தீபாவளிக்குப் பின் திருப்பதி போறீங்களா? சூரிய கிரகணம்..ஏழுமலையான் கோவில் 12 மணி நடை அடைப்பு
திருப்பதி: சூரிய கிரகணம், சந்திர கிரகணம் நாட்களில் ஏழுமலையான் கோவில் 12 மணி நேரத்திற்கு மேலாக நடை அடைக்கப்படும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. அன்றைய நாட்களில் அன்னபிரசாதம் வழங்கப்பட மாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திராவின் புகழ்பெற்ற கோவில் திருப்பதி வெங்கடாசலபதி கோவில். நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் நாடு முழுவதும் இருந்து வந்து ஏழுமலையானை தரிசித்து செல்வது வழக்கம். அதிலும் விடுமுறை நாட்கள் என்றால் அதிகப்படியான பக்தர்கள் வந்து செல்வதுண்டு. இதனால் ஏழுமலையானை 2 நாட்கள் வரையிலும் காத்திருந்து தரிசனம் செய்வதுண்டு.
பிரம்மோற்சவம் முடிந்த பின்னரும் புரட்டாசி மாதம் என்பதால் ஏழுமலையானை தரிசனம் செய்ய லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இதனால் வைகுண்டம் க்யூ காம்ளக்ஸ் அறைகள் நிரம்பி வழிகின்றன.
பக்தர்களே.. சூரிய கிரகணம், சந்திர கிரகணம்.. திருப்பதி ஏழுமலையான் கோவில் நடை திறப்பு நேரம் தெரியுமா?
சூரிய கிரகணம்
இன்னும் சில நாட்களில் சூரிய கிரகணம், சந்திர கிரகணம் நிகழ உள்ளதை முன்னிட்டு ஏழுமலையான் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பினை திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. அக்டோபர் 25ஆம் தேதி மாலை 5.11 மணியில் இருந்து மாலை 6.27 மணி வரை சூரிய கிரகணம் நிகழ்கிறது. எனவே அன்றைய தினம் 9 மணிநேரத்துக்கு முன்னதாக திருப்பதி ஏழுமலையான் கோவில் கதவுகள் காலை 8.11 மணியில் இருந்து இரவு 7.30 மணியளவில் 11 மணிநேரம் மூடப்பட்டு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்ஜித சேவைகள் ரத்து
கோவில் நடை மூடப்படுவதை முன்னிட்டு அன்றைய தினம் கோவிலில் பிரேக் தரிசனம், ஸ்ரீவாணி, ரூ.300 தரிசனம், முதியோர், மாற்றுத்திறனாளிகள், குழந்தைகளுடன் வரும் பெற்றோருக்கான தரிசனம், பாதுகாப்புப் பணியாளர்களுக்கான தரிசனம், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான தரிசனம், கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சஹஸ்ர தீபலங்கார சேவை ஆகியவை ரத்து செய்யப்படுகின்றன. அன்று இலவச தரிசனத்தில் செல்லும் சாதாரணப் பக்தர்கள் மட்டுமே விரைவாக கோவிலுக்குள் சென்று வழிபட அனுமதிக்கப்படுவர்.
சந்திர கிரகணம்
அதேபோல் நவம்பர் மாதம் 8ஆம் தேதி மதியம் 2.39 மணியில் இருந்து மாலை 6.27 மணி வரை சந்திர கிரகணம் நிகழ்கிறது. எனவே நவம்பர் மாதம் 8-ந்தேதி திருப்பதி ஏழுமலையான் கோவில் கதவுகள் காலை 8.40 மணியில் இருந்து இரவு 7.20 மணி வரை 10 மணிநேரம் மூடப்பட்டு இருக்கும். இதனால், அன்று கோவிலில் பிரேக் தரிசனம், ஸ்ரீவாணி, ரூ.300 தரிசனம் ரத்து செய்யப்படுகின்றன.
யாருக்கு அனுமதி
முதியோர், மாற்றுத்திறனாளிகள், குழந்தைகளுடன் வரும் பெற்றோருக்கான தரிசனம், பாதுகாப்புப் பணியாளர்களுக்கான தரிசனம், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான தரிசனம், கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சஹஸ்ர தீபலங்கார சேவை ஆகியவை ரத்து செய்யப்படுகின்றன. அன்று இலவச தரிசனத்தில் செல்லும் சாதாரணப் பக்தர்கள் மட்டுமே கோவிலுக்குள் சென்று வழிபட அனுமதிக்கப்படுவர்.
அன்னதானம் ரத்து
கிரகண நாட்களில் கிரகணம் முடியும் வரை சமைப்பதில்லை. அதன்படி திருமலையில் உள்ள மாத்ருஸ்ரீ தரிகொண்டா வெங்கமாம்பா அன்னபிரசாத பவனில், வைகுந்தம் கியூ வளாகத்தில் அன்னபிரசாதம் வழங்கப்படாது. எனவே, பக்தர்கள் இதை கவனத்தில் கொண்டு திருமலைக்கு திட்டமிட்டு வரவேண்டும் எனவும் பக்தர்கள் திருமலை-திருப்பதி தேவஸ்தானத்துக்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.