திருவள்ளூர் ஆட்சியர் அலுவலக உணவகங்களில் பீப் பிரியாணி சேர்ப்பு! எஸ்சி, எஸ்டி ஆணையம் அதிரடி!
திருவள்ளூர் கலெக்டர் அலுவலக உணவகங்களில் இனி பீப் பிரியாணி விற்பனை செய்யப்படும்.
திருவள்ளூர்: தேசிய தாழ்த்தப்பட்டோர்- பழங்குடிகள் ஆணையத்தின் உத்தரவைத் தொடர்ந்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் உணவகங்களில் பீப் பிரியாணியும் சேர்க்கப்பட்டுள்ளது.
பீப் (மாட்டிறைச்சி) பிரியாணயை பொது உணவு வகைகளில் இருந்து ஒதுக்கி வைக்கும் போக்கு தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஜாதிய ஆதிக்க மனோபாவத்தினால் பீப் உணவு வகைகள் ஒதுக்கப்படுகின்றன என்பது பொதுவான குற்றச்சாட்டு.
இதனையடுத்தே சமூக விடுதலைக்குப் போராடுபவர்கள், தங்களது விடுதலைப் போராட்டங்களின் குறியீடாக பீப் உணவு சாப்பிடுவதை கொள்கின்றனர். இதற்காக பீப் உணவு திருவிழாக்களும் நடத்தப்படுகின்றன. பீப் உணவு தொடர்பான சர்ச்சை அண்மை காலங்களில் தொடர்ந்து பேசுபொருளாக இருந்து வருகிறது.
தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் புவிசார் குறியீடு பெறும் நோக்கில் ஆம்பூர் பிரியாணி திருவிழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த ஆம்பூர் பிரியாணி திருவிழாவில் பீப் பிரியாணி தவிர்க்கப்பட்டது சர்ச்சையானது. இதனைத் தொடர்ந்து ஆம்பூர் பிரியாணி திருவிழா ஒத்திவைக்கப்பட்டது. இந்த விவகாரம் தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையத்தின் பார்வைக்கும் கொண்டு செல்லப்பட்டது. இதனையடுத்து இந்த ஆணையமானது, அரசு ஏற்பாடு செய்யக்கூடிய பிரியாணி திருவிழாவில் மாட்டிறைச்சி பிரியாணி தவிர்க்கப்படக் கூடாது; அப்படித் தவிர்த்தால் அது பாகுபாட்டுக்கு வழி வகுக்கும் என சுட்டிக்காட்டியது.
சென்னை தீவுத் திடலில் உணவு திருவிழா நடந்த போதும் இதே போல பீப் பிரியாணி உணவகங்கள் அமைக்கப்படவில்லை என சர்ச்சை வெடித்தது. இதனையடுத்து உடனடியாக பீப் பிரியாணி உணவகங்கள் அமைக்கப்பட்டன. இதனால் சர்ச்சைகள் ஓய்ந்தன.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் திருவள்ளூர் ஆட்சியர் வளாக அலுவலகத்தில் மகளிர் சுய உதவி குழுக்கள் நடத்தும் உணவகங்களில் பீப் பிரியாணி விற்பனை செய்யப்படுவதில்லை என சர்ச்சையானது. இது தொடர்பாக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்துக்கும் புகார் அனுப்பப்பட்டது. இதனைத் தொடர்ந்து தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் தற்போது திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கும் மகளிர் சுய உதவிக் குழுக்களின் உணவகங்களில் பீப் பிரியாணியும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.