அடங்க மறுக்கும் அகோரிகள்...திருச்சியில் நள்ளிரவில் நடத்திய நவராத்திரி பூஜை- பொதுமக்கள் பெரும் பீதி!
திருச்சி: திருச்சி அரியமங்கலத்தில் அகோரி சாமியார்கள் என்ற பெயரில் நள்ளிரவுகளில் நடத்தப்படும் பூஜைகள் தொடர்பாக ஏற்கனவே பல புகார்கள் போலீசில் கொடுக்கப்பட்டுள்ளன. தற்போதும் நவராத்திரி பூஜை என்ற பெயரில் நள்ளிரவில் பொதுமக்களை அச்சுறுத்தி இருக்கின்றனர் சோ கால்ட் அகோரிகள்.
சிவனை முதல் தெய்வமாக கொண்டு துறவு வாழ்க்கையை பின்பற்றுகிறவர்களுக்கான ஒரு அமைப்பு அகாடா. நாட்டின் சட்ட திட்டங்களுக்கு உட்படாத ஒரு அமைப்பு அகாடா. புனித நிலை என்ற பெயரால் அகாடாக்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது இல்லை.
இந்த அகாடா என்பது பல்வேறு கிளைகளைக் கொண்டது. அகாடாக்களில் இடம்பெற்ற துறவிகளில் நிர்வாண சாமியார்களும் அடங்குவர். இந்த அகாடாக்களைச் சேர்ந்த சாமியார்கள்தான் கும்பமேளா காலங்களில் பொது இடங்களில் நிர்வாணமாக பல்லாயிரக்கணக்கில் ஒன்று திரண்டு பேரணி, ஊர்வலம் நடத்துவர். நம்ம ஊர் சர்ச்சை சாமியாரும் இன்றைய கைலாசா அதிபருமான நித்தியானந்தா கூட இந்த அகாடா ஒன்றின் தலைவர் பதவியை விலை கொடுத்து வாங்கி கும்பமேளாவில் அமர்க்களம் செய்தவர்தான்.
'அகோரி'களிடையே அதிகார மோதல்... உ.பி.யில் தலைமை சாது மர்ம மரணம்- ஹரித்வாரில் யோகா சாமியார் கைது!
அகாடா- நிர்வாண துறவிகள்
இந்த அகாடா துறவிகளில் நிர்வாண சாமியார்களான அகோரிகள் பெரும்பாலும் காசி, குஜராத், ரிஷிகேஷ், ஹரித்வாரில்தான் நடமாடுவர். நிர்வாணமாக, உடல் முழுவதும் சாம்பல் பூசிக் கொண்டும் மண்டை ஓடு ஏந்தியபடியும் நடமாடும் இந்த அகோரிகளைக் கண்டாலே வட இந்தியர்கள் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்குவர். இந்த அகோரிகள்தான், காசியில் மனித மாமிசம் சாப்பிடக் கூடியவர்கள். காசி அகோரிகளின் வாழ்க்கையை பல்வேறு டிவி தொடர்கள் வெட்ட வெளிச்சமாகக் காட்டியும் இருக்கின்றன.
திருச்சி மணிகண்டன்
அப்படி காசியில் பயிற்சி பெற்ற அகோரி நான் என கூறிக் கொள்பவர்தன திருச்சி அகோரி மணிகண்டன். அரியமங்கலத்தில் ஜெய் அகோரகாளி என்ற பெயரில் ஒரு கோவிலை கட்டிக் கொண்டு இந்த சோ கால்ட் அகோரி மணிகண்டன் செய்து வரும் பகீர் பூஜைகள் அப்பகுதி மக்களின் நிம்மதியை கெடுத்துவிட்டிருக்கிறது.
சர்ச்சை அகோரி
மணிகண்டனின் அம்மா இறந்த போது அவரது சிதை மீது அமர்ந்து நிர்வாண பூஜை செய்தவர்தான் இந்த அகோரி. அகோரிகள் பொதுவான காம இச்சையை தூண்டுகிற நரம்புகளை துண்டித்துக் கொள்வர். ஆனால் திருச்சி அகோரி மணிகண்டனோ, பெண் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். அந்தப் பெண்ணும் ஒரு அகோரி என அடித்துவிட்டார்.
நவராத்திரி பூஜை
இப்போது நவராத்திரி பூஜை என்ற பெயரில் அகோரி மணிகண்டன் அரியமங்கலம் மக்களை அலறவிட்டிருக்கிறார். நவராத்திரிக்காக பூஜை செய்வதாக ஜெய் அகோரகாளி, ஜெய் அஷ்டகாலபைரவர் மற்றும் அங்குள்ள ஏனைய பரிவார தெய்வங்களுக்கு சிறப்புபூஜைகள் மற்றும் தீபாராதனை நடந்தது. நள்ளிரவில் நடைபெற்ற அகோரிகளின் இந்த யாக பூஜையின்போது டம்ரா மேளம் அடித்தும் மற்றும் சங்கு முழங்கியும், ஹரஹர மகாதேவ் என கோஷமிட்டனர். இதனால் அப்பகுதி மக்கள் மிரண்டு போயிருக்கின்றனர். ஆனாலும் இதனையும் ஆன்மீகம், பக்தி என ஏற்றுக் கொண்டு பக்தர்கள் அங்கு சென்று வழிபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.