காப்பாற்றிய கனிமொழி மீதே புகார்! அமைச்சர் கீதாஜீவனை வட்டமடிக்கும் சர்ச்சை! என்ன பின்னணி?
தூத்துக்குடி: திமுக மக்களவை உறுப்பினரும், மகளிர் அணிச் செயலாளருமான கனிமொழி குறித்து கட்சி தலைமையிடம் அமைச்சர் கீதாஜீவன் புகார் பட்டியல் வாசித்ததாக கூறப்படும் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
கனிமொழி எம்.பி.யிடம் அவரது சொந்த தங்கை போல் தூத்துக்குடி மாவட்டத்தில் இணைந்து செயல்பட்ட அமைச்சர் கீதாஜீவன், திடீரென அவருக்கு எதிராக திரும்பியிருப்பது திமுகவில் பேசுபொருளாக உள்ளது.
மார்கழி மாத ராசி பலன்கள் 2021: இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் அதிகரிக்கும்
எதிர்தரப்பினரான அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆதரவாளர்கள் அளித்த பல புகார்களில் கீதாஜீவன் சிக்கிய போதும் கூட, அவரை அதிலிருந்து காப்பாற்றியவர் கனிமொழி எம்.பி.எனக் கூறப்படுகிறது.
தூத்துக்குடி
கலைஞரின் முரட்டு பக்தன் என்று அழைக்கப்பட்ட பெரியசாமி, தூத்துக்குடி மாவட்ட திமுகவில் மாவட்டச் செயலாளராக கால் நூற்றாண்டிற்கும் மேலாக கோலோச்சியவர். 4 ஆண்டுகளுக்கு முன்னர் உடல்நலக் குறைவால் அவர் காலமானதை அடுத்து தூத்துக்குடி மாவட்டம் நிர்வாக வசதிக்காக பிரிக்கப்பட்டு ஒன்றுக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனும், மற்றொன்றுக்கு அமைச்சர் கீதா ஜீவனும் மாவட்டச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டனர்.
பல்வேறு புகார்கள்
பெரியசாமி உயிரோடு இருந்த காலத்தில் இருந்தே அனிதா ராதாகிருஷ்ணனுக்கும், கீதாஜீவனுக்கும் ஏழாம் பொருத்தம் தான். கீதா ஜீவன் செயல்பாடுகள், மாவட்டத்தில் தனக்கு கொடுக்கும் இடையூறுகள் குறித்தெல்லாம் அனிதா ராதாகிருஷ்ணன் பலமுறை ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டு சென்றிருக்கிறார். அப்போதெல்லாம் அதில் தலையிட்டு ஸ்டாலினின் கோபத்தை தணித்து விசாரணையில் இருந்து கீதாஜீவனை காப்பாற்றியவர் தான் கனிமொழி.
காப்பாற்றியவர்
இதுமட்டுமல்லாமல் தேர்தல் பணிகளில் சரிவர ஈடுபடவில்லை என்று திமுகவினர் தலைமைக்கு புகார்களை தட்டிவிட்ட போதும், தேவேந்திரகுல வேளாளர் தொடர்பான ஆடியோ சர்ச்சையில் சிக்கி சமூக வலைதளங்களில் வைரலாகி கீதாஜீவனுக்கு பெரும் நெருக்கடி வந்தபோதும்,
ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக கீதாஜீவன் செயல்படுகிறார் என்று பொதுமக்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்தபோதும், அவைகளில் எல்லாம் தலையிட்டு கீதாஜீவனை கட்சி தலைமையின் கோபத்தில் இருந்து காப்பாற்றியவர் கனிமொழி.
பட்டிமன்றங்கள்
இப்படி பல்வேறு சிக்கல்களில் இருந்து தன்னை காப்பாற்றி இன்று அமைச்சரவையில் இடம் கிடைக்கும் வகையில் பரிந்துரையும் செய்த கனிமொழி மீது கீதா ஜீவன் புகார் அளித்ததாக கூறப்படும் விவகாரம் தான் திமுக நிர்வாகிகள் மத்தியில் பேசு பொருளாக உள்ளது. இதனிடையே கனிமொழி கலந்துகொள்ளும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் அமைச்சர் கீதாஜீவன் கலந்துகொண்டு வரும் சூழலில் இப்படி ஒரு புகார் அளிக்க என்ன காரணமாக இருக்கும் என தூத்துக்குடி உ.பி.க்கள் பட்டிமன்றங்கள் நடத்தி வருகின்றனர்.
கீதாஜீவன் தரப்பு
இதனிடையே கனிமொழி எம்.பி. மீது தனக்கு எந்த மனவருத்தமும் இல்லை என்றும் அவர் மீது தலைமையிடம் புகாரே அளிக்கவில்லை எனவும் அமைச்சர் கீதாஜீவன் தரப்பு கூறுவது குறிப்பிடத்தக்கது. கட்சியில் பிடிக்காத சில விஷமிகளின் வேலையாக இருக்கும் என அமைச்சர் கீதாஜீவன் தரப்பு விளக்கம் அளித்து வருவது இங்கு கவனிக்கத்தக்கது.