திருச்சியில் ஆட்டோ ஓட்டுநர் கொலை.. தந்தையை இழந்து தவிக்கும் 3 குந்தைகள்
துறையூர் : திருச்சி மாவட்டம் துறையூரில் நள்ளிரவில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவரை மர்மக்கும்பல் படுகொலை செய்து விட்டு தப்பி உள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஆட்டோ ஓட்டுநரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.
ஆட்டோ ஓட்டுநர் முன்விரோதம் காரணமாக கொல்லப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ஆட்டோ டிரைவர்
திருச்சி மாவட்டம், துறையூரை அடுத்த ஆலத்துடையான்பட்டி கிராமத்தில் வசித்து வருகிறார் ஆட்டோ ஓட்டுநர் பிரபு. இவருக்கு உஷா என்ற மனைவியும், தேவி, தேவன், நித்ரா ஆகிய குழந்தைகள் உள்ளனர். போதிய வருமானம் இல்லாத காரணத்தால் துறையூரில் வாடகைக்கு ஆட்டோ எடுத்து ஓட்டி வந்துள்ளார் பிரபு. இந்நிலையில் நேற்று ஆலத்துடையான்பட்டியில் உள்ள தனது வீட்டில் குடும்பத்தாருடன் வழக்கம் போல் உறங்கிக் கொண்டிருந்தபோது நள்ளிரவில் செல்போன் அழைப்பு வந்துள்ளது. அதில் அவசரமாக வெளியில் செல்லவேண்டும் ஆட்டோ எடுத்து வருமாறு எதிர் முனையில் பேசியவர்கள் கூறியதாக தெரிகிறது. இதையடுத்து சிறிது நேரத்தில் வந்துவிடுவதாக மனைவியிடம் கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியில் சென்றார் பிரபு.

சரமாரி வெட்டு
பிரபுவின் ஆட்டோ எம்ஜிஆர் நகர் அருகே கடந்து சென்றபோது சில நபர்கள் வழிமறித்துள்ளனர். உடனடியாக தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் பிரபுவை சரமாரியாக வெட்டி உள்ளனர். இதனால் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த பிரபு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதை அடுத்து மர்மநபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். நள்ளிரவில் வீட்டில் இருந்து வெளியேறிய கணவர் நீண்ட நேரம் ஆகியும் திரும்பாததால் சந்தேகம் அடைந்த மனைவி அவரைத் தேடிச் சென்றுள்ளார். அப்போது எம்ஜிஆர் நகரில் பிரபு ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பிரபுவின் மனைவி உஷா கதறி அழுததை பார்த்து அக்கம் பக்கத்தார் கூடினர். சம்பவம் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விசாரணை
தகவல் அறிந்த துறையூர் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பிரபுவின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிந்த நிலையில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித்குமார், முசிறி காவல்துறை துணை கண்காணிப்பாளர் அருள்மணி, துறையூர் காவல் ஆய்வாளர் செந்தில்குமார், உப்பிலியபுரம் துணை ஆய்வாளர் சாந்தகுமார் மற்றும் காவல்துறையினர் அப்பகுதிக்கு விரைந்தனர். கொலை செய்யப்பட்ட ஆட்டோ ஓட்டுநர் பிரபுவுக்கு முன்விரோதம் ஏதேனும் உள்ளதா அல்லது வேறு காரணமா என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

3 குழந்தைகள், மனைவி துயரம்
தற்போது கணவனை இழந்த மனைவியும், தந்தையை இழந்த 3 குந்தைகளும் எதிர்காலத்தை நோக்கிய அச்சத்தோடு பிரபுவின் உடலைப் பெற்றுக்கொள்ள பிணவறை அருகே காத்துக்கிடக்கின்றனர்.












Click it and Unblock the Notifications