நான் தவறாக பேசவில்லை... பகிரங்க மன்னிப்பு கேட்கவும் ரெடி.. ஆவேசப்பட்ட துரைமுருகன்..ஏன் என்னாச்சு?
இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுகவுக்கும் அதன் கூட்டணி கட்சிகளுக்கும் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது என்று துரைமுருகன் கூறியுள்ளார்.
வேலூர்: வாணியம்பாடியில் தேர்தல் பிரச்சாரத்தின் போது இஸ்லாமியர்கள், இந்துக்கள் பற்றி நான் தவறாக எதுவும் பேசவில்லை. அப்படி நான் பேசியதாக நிரூபிக்கப்பட்டால் பகிரங்க மன்னிப்புக் கேட்பேன் என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கூறியுள்ளார்.
Recommended Video
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சின்னச் சின்ன சலசலப்புகள் தவிர அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. விஜபிக்கள், அரசியல் கட்சித்தலைவர்கள் வந்து வாக்களித்து ஜனநாயகக் கடமையாற்றியுள்ளனர்.
வேலூர் மாநகராட்சி காட்பாடி டான் போஸ்கோ பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது மகன் கதிர் ஆனந்த் எம்.பி. வாக்களித்தனர். வாக்களித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துரைமுருகன், இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுகவுக்கும் அதன் கூட்டணி கட்சிகளுக்கும் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக கூறினார்.

எதிர்கட்சிகளுக்கு தோல்வி பயம்
திமுக பணப்பட்டுவாடா மற்றும் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டி வருவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். கோவையில் எஸ் பி வேலுமணி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது குறித்தும் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த துரைமுருகன், இந்த தேர்தலில் எதிர்க்கட்சிகள் தோல்வி பயத்தால் கலாட்டாவில் ஈடுபட்டு வருகின்றார்கள். ஆனால் தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சி, நகராட்சிகளில் முக்கிய பொறுப்புகளை திமுக கைப்பற்றும் என்று கூறினார்.

பகிரங்க மன்னிப்பு கேட்பேன்
வாணியம்பாடியில் நடைபெற்ற பிரச்சாரத்தில் பேசிய போது, திமுகவுக்கு எதிராக வாக்களித்தால். இன்னும் நான்கு வருடங்கள் இருக்கிறது. நான்கு வருடங்களுக்கு எந்த உதவியும் கிடைக்காமல் போகும் என்று துரைமுருகன் எச்சரித்து பேசியதாக செய்திகள் வெளியாகின. இது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த துரைமுருகன், இஸ்லாமியர்கள், இந்துக்கள் பற்றி நான் தவறாக எதுவும் பேசவில்லை. அப்படி நான் பேசியதாக நிரூபிக்கப்பட்டால் பகிரங்க மன்னிப்புக் கேட்பேன் என்றார் துரைமுருகன்.

வாணியம்பாடியில் பிரச்சாரம்
கடந்த 14ஆம் தேதி வாணியம்பாடியில் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய துரைமுருகன், நான் இந்த வாணியம்பாடியின் மண்ணின் மைந்தன் என்று பலரும் சொன்னார்கள். ஆனால் மண்ணின் மைந்தன் என்று என்னை சொல்வதை விட கதிர் ஆனந்தை தான் சொல்ல வேண்டும். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வேலூர் மக்களவைத் தொகுதியில் கதிர் ஆனந்தை காப்பாற்றியது வாணியம்பாடி மண்தான். அவரை ஜெயிக்க வைத்தது வாணியம்பாடி தான். அவர்தான் வாணியம்பாடியின் மண்ணின் மைந்தர் என்றார்.

பட்ஜெட்டில் நிறைவேற்றுவோம்
திமுக ஆட்சி அமைத்து 9 மாதங்களாகின்றன.7 மாதங்கள் கொரோனாவை கட்டுப்படுத்துவதில் போய்விட்டது. இரண்டு மாதங்கள் வெள்ளத்தடுப்பு பணிகளில் போய்விட்டது. இந்த காலங்களில் தேர்தலில் கொடுத்த பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறோம். மேலும் பல வாக்குறுதிகளை வரும் பட்ஜெட்டில் நிறைவேற்றுவோம் என்று கூறினார்.

வாணியம்பாடி புறக்கணிக்கப்படும்
அரசின் திட்டங்கள் உங்களை வந்து சேர வேண்டுமானால் கிணற்றிலிருந்து தண்ணீர் வயலுக்கு போக வேண்டுமானால், அதற்கு பம்ப் வேண்டும். வாய்க்கால் வேண்டும். அப்படித்தான் அரசாங்கம் எவ்வளவு செலவு செய்தாலும் அதை முறையாக உங்களுக்கு கொண்டுவர முனிசிபாலிட்டி கள் கவுன்சிலர்கள் இருக்கவேண்டும். அதற்காக நல்ல கவுன்சிலர்களை நீங்கள் உருவாக்கினால் இந்த வாணியம்பாடி சிறக்கும். ஏதோ தவறான எண்ணத்தில் சிலரை தேர்ந்தெடுப்பீர்களேயானால், ஐந்தாண்டு காலத்துக்கு இந்த வாணியம்பாடி நகர் புறக்கணிக்கப்படும் என்று எச்சரிக்கிறேன் என்று கூறினார்.












Click it and Unblock the Notifications