மீண்டும் மீண்டும் சிக்கல்.. நாசாவின் ஆர்ட்டெமிஸ் ராக்கெட் ஏவுவது.. 2ஆவது முறையாக தள்ளிவைப்பு!
வாஷிங்டன்: நாசாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆர்ட்டெமிஸ் ராக்கெட்டின் லான்ச் இரண்டாவது முறையாகக் கடைசி நேரத்தில் தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.
உலகெங்கும் விண்வெளி குறித்த ஆய்வுகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விண்வெளி ஆய்வில் முன்னோடி என்று நாம் நாசாவை சொல்லலாம்.
விண்வெளியில் நிலவு தொடங்கி பல்வேறு விஷயங்கள் குறித்தும் நாசா மிக விரிவான ஆய்வுகளை மேற்கொண்டு இருக்கிறது. ஏற்கனவே 1969இல் நாசா மனிதர்களை நிலவுக்கு அனுப்பி சாதனை படைத்து இருந்தது.
ரெடியான நாசா.. மீண்டும் நிலவில் மனிதன்! 53 ஆண்டு கழித்து நடக்கும் அதிசயம் - இன்று பாயும் ராக்கெட்
ஆர்ட்டெமிஸ்-1 ராக்கெட்
இந்தச் சூழலில் சுமார் 50 ஆண்டுகளுக்குப் பின்னர் அதே விஷயத்தை நாசா கையில் எடுத்துள்ளது. மீண்டும் மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் முயற்சியில் இறங்கி உள்ள நாசா, இதற்காகப் பலகட்ட சோதனைகளில் ஈடுபட்டு வருகிறது. முதற்கட்டமாகச் சந்திரனுக்கு மனிதனை அனுப்பும் ஆர்ட்டெமிஸ்-1 ராக்கெட் சோதனை கடந்த வாரம் நடைபெறுவதாக இருந்தது. நிலவு குறித்த ஆய்வில் இது முக்கியமானதாகப் பார்க்கப்பட்டது.
முதற்கட்ட சோதனை
குறிப்பாக மனிதர்களை மீண்டும் நிலவுக்கு அழைத்துச் செல்வதில் இது முதல் படியாக இருக்கும் எனக் கூறப்பட்டது. அனைத்து சோதனைகளும் வெற்றிகரமாக நடந்து முடிந்தால் வரும் 2025ஆம் ஆண்டிற்குள் மனிதர்களை மீண்டும் நிலவுக்கு அழைத்துச் செல்ல முடியும். இருப்பினும், கடந்த வாரமே நடக்க இருந்த முதற்கட்ட சோதனை கடைசி நிமிடத்தில் கைவிடப்பட்டது. திரவ ஹைட்ரஜனையும் திர ஆக்சிஜனையும் இணைக்கும் பகுதியில் ஏற்பட்ட விரிசல் காரணமாக ராக்கெட் லான்ச் தள்ளி வைக்கப்பட்டது.
கைவிடப்பட்டது
இந்தச் சூழலில் இரண்டாவது முறையாக இன்று அந்த ராக்கெட் சோதனை செய்யப்பட இருந்தது. இதற்கான கவுன்டவுன்கள் தொடங்கப்பட்டு, ராக்கெட் விண்ணில் சீறிப் பாய தயாராக இருந்தது. அப்போது ரக்கெட் புறப்படக் கொஞ்ச நேரம் மட்டுமே இருந்த நிலையில், ராக்கெட் லான்ச் இரண்டாவது முறையாகக் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ராக்கெட்டில் கண்டறியப்பட்ட எரிபொருள் கசிவே இதற்குக் காரணம் எனக் கூறப்பட்டது.
என்ன காரணம்
ராக்கெட்டின் அடிப்பகுதிக்கு அருகில் குளிர்ந்த நிலையில் இருக்கும் திரவ ஹைட்ரஜன் உள்ள பகுதியில் ஏற்பட்ட கசிவே ராக்கெட் லான்ச் கைவிடக் காரணம் ஆகும். இதைச் சரி செய்யும் பணிகளில் நாசா பொறியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஆர்ட்டெமிஸ்-1 ராக்கெட் சோதனை வரலாற்றுச் சிறப்புமிக்க சோதனையாகப் பார்க்கப்படுகிறது. இதை நேரில் காணப் பல ஆயிரம் பேர் கூடி இருந்தனர்.
அடுத்த சோதனை எப்போது
ராக்கெட் சோதனை நடைபெறாமல் போனதால் அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். அதேநேரம், அடுத்து இந்த ராக்கெட் மீண்டும் எப்போது விண்வெளியில் ஏவப்படும் என்பது குறித்த நாசா எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. இருப்பினும், திங்கள் அல்லது செவ்வாய்க்கிழமைக்குள் மீண்டும் ராக்கெட் சோதனை நடைபெறலாம் என்று கூறப்படுகிறது.