திமிங்கிலம் வாந்தி.. மதிப்பு ரூ.2 கோடி.. மடக்கிப் பிடித்த போலீசார்.. திருச்செந்தூரில் பரபரப்பு
தூத்துக்குடி: திமிங்கிலம் வாந்தி (ambergris) கடத்திச் சென்ற 6 பேர் கொண்ட கும்பலை தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் நகரில், காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அவர்களிடமிருந்து ரூ.2 கோடி மதிப்புள்ள திமிங்கிலம் வாந்தி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
திமிங்கிலத்தின் வாந்தியா, அதற்கு இவ்வளவு மதிப்பா என ஆச்சரியமாக இருக்கிறதா. விஷயம் இதுதான் பாருங்கள்:
ஸ்பெர்ம் திமிங்கிலங்கள்
ஸ்பெர்ம் திமிங்கிலங்கள் என்ற பெரிய தலை கொண்ட திமிங்கிலங்களின் குடல் பகுதியில் உற்பத்தியாகும் ஒரு மெழுகு சில நேரங்களில் அதனால் அப்படியே வெளியேற்றப்படுவது வழக்கம். இந்த திரவம், அப்படியே மிதந்து வந்து கடலோரங்களில் ஒதுங்குவது வாடிக்கை. திமிங்கிலம் வெளியேற்றும் மெழுகு என்பதால், இதை திமிங்கிலத்தின் வாந்தி என்றும் அழைப்பார்கள்.
வாசனை திரவியங்கள்
இந்த மெழுகு, விலை உயர்ந்த வாசனை திரவியங்கள் தயாரிப்பில் மூலப் பொருளாக பயன்படுத்தப்படுகிறது. மருத்துவ பொருட்கள் உற்பத்தியிலும் பயன்படுத்தப்படுகிறது. எனவேதான் இதற்கு சர்வதேச சந்தையில் நல்ல விலை உள்ளது.
கள்ளச் சந்தை
அதேநேரம், அரசுக்கு தெரியாமல் இந்த திரவத்தை சேகரித்து, கள்ளச் சந்தையில் விற்பனை செய்து பல கோடி லாபம் பார்க்கிறார்கள். இதேபோலத்தான், இன்று திருச்செந்தூர் போலீசாருக்கும் ஒரு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. விலை உயர்ந்த பொருள் ஒன்று திருச்செந்தூர் வழியாக கடத்தப்படுவதாக அவர்களுக்கு தகவல் கிடைத்தது.
திருச்செந்தூர் போலீசார்
இதையடுத்து திருச்செந்தூர் போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தினர். தாலுகா ஆபீஸ் அருகே போலீசார் வாகன சோதனை நடத்தியபோது, சந்தேகத்திற்கு இடமான ஒரு காரை போலீசார் பிடித்து சோதனையிட்டனர். அப்போது அதில் மெழுகு போன்ற பொருளை பையில் மறைந்து வைத்திருப்பது தெரியவந்தது. அதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் கிடைத்தது.
திமிங்கில மெழுகு
இது திமிங்கலம் வாயிலிருந்து உமிழக்கூடிய அம்பர்கிரிஸ் என்பது தெரியவந்தது. இது தொடர்பாக காரில் வந்த 6 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் தஞ்சாவூர் மாவட்டம் பாளையம்பட்டி வடக்கு தெரு இளங்கோவன்(52), விருதுநகர் மாவட்டம் அருப்புகோட்டை செங்குளம் வாமபுரம் ராம்குமார்(27), நாகப்பட்டணம் ஆலியூர் வடக்கு தெரு முஹம்மது அஸ்லம்(33), திருச்சி அரியமங்கலம் திருமகள் தெரு ராஜா முஹம்மது(34), தஞ்சாவூர் யாகப்பநகர் 4வது குறுக்கு நர்மதை தெரு வெங்கடேஷ்(48), அதே ஊரைச் சேர்ந்த புதுக்கோட்டை ரோட்டை சேர்ந்த ஜான்பிரிட்டோ(48) என்பது தெரியவந்தது.
இலங்கை கடத்த திட்டம்
இவர்கள் திமிங்கிலத்தின் அம்பர்கிரிஸ் என சொல்ல அந்த மெழுகை இங்கிருந்து இலங்கை கடத்தி சென்று அங்கிருந்து இந்தோனேசியா, இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கு கொண்டு செல்லப்பட இருந்தது தெரியவந்தது. இதன் சர்வதேச மதிப்பு ரூ.2 கோடி ஆகும்.
பிடிப்பட்ட 2 கிலோ எடையுள்ள ஆம்பர் கிரிஸ் மற்றும் 6 பேர், அவர்கள் வந்த காரையும் திருச்செந்தூர் போலீசார், திருச்செந்தூர் வனத்துறையினரிடம் ஒப்படைந்தனர்.