள் வாயிலாக தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு சென்று உள்ளது. தகவலறிந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக சிறுமிக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகளை அளிக்க உத்தரவிட்டார்.
உதவிய முதலமைச்சர் ஸ்டாலின்
கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள சவீதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி டான்யாவுக்கு முதற்கட்ட அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது. இதனையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் இருந்த சிறுமி டான்யாவை நேரில் சந்தித்து உடல் நலம் விசாரித்தார்.
முதற்கட்ட அறுவை சிகிச்சை
முதற்கட்ட அறுவை சிகிச்சை முடிவுற்று வீடு திரும்பிய சிறுமி டான்யாவிற்கு தொடர்ந்து மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில் சிறுமியின் முகம் இயல்பு நிலைக்கு திரும்ப மேலும் சிலகட்ட அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ள மருத்துவர்கள் பரிந்துரை செய்திருந்தனர். இந்த நிலையில் இரண்டாம் கட்ட அறுவை சிகிச்சைக்காக கடந்த டிசம்பர் மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் சிறுமி டான்யா.
இரண்டாம் கட்ட சிகிச்சை
இந்த நிலையில், இரண்டாம் கட்ட அறுவை சிகிச்சை கடந்த ஜனவரி 5 ஆம் தேதி மேற்கொள்ளப்பட்டு வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது. இந்த நிலையில் இன்று சிறுமி டான்யா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய சிறுமி டான்யாவை தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் நேரில் சந்தித்து வீட்டிற்கு வழி அனுப்பினார்.
அமைச்சர் நாசர் பேட்டி
அப்போது சிறுமிக்கு அமைச்சர் நாசர் சாக்லேட் மாலை அணிவித்து வழி அனுப்பி வைத்தார். மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட சிறுமி டான்யா தன் முகத்தை சீரமைத்து தந்த தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சா.மு.நாசர் "சிறுமி தானியாவின் அழுகுரலை அறிந்த தமிழ்நாடு முதலமைச்சர் முகச்சிதைவு நோயிலிருந்து சிறுமி தான்யாவை காப்பாற்றி உள்ளார்.
முதலமைச்சருக்கு நன்றி
தொடர்ந்து சிறுமிக்கு தேவையான அனைத்து மருத்துவ சிகிச்சைகளையும் உதவிகளையும் செய்து வருகிறோம்." என கூறினார். சிறுமியின் தந்தை ஸ்டீபன் கூறுகையில், "கடந்த ஆறு வருடங்களாக முகச்சிதைவு நோயால் அவதியுற்ற தன் மகள் தான்யாவின் அழு குரலை கேட்டு தங்களுடைய குல சாமியாக இருந்து தங்கள் மகளின் முகத்தை காப்பாற்றிக் கொடுத்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி." என்று தெரிவித்தார்.