வேற லெவல் ஸ்ட்ரேடஜி.. கைக்கு எட்டுனது வாய்க்கு எட்டாதோ.. கலக்கத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் வேட்பாளர்கள்
சொந்தக் கட்சியினரே தங்கள் வேட்பாளர்கள் வெற்றி பெறக் கூடாது என ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ளடி வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்களாம்.
விருதுநகர்: சொந்த கட்சி மற்றும் கூட்டணியினரே வஞ்சமில்லாமல் உள்ளடி வேலைகளில் ஈடுபட்டு வருவதால், ஸ்ரீவில்லிபுத்தூரில் காங்., மற்றும் அதிமுக வேட்பாளர்கள் செம கலக்கத்தில் இருக்கிறார்களாம்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் கோபுரம் தான் தமிழ்நாடு அரசின் சின்னம். எனவே இந்த தொகுதி எப்போதுமே முக்கியத்துவம் வாய்ந்ததாகவே இருக்கிறது.
ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியை பொறுத்த வரை ஆரம்ப காலத்தில் இத்தொகுதி காங்கிரஸ் வசம் தான் இருந்தது. 1967ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் முதன் முறையாக திமுக வெற்றி பெற்றது. அதன் பிறகு நடைபெற்ற 1971ம் ஆண்டு தேர்தலிலும் திமுக தான் வெற்றி பெற்றது.
தாமரைக்கனியின் வெற்றிக்கனி
1977ம் ஆண்டும் நடைபெற்ற தேர்தலில் அதிமுகவின் தாமரைக்கனி முதல் முறையாக வெற்றி பெற்றார். அதன் பிறகு இத்தொகுதி அதிமுகவின் கோட்டையாக மாறியது. 1980, 1984 ஆகிய தேர்தல்களிலும் அதிமுகவின் தாமரைக்கனியே வென்றார்.
திமுக வசம்
சுமார் ஏழாண்டுகள் கழித்து 1989ம் ஆண்டு நடந்த தேர்தலில் ஸ்ரீவில்லிபுத்தூரை மீண்டும் கைப்பற்றியது திமுக. அக்கட்சியின் சார்பில் போட்டியிட்ட தங்கம் திமுகவுக்கு இந்த வெற்றியை தேடித்தந்தார். ஆனால் இந்த மகிழ்ச்சி இரண்டு ஆண்டுகள் கூட நீடிக்கவில்லை.
தொடர் வெற்றி
அடுத்து நடந்த 1991 தேர்தலில் ஸ்ரீவில்லிப்புத்தூர் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்ட தாமரைக்கனி மீண்டும் வெற்றி பெற்று தனது பலத்தை நிரூபித்தார். அதன் பிறகு 1996 தேர்தலில் மீண்டும் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் தாமரைக்கனி. அவரைத்தொடர்ந்து 2001ம் ஆண்டு தேர்தலிலும் அதிமுகவே வெற்றி பெற்றது. அப்போது அக்கட்சியின் சார்பில் வெற்றி பெற்றவர் தாமரைக்கனியின் மகன் இன்பதமிழன்.
கூட்டணிக் கட்சிகள்
2006 மற்றும் 2011 தேர்தல்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் ஸ்ரீவில்லிபுத்தூரில் வெற்றி பெற்றனர். இதில் 2006ம் ஆண்டு அவர்கள் திமுக கூட்டணியிலும், 2011ம் ஆண்டு அதிமுக கூட்டணியிலும் அங்கம் வகித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
வீணாய்ப் போன நம்பிக்கை
இதன் பிறகு கடந்த 2016ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட சந்திரபிரபா வெற்றி பெற்றார். கடந்த ஐந்தாண்டுகளில் தொகுதி முழுவதும் சுறுசுறுவென வலம் வந்த சந்திரபிரபா, ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து கொடுத்துள்ளார். எனவே தனக்கு தான் சீட் கிடைக்கும் என நம்பிக்கையாக இருந்தவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
மான்ராஜுக்கு வாய்ப்பு
2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் களம் காண எம்ஜிஆர் இளைஞர் அணியின் ஸ்ரீவில்லிபுத்தூர் செயலாளர் மான்ராஜ்க்கு வாய்ப்பு வழங்கி இருக்கிறார்கள் ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும். இதனால் கடும் அதிருப்தியில் இருக்கிறார்களாம் சந்திரபிரபா அணியினர். இந்த முறை மான்ராஜ் ஜெயித்தால் அடுத்த தேர்தலில் மீண்டும் தங்களுக்கு சீட் கிடைப்பது எட்டாக்கனியாகி விடும் என்ற பயமாம். இதனாலேயே தீவிரமாக களப்பணியாற்றவில்லை எனக் கூறப்படுகிறது.
