மக்களை பிரித்தாளும் அதிபராக இருக்க மாட்டேன்- அனைவரையும் அரவணைத்து செல்வேன்: ஜோ பிடன்
வாஷிங்டன்: அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் தாம் மக்களை பிரித்தாளும் அதிபராக இல்லாமல் அனைவரையும் அரவணைத்து செல்வேன் என ஜோ பிடன் உறுதியளித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார் ஜோ பிடன். அவரது வெற்றியை ஆதரவாளர்கள் கொண்டாடி வருகின்றனர். துணை அதிபராக தமிழரான கமலா ஹாரிஸ் தேர்வாகி உள்ளார்.
இருவரும் அமெரிக்க மக்களுக்கு பெரும் ஆரவாரங்களுக்கு இடையே நேரடியாக இன்று உரையாற்றினார். முதலில் உரையாற்றிய துணை அதிபர் கமலா ஹாரிஸ், ஜோ பிடனுக்கு புகழாரம் சூட்டி அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் ஜோ பிடன் பேசியதாவது:
அமெரிக்காவின் முதல் தமிழ் துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கு மு.க.ஸ்டாலின், சோனியா, ராகுல் காந்தி வாழ்த்து
அமெரிக்கர்களிடம் நம்பிக்கை
அமெரிக்கர்கள் தங்களது வாக்குகள் மூலம் தெளிவான முடிவை அளித்துள்ளனர். நான் அதிபராக தேர்வு செய்யப்பட்டதன் மூலம் அமெரிக்கர்களிடம் புதிய நம்பிக்கை பிறந்துள்ளது. அனைத்து தரப்பு மக்கள் நலனுக்காகவும் நான் பாடுபடுவேன்.
கமலா ஹாரிஸுக்கு பாராட்டு
அமெரிக்காவின் முதுகெலும்பாக இருக்கும் நடுத்தர மக்களின் நலனுக்காக பாடுபடுவேன். துணை அதிபராக தேர்வாகி உள்ள கமலா ஹாரிஸ் சிறப்பாக செயல்படுவார். தெற்காசியாவில் இருந்து குடிபெயர்ந்து அமெரிக்காவில் உயர் பதவியை அடைந்துள்ளார் கமலா ஹாரிஸ்.
வாக்களிக்காதோர் எதிரிகள் அல்ல
எனது குடும்பத்தின் அன்பு, ஆதரவு இல்லாமல் இந்த நிலைக்கு வந்திருக்கமுடியாது. கொரோனா தொற்று காலத்தில் பெருந்திரளாக வாக்களித்த மக்களுக்கு நன்றி. கருப்பின மக்கள் உட்பட அனைத்து தரப்பினரையும் அரவணைத்து செல்வோம். டிரம்ப்புக்கு வாக்களித்தவர்கள் எனக்கு எதிரிகள் அல்ல. அவர்களும் அமெரிக்கர்கள்தான். அவர்கள் நலனுக்கும் பாடுபடுவேன்.
கொரோனா ஒழிப்பு
ஒரு அதிபராக ப்ளூ ஸ்டேட்ஸ், ரெட் ஸ்டேட்ஸ் என பார்க்காமல் யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆப் அமெரிக்கா என்றுதான் பார்ப்பேன். கொரோனா பெருந்தொற்றை ஒழிக்கும் வரை நமது தேசத்தின் பொருளாதாரத்தை சீரமைக்க முடியாது என்பதை உணர்ந்திருக்கிறோம்.
அமைதிநிலவ பாடுபடுவோம்
சர்வதேச அளவில் அமெரிக்காவின் நற்பெயரை உயர்த்துவோம். உலக நாடுகளில் அமைதி நிலவ பாடுபடுவேன். அமெரிக்காவில் அடுத்து என்ன நடக்கும் என்பதை உலகம் உன்னிப்பாக கவனித்து வருகிறது. இவ்வாறு ஜோ பிடன் உரையாற்றினார்.