டேக் ஆப் செய்யும் போது 'டிரக்' மீது மோதி விபத்து.. தீப்பிடித்த விமானம்.. பதறிய பயணிகள்! 2 பேர் பலி
வாஷிங்டன்: பெரு தலைநகர் லிமா நகரில் விமானம் டேக் ஆப் செய்யும் போது ஓடுபாதையில் நிறுத்தப்பட்டு இருந்த தீ அணைப்பு வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது. அதோடு விமானமும் தீப்பிடித்ததால் கரும்புகை கிளம்பியதால் விமான நிலையத்தில் பெரும் பீதியும் பரபரப்பும் ஏற்பட்டது. இந்த விபத்தில் தீ அணைப்பு வீரர்கள் 2 பேர் பலியாகினர்.
தென் அமெரிக்க நாடுகளில் ஒன்று பெருவின் பெரு தலைநகர் லிமாவில் இருந்து ஜூலைகா நகருக்கு LATAM Peru என்ற நிறுவனத்திற்கு சொந்தமான எல்.ஏ 2213 என்ற விமானம் புறப்பட தயாராக இருந்தது.
விமானத்தில் 102 பயணிகளும் 6 விமான சிப்பந்திகளும் இருந்தனர். விமானம் புறப்படுவதற்கு தயாராக டேக் ஆப் செய்ய ஓடுபாதையில் சீறிப்பாயத் தொடங்கியது.
டிரக் மீது மோதிய விமானம்
அப்போது அவசரகால தேவைக்காக ஓடுபாதை பகுதியில் நிறுத்தப்பட்டு இருந்த டிரக் மீது விமானம் மோதியது. இந்த விபத்தில் ஒரு நிமிடம் குலுங்கிய விமானம் தொடர்ந்து ஓடுபாதையில் தீப்பிளம்புகளை கிளப்பிய படி சிறிது தூரம் சென்றது. கரும்புகையும் வெளியேறியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. விமானத்தில் இருந்த பயணிகளும் அச்சத்தில் உறைந்தனர். சினிமா காட்சிகள் போல நடைபெற்ற இந்த சம்பவம் விமான நிலைய ஊழியர்களையும் பதற வைத்தது.
தீ அணைப்பு வீரர்கள் இருவர் பலி
அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் பயணிகள் யாருக்கும் பாதிப்பு ஏற்பட்டவில்லை. எனினும் தீ அணைப்பு வாகனத்தில் இருந்த இரண்டு தீ அணைப்பு வீரர்கள் பலியாகினர். இந்த விபத்து தொடர்பான காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உரிய நேரத்தில் விமானம் நிறுத்தப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதாக சமூகவலைத்தளத்தில் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.
சுகாதாரத்துறை விளக்கம்
இந்த விபத்தை அடுத்து விமான நிலையத்தின் அனைத்து செயல்பாடுகளும் உடனடியாக நிறுத்தப்பட்டது. இந்த விபத்து நேரிட்டதற்கான காரணம் குறித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக பெருநாட்டின் சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
61 பயணிகள் ஆஸ்பத்திரியில் அனுமதி
20 பயணிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இருவரின் உடல் நிலை மட்டும் சற்று அச்சப்படும் படி இருக்கிறது. பயணிகள் மற்றும் விமான சிப்பந்திகள் யாரும் பலியாகவில்லை" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், 61 பயணிகள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக மற்றொரு தகவலும் வெளியாகியுள்ளது.
காயம் காரணமாக அனுமதியா?
எனினும் காயம் காரணமாக அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்களா.. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்களா என்ற விவரங்கள் வெளியாகவில்லை. டேக் ஆப் செய்வதற்காக ஓடுபாதையில் சென்றுகொண்டிருந்த போது டிரக் மீது மோதி விமானம் விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.