அடுத்த தேர்தலிலும் பாமக தனித்துப் போட்டியிடும் - அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு!
விழுப்புரம்: அடுத்துவரக்கூடிய தேர்தலிலும் பாமக தனித்துப் போட்டியிடும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சித் தேர்தல் இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது வாக்கினை பதிவு செய்தபின் செய்தியாளர்களை சந்தித்தார்.

அன்புமணி ராமதாஸ்
அன்புமணி ராமதாஸ் கூறுகையில், ''6 ஆண்டுகளுக்கு பிறகு நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. எப்போதும் இல்லாத அளவுக்கு தமிழகத்தில் பெரிய அளவில் பணப்பட்டுவாடா நடக்கிறது. இது ஜனநாயக கேளி கூத்து. ஆளும் கட்சியினர், எதிர் கட்சியினர் பாமக உள்பட பலரையும் மிரட்டி வாபஸ் பெற வைத்துள்ளனர். இனி வரும் காலங்களில் கட்சி சின்னங்களை வைத்து தேர்தல் நடைபெற கூடாது. சுயேட்சையாக வேட்பாளர்கள் போட்டியிட வேண்டும்.

வெளிப்படையான தேர்தல்
நகராட்சி, மேயர் தேர்தல்கள் வெளிப்படையாக நடைபெற வேண்டும். மாறாக மறைமுகமாக நடைபெறுவதால் குதிரை பேரம் நடக்கும். மேலும், பணப்பட்டுவாடா குறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதேபோல், காவல் துறையும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை.
பணத்தை பெற்றுக்கொண்டு வாக்களித்தால், தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள் எதுவும் செய்ய மாட்டார்கள். இதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

தனித்துப் போட்டி
அடுத்து வரக்கூடிய தேர்தல்களிலும் பாமக தனித்து போட்டியிடும். தேர்தலுக்கு முன் திமுக கொடுத்த வாக்குறுதிகளை எதையும் நிறைவேற்றவில்லை என மக்கள் கூறுகின்றனர். நீட் தேர்வை ரத்து செய்வோம் என கூறிய திமுக அதனை நிறைவேற்றவில்லை. தமிழகத்தில் மட்டும் தான் நீட் தேர்வால் 50க்கும் அதிகமான மாணவர்கள்உயிரிழந்துள்ளனர்'' என்று தெரிவித்துள்ளார்.

பாமக
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பல முனை போட்டி நடக்கிறது. திமுகவைப் பொருத்தவரை மக்களவை மற்றும் சட்டசபைத் தேர்தல்களில் இருந்தே அதே கூட்டணி தொடர்கிறது. அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட பாமக, பாஜக இந்த முறை தனித்துக் களமிறங்குகிறது. தமிழ்நாடு முழுவதும் பாமக சார்பில் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.












Click it and Unblock the Notifications