சுடுகாட்டுக்குள் 6 அடி பள்ளத்தில்.. 21 நாட்கள் விரதம்.. களைக்கட்டும் தசரா பண்டிகை.. விசித்திர பழக்கம்
தூத்துக்குடி: திருச்செந்தூர் கடற்கரையை ஒட்டியுள்ள முத்தாரம்மன் கோயில் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அம்மனை வேண்டி, சுடுகாட்டுக்குள் 6 அடி பள்ளம் தோண்டி 21 நாட்கள் விரதமிருந்து வழிப்பட்ட பக்தரை ஊர் மக்கள் மேளதாளத்துடன் ஊருக்குள் அழைத்து வந்துள்ளனர்.
இந்த திருவிழாவின்போது மக்கள் காளி வேடமணிந்தும், இன்ன பிற கடவுள்களின் வேடமணிந்தும் தங்கள் நேத்திக்கடனை செலுத்துவது வழக்கமாகும்.

முத்தாரம்மன்
தமிழ்நாட்டில் நாட்டார் தெய்வ வழிபாடுகளில் முக்கியமானது இந்த முத்தாரம்மன் கோயில் திருவிழா. இந்த திருத்தலத்தில் அன்னை முத்தாரம்மன் ஞானமூர்த்திஸ்வரரோடு ஒரே கல்லில் எழுந்தருளியுள்ளார். மேலும், இந்த அம்மனின் கீழ் சுயமாக தோன்றிய லிங்கம் உள்ளதாக சொல்லப்படுகிறது. அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் நோய் குணமடைய 41 நாட்கள் விரதமிருந்து அம்பாளை வழிபடுவார்கள். மதுரையை மீனாட்சி எப்படி ஆள்கிறாளோ அதேபோல இந்த பகுதியை முத்தாரம்மன் ஆட்சி செய்து வருகிறாள் மக்கள் நம்புகின்றனர்.

நம்பிக்கை
முன்பொரு காலத்தில் அகத்திய மாமுனிவர் தியானம் செய்துகொண்டிருந்த போது அவரை வரமுனி எனும் முனிவர் இடையூறு செய்ததாகவும், இதனால் கோபமடைந்த அகத்திய மாமுனி, எருமை தலை மனித உடலுடன் வரமுனி அலைய வேண்டும் என்று சாபமிட்டதாகவும் சொல்லப்படுகிறது. சாப விமோசனம் வேண்டுகையில் பார்வதியின் வதத்தால்தான் சாபம் விமோசனம் பெரும் என்று அகத்திய மாமுனி கூறியதாக ஸ்தல வரலாறு சொல்கிறது.

சுடுகாட்டுக்குள் விரதம்
இவ்வாறு இருக்கையில், வரமுனி தேவர்களுக்கு தொடர்ந்து இடையூறு கொடுத்ததாகவும், தேவர்கள் இதனை தடுக்க பார்வதியை வேண்டி தவம் இருந்துள்ளனர். அப்போது வளர்த்த யாகத்தில் பிறந்த பார்வதி ஒன்பது நாட்களில் முழு வளர்ச்சி பெற்று வரமுனியை வதம் செய்கிறாள் என பக்தி இலக்கியங்கள் கூறுகின்றன. இதுதான் 10 நாட்கள் தசரா திருவிழாவாக முத்தாரம்மன் கோயிலில் கொண்டாடப்படுகிறது. இப்படி இருக்கையில், அம்பாளை வழிப்பட்ட 21 நாட்கள் சுடுகாட்டிலேயே பக்தர் ஒருவர் விரதமிருந்துள்ளார்.

அருளாசி
நெல்லை மாவட்டம் திசையன்விளையில் உள்ள சுடுகாட்டில் பக்தர் இந்த விரதத்தை மேற்கொண்டிருந்திருக்கிறார். தசரா திருவிழாவிற்கு பலர் காளி வேடமிடுவார்கள். அவ்வாறு வேடமிடுவத்றகு முன்னர் விரம் இருப்பது வழக்கம். இதன் காரணமாகவே சுடுகாட்டில் 6 அடி பள்ளம் தோண்டி அதில் 21 நாட்களாக விரதமிருந்து அம்பாளை பிரார்த்தனை செய்து வந்திருக்கிறார். இவ்வாறு இருக்கையில், இன்று விரதம் முடிந்த நிலையில் ஊர் மக்கள், இந்த பக்தரை மேளதாளத்துடன் ஊருக்குள் அழைத்து வந்துள்ளனர். ஊருக்குள் வந்த பக்தர், மக்களுக்கு அருளாசி வழங்கியுள்ளார்.












Click it and Unblock the Notifications