கேள்விக்குறி
மறுபுறம் மான்ராஜை பொறுத்தவரை தற்போது தான் அவருக்கு அரசியலில் பெரிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது. பெரிய அளவில் பணபலம் படைத்தவர் இல்லை என்பதால் அவரால் பெரிய அளவில் செலவு செய்ய முடியாது. தொகுதியைப் பொறுத்தவரை உட்கட்சியிலும் சந்திரபிரபா அணியினரிடம் எதிர்பார்த்த ஆதரவு இல்லாததால், மான்ராஜ் வெற்றி பெற்றால் அதன் பின்னணியில் திமுகவின் உள்ளடி வேலைகள் இருக்கலாம் என அதிர்ச்சித் தகவலைக் கூறுகிறார்கள் அப்பகுதி மக்கள்.
வேறு மாதிரி கணக்கு
காரணம் மான்ராஜை எதிர்த்து திமுக கூட்டணியின் சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் மிகப்பெரிய செல்வந்தர். எனவே கொடுக்க வேண்டியதை கொடுத்து எப்படியும் ஜெயித்து விடலாம் என கணக்கு போட்டுக் கொண்டிருக்கிறார். ஆனால் கூட்டணி கட்சியான திமுகவினரோ வேறு ஒரு கணக்கு போட்டுக்கொண்டு இருக்கிறார்களாம்.
அப்செட்டில் திமுக
இந்த முறை ஸ்ரீவில்லிபுத்துரில் எப்படியாவது நின்று வெற்றி பெற்று அமைச்சராகிவிட வேண்டும் என ஒரு சில திமுக புள்ளிகள் கணக்கு போட்டுக்கொண்டிந்தனராம். ஆனால் தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு கொடுத்துவிட்டதால் அவர்கள் செம அப்செட்டாம். இதனால் மும்முரமாக தேர்தல் வேலை செய்வதில்லையாம். கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மட்டுமே காங்கிரஸ் வேட்பாளருக்காக அல்லும் பகலும் உழைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
தொகுதி பயம்
இது ஒருபுறம் இருக்க, காங்கிரஸ் வேட்பாளரை எப்படியாவது தோற்கடித்தாக வேண்டும் என கூட்டணி கட்சியை சேர்ந்த சிலரே வேலைப்பார்த்து வருகிறார்களாம். இம்முறை காங்கிரஸ் ஜெயித்துவிட்டால், அடுத்த முறையும் அக்கட்சிக்கே தொகுதி போய்விடும் என்ற பதற்றமே இதற்கு காரணமாம்.
யாருக்கு பாதகம்?
அமமுக சார்பில் போட்டியிடும் சங்கீதப்ரியா பிரிக்கும் வாக்குகள் மட்டுமின்றி, மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் ஓய்வுபெற்ற நீதிபதி குருவைய்யா, நாம் தமிழர் கட்சியின் அபிநயா ஆகியோர் வாங்கும் வாக்குகளும் அதிமுக வேட்பாளர் மான்ராஜ்க்கு பாதமாக அமையும். ஆனாலும் அங்கு திமுகவினருக்குள் இருக்கும் மந்தநிலை, மான்ராஜுக்கு சாதகமாகும் வாய்ப்புகள் அதிகம்.
ஆச்சர்யப்படுவதற்கில்லை
எனவே எதிரணியினரின் உள்ளடி வேலைகளின் காரணமாக ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியை மீண்டும் அதிமுக கைப்பற்றினாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். சுருக்கமாகச் சொல்வதென்றால் அதிகம் உழைக்காவிட்டாலும் எதிர்க்கட்சியினரே வெற்றியைக் கனியைப் பறித்து மான்ராஜ் கையில் கொடுத்து விடுவார்கள் என்கிறார்கள்.