திருப்பதியில் குறைந்து போன பக்தர்கள் கூட்டம் - ரூ.27 லட்சம் மட்டுமே உண்டியல் வசூல்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களின் வருகை குறைவாக உள்ளதால் மூத்த குடிமக்கள் செல்லும் தரிசன வரிசை வழியாக தேவஸ்தானம் பக்தர்களை அனுமதித்து வருகிறது. அதனால் பக்தர்கள் 15 நிமிடங்களில் ஏழுமலையானை தரிசித்து திரும்புகின்ற
திருப்பதி: ஏழுமலையான் கோவிலில் கடந்த 2 வாரங்களாக தினசரி 3 ஆயிரத்திற்கும் குறைவான பக்தர்கள் தரிசனம் செய்த நிலையில் சனிக்கிழமை முதல் பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. ஞாயிறன்று 5,081 பக்தர்கள் தரிசனம் செய்தனர். நேற்று 4,587 பக்தர்கள் தரிசனம் செய்தனர். ரூ.27 லட்சம் உண்டியல் வசூலானதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தினசரியும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்து வந்த நிலையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக பக்தர்கள் கூட்டம் குறைந்து வருகிறது. கொரோனா தொற்றால் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை ஏழுமலையானின் தரிசனம் ரத்து செய்யப்பட்டது. கோவிலில் கைங்கரியங்கள் தனிமையில் நடத்தப்பட்டன. ஏழுமலையான் கோவில் வருமானம் தடைபட்டது.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றி பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது கொரோனா தொற்றின் 2வது அலை வேகமாக பரவி வருகிறது. ஆந்திரவில் தொற்றின் வேகம் அதிகரித்து வருகிறது. எனவே தேவஸ்தானம் கடந்த ஏப்ரல் மாதம் 12ஆம்தேதி முதல் திருப்பதியில் அளிக்கப்பட்டு வந்த இலவச தரிசன டோக்கன்களை ரத்து செய்தது. தினசரி 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டு வழங்கப்பட்டு வந்த டோக்கன்களை ரத்து செய்யப்பட்டதால் தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை பாதியாக குறைந்தது.
இந்த மாதம் 1ஆம் தேதி முதல் ரூ.300 கட்டணத்தில் ஆன்லைன் முன்பதிவு டிக்கெட் எண்ணிக்கையையும் பாதியாக தேவஸ்தானம் குறைத்துள்ளது. கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் பல மாநிலங்களில் முழு பொது முடக்கம், ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் திருப்பதி ஏழுமலையான் தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொண்ட பக்தர்கள் தங்கள் பயணத்தை தவிர்த்து வருகின்றனர்.
கடந்த 2 வாரங்களாக தினசரி 3 ஆயிரத்திற்கும் குறைவான பக்தர்கள் தரிசனத்தில் வந்த நிலையில் சனிக்கிழமை முதல் பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. ஞாயிறன்று 5,081 பக்தர்கள் தரிசனம் செய்தனர். நேற்று 4,587 பக்தர்கள் தரிசனம் செய்தனர். ரூ.27 லட்சம் உண்டியல் வசூலானது. தினசரியும் 3 கோடி முதல் 5 கோடி வரை உண்டியல் வசூலாகி வந்த நிலையில் பக்தர்கள் கூட்டம் குறைந்துள்ளதால் உண்டியல் வருமானமும் குறைந்துள்ளது.
ஆன்லைன் மூலம் விரைவு தரிசனம், வி.ஐ.பி. பிரேக், ஸ்ரீவாணி அறக்கட்டளை மூலம் வி.ஐ.பி. பிரேக் டிக்கெட், நன்கொடையாளர்கள் என தரிசன டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே திருமலைக்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.
பக்தர்களின் வருகை குறைவாக உள்ளதால் வைகுண்டம் காத்திருப்பு அறை மூலமாக இல்லாமல் மூத்த குடிமக்கள் செல்லும் தரிசன வரிசை வழியாக தேவஸ்தானம் பக்தர்களை அனுமதித்து வருகிறது. அதனால் பக்தர்கள் 15 நிமிடங்களில் ஏழுமலையானை தரிசனம் செய்ய முடிவதாக பக்தர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனா காலத்திற்கு முன்பு வரை சாமி தரிசனம் செய்ய 5 முதல் 6 மணி நேரம் வரை பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்வார்கள். இப்போது கூட்டம் குறைவாக உள்ளதால் எளிதாக சாமி தரிசனம் செய்ய முடிகிறது.
ஏழுமலையான் தரிசன டிக்கெட் உள்ள பக்தர்கள் காலை 9 மணிக்கு பின்னர் நடைபாதை வழியாகவும் திருமலைக்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். இரவுநேர ஊரடங்கு அமலில் உள்ளதால் திருமலை மலைப்பாதை காலை 5 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 10 மணிக்கு மூடப்படுகிறது. அலிபிரி பாதயாத்திரை மார்க்கம் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரையிலும், ஸ்ரீவாரிமெட்டு பாதயாத்திரை மார்க்கம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையிலும் திறந்து வைக்கப்படுகிறது.
தரிசன டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் கொரோனா விதிமுறைகள் காரணமாக தரிசனத்துக்கு வர இயலாத சூழ்நிலையில் தரிசன தினத்திலிருந்து 90 நாட்களுக்குள் வழிபாடு செய்து கொள்ளும் வாய்ப்பை தேவஸ்தானம் வழங்கி உள்ளது